Wednesday, January 19, 2005

நூல் விமர்சனம்:சினிமாவும் நானும்- இயக்குநர் மகேந்திரன்

எழுபதுகளின் கடைசி- தமிழ் திரையுலகின் பொற்காலம் என்பதை யாரும் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர் , சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் ஆதிக்கத்திலிருந்து கமல் , ரஜினி என அடுத்த தலைமுறைக்கு ஆதிக்கம் மாற்றப்பட்டது, செட்டுக்களுக்கு வெளியே, கிராமங்களும் திரைப்படக் கதைக் கலன்களாக மாறியது, பாரதிராஜா, மகேந்திரன் போன்ற புதிய இயக்குநர்கள் அடையாளங் காணப்பட்டது, வசனங்களின் சத்தத்தில் மூழ்கிக் கிடந்த திரைப்படங்கள் மெளனத்தின் அவசியத்தையும் உணர்ந்தது, இளையராஜா என்ற புதிய இசைமன்னனின் சாம்ராஜ்யம் விரிந்தது ஆகியவை இக்காலக்கட்டத்தில் நடந்தேறிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

தமிழக இயக்குநர்களில் மகேந்திரன் இயக்கிய படங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்றாலும், அதிலும் வெற்றி பெற்ற படங்கள் சொற்பமே என்றாலும், அந்த சொற்ப வெற்றிகளின் மூலமே பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் இவர்.வியாபார ரீதியாக மகேந்திரனுடைய சில திரைப்படங்கள் தோல்வியடைந்திருக்கலாமே தவிர படைப்பாளியாய் அவரது திறமையையோ,படமாக்கிய விதத்தையோ, பரிசோதனை முயற்சிகளையோ யாரும் குறை கூற முடியாது. ஒரு ஒளி ஊடகத்தின் சாத்தியக் கூறுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் அவருக்கிருந்த வேட்கை, கதைக் களன்களை செம்மைப்படுத்துவதில் அவருக்கிருந்த அக்கறை, வணிகத்திற்காக சமரசம் செய்துக்கொள்ள விரும்பாத வீம்பு , இவையெல்லாம் அவருடைய போற்றத்தக்க குணங்கள்.

திரை உலகத்தார் புத்தகம் எழுதினால் அதில் அவருடைய அனுபவங்களும், தனி மனித புகழ்ச்சிகளும் மேலோங்கி நிற்குமே தவிர, படைப்பாக்கமும், திரைப்படமும் முன்னிலைப்படுத்தப்படாது. சிவாஜி கணேசன் அவரது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஏ.வி.எம், சரவணன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஸ்ரீதரின் நினைவுத் தொடரை கல்கியில் படித்திருக்கிறேன். இவையெல்லாமே அனுபவக் குறிப்புக்களே தவிர திரைப்பட ஆக்கத்தின் பரிமாணங்களை முழுமையாக அலசியதில்லை.

அந்த வகையில் பார்க்கும் போது, வெறும் அனுபவக் குறிப்புக்களை மட்டுமே எழுதாமல் திரைப்பட ஆக்கத்தின் பல சிக்கல்களை, பரிமாணங்களை கதாசிரியன், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு நிலைகளிலிருந்து எழுதியிருக்கிறார் மகேந்திரன். அவரது அலசல் பிரம்மிப்பூட்டும் விதமாக இருக்கிறது.

இப்புத்தகத்தில் அவரது ஒவ்வொரு படமும் ஏன் ஓடியது ? அல்லது ஏன் ஓடவில்லை என்பதற்கான அலசலை இயக்குநர்களுக்கான Case study என்று தாராளமாகக் கூறலாம். "முள்ளும் மலரும்" படத்தை எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனைகள், தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையே நடந்த சண்டைகள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் இவையெல்லாமே வெற்றி என்பது சுலபமாக வருவதில்லை என்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றன.
கமலஹாசனுடன் இருந்த நட்பை ஆத்மார்த்தமாக நினைவு கூர்கிறார் மகேந்திரன். "முள்ளும் மலரும்" படம் முழுவதுமாக முடிந்த பின்பு, செந்தாழம் பூவில் பாட்டின் முதல் சரணம் மட்டும் எடுக்கப்படாமலிருந்திருக்கிறது. தயாரிப்பாளர் காசு கொடுக்கவில்லை. பாலு மகேந்திரா சண்டை போட்டுக் கொண்டு போய்விட்டார். படத்திலிருந்து இப்பாட்டே நீக்கப்ப்ட வேண்டிய நிலைமை. இத்தருணத்தில் கமல் தயாரிப்பாளர் வேணுசெட்டியாரிடம் பேசியிருக்கிறார். செட்டியார் பணம் தர மறுத்து விட்டார். கமல் காசு கொடுத்து, பாலு மகேந்திராவிடமும் சமரசம் செய்து வைக்க, இப்பாடலை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு கலைஞனின் தாகத்தை இன்னொரு கலைஞனால் மட்டுமே உணரமுடியும் என்பார்கள். கமலுக்கு மகேந்திரனின் தாகத்தை உணரமுடிந்தது, அப்படத்தில் அவர் நடிக்க விட்டாலும் கூட. இதற்கு உண்மையிலே பெரிய மனசு வேண்டும்.
கமலின் இவ்வுதவியை மறக்காது அவருக்காக ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார் மகேந்திரன். மகேந்திரனின் மற்றொரு சிறப்பம்சம்- நாவல்களை படமாக்கியது. இதைக் குறித்தும் பலரும் அறியாத தகவல்களை குறிப்பிட்டுள்ளார் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலக்கதை உமா சந்திரனுடையது. ஆனால் இக்கதை படித்தவர்கள் மட்டுமே அறிவார்கள்- இக்கதைக்கும் படத்திற்கும் படத்தின் சில கேரக்டர்களை தவிர வேறு சம்பந்தமில்லையென்பதை. ரஜினி நடித்த காளி கேரக்டர் உமா சந்திரன் நாவலின் பிரதான கேரக்டர் அல்ல. மகேந்திரன் இந்நாவலை படிக்கத் தொடங்கியிருக்கிறார். சில பக்கங்கள் படித்தவிடனேயே காளி கேரக்டர் அவருக்கு பிடித்திருக்கிறது. உடனேயே கதையை மூடிவைத்து விட்டு, காளி கேரக்டரையும் அண்ணன் தங்கை பாசத்தையும் பிரதானப் படுத்தி கதையை பின்னி விட்டார். முழுப்படமும் எடுத்த பின்னரே கதையை மீண்டும் படித்துள்ளார். உமா சந்திரன் நாவல் படி காளி புலி கடித்து கையை இழக்கிறான். கதையின் இறுதியில் காளியும் , மங்காவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதைப் ப்டமாக எடுத்திருந்தால் படுமோசமாக இருந்திருக்கும். இருந்த போதிலும் காளி என்ற கேரக்டருக்கான இன்ஸ்பிரேசனை தந்ததால் உமா சந்திரனை அக்னாலெட்ஜ் செய்திருக்கிறார் மகேந்திரன்.

இதைப் போலவே புதுமைப் பித்தனின் கதையில் வரும் ஒரு தந்தை கேரக்டரை வைத்து உருவாக்கப்பட்டது உதிரிப்பூக்கள். இப்படத்தைப் பற்றியும் ஒரு அத்தியாயம்எழுதியிருக்கிறார்.பூட்டாத பூட்டுக்கள் ஏன் ஓடவில்லை? என்பது அலசப்பட்டிருக்கிறது. கதையின் மாரலில் தனக்கு ஒப்புதலில்லை என்றும், ஓடிப்போன பெண், மீண்டும் புருசனுடன் சேர்வதை மக்கள் ஒப்புக் கொள்ள வில்லை என்றும் கூறியுள்ளார். இதைப் படிக்கும் போது தோல்விக்கான காரணங்களை மகேந்திரன் நேர்மையாக அலசவில்லை என்றுதான் படுகிறது. இப்படத்தை பொறுத்தவரை அவர் நடிக்கவைக்க நினைத்தது நசுருதின் சாவையும், சுமிதா படேலையும். சில காரணங்களால் அது இயலாமல் போய் மலையாள நடிகர் சோமனையும், உதிரிப் பூக்கள் படத்தில் நடித்த இன்னொரு நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இதைப் போன்றே "கை கொடுக்கும் கை" படத்திலும் ரேவதியை ரங்கநாத் ( வில்லன்) கற்பழிப்பது போல காட்சி வைத்ததை தான் கட்டாயத்தின் பேரில் செய்ய நேரிட்டதாக குறிப்பிடுகிறார். இதையும் என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. ரஜினியின் "தம்பிக்கு எந்த ஊரு?" படத்தின் பின்னால் இப்படம் வந்ததும், தன் மனைவியை கற்பழித்தவனை ரஜினி கொல்லாமல் விடுகிறாரே என்ற ரசிகனின் ஆதங்கமும்தான் படத்தை தோல்வியடைய செய்தது.

இளையராஜாவின் பங்களிப்பை பல அத்தியாயங்களில் சிலாய்கித்து குறிப்பிட்டுள்ளார் மகேந்திரன். ரஜினிகாந்தின் திறமை மேல் தான் வைத்த நம்பிக்கையயும், ரஜினியுடனான அனுபவங்களுக்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.ரஜினியின் நடிப்புத்திறனுக்கான சான்றாக விளங்கும் சொற்ப படங்கள் மகேந்திரனால் உருவாக்கப்பட்டது. இதற்காகவும் எனக்கு மகேந்திரனை பிடிக்கும். மகேந்திரனின் மலரும் நினைவுகளை தூர்த்ர்சனில் காண்பிப்பார்கள். ரஜினி நடித்த பல்வேறு நல்ல காட்சிகள் அதில் இடம் பெ ற்றிருக்கும்.

இப்புத்தகத்தின் முதல் அத்தியாயம் -சினிமாக் கனவு உள்ளவர்களுக்கான மகேந்திரனின் கடிதம். அத்தைப்பாட்டி அட்வைஸாக இல்லாமல் நிஜம் தெரிக்கும் ஆலோசனையாக இவர் எழுதியிருப்பது நரம்புகளை சிலிர்க்க வைைக்கிறது.ஆலோசனைகளையெல்லாம்சொல்லிவிட்டு,பிரபலாமாகவில்லையென்றால்அதில் தவறொன்றுமில்லை. திரைப்படமென்பது வாழ்க்கையின் ஓர் அங்கமே தவிர, வாழ்க்கையின் பல நல்லவிசயங்கள் திரைப்படத்திற்கு அப்பாற்பட்டுமிருக்கின்றன என முடிக்கிறார் பாருங்கள்.இந்த அத்தியாயத்தையே தனிப்பதிவாக இட வேண்டும், அப்போதுதான் இதன் மதிப்பு விளங்கும்.

சாசனம் படம் எடுத்த கசப்பான அனுபவங்கள், அதன் தயாரிப்பு செலவினங்களை கட்டுப்ப்டுத்த தெரியாத திறமையின்மை, என் எப் டி சியுடனான சண்டைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, சாசனம் என்றாவது வரும் என்ற நம்பிக்கையுடன் புத்தகத்தை முடிக்கிறார்.

திறமையிருந்த அளவு மேலாண்மைத் திறன் இல்லாதவர் மகேந்திரன், இதனால்தான் வணிகரீதியாக முழுமையாக பரிமளிக்க முடியவில்லை அவரால். அவர் குறிப்பிட்டுள்ள பல மேற்கோள்களிருந்து அவருக்கிருந்த படிப்புத்திறமை வெளிப்படுகிறது.

நல்ல திரைப்பட ரசிகர்களும், கலைஞர்களும் படிக்க வேண்டிய புத்தகம். ஒரே இரவில் படித்து முடித்தேன்.

No comments: