Thursday, June 16, 2005

தொடர்கதைகள் தந்த வாசிப்பனுபவம்

சமீபத்தில் சுஜாதா அவர்களை பார்த்து உரையாடிய போது "நல்லதொடர்கதைகள் தற்போது எங்கே வருகிறது? " என்று தன் ஆதங்கத்தைவெளிப்படுத்தினார்(கல்கியில் சுஜாதா ஒரு தொடர்கதை எழுதிகொண்டிருக்கிறார்). தொடர்கதைகளை வெளியிடுவதை வாரப்பத்திரிக்கைகள் கணிசமாக குறைத்துக் கொண்டு விட்டன. இதற்கான வியாபரகாரணங்களோ அல்லது வாசகர்களின் ரசனை குறித்த காரணங்களோ குறிப்பாகஏதும் உள்ளனவா என்பது தெரியவில்லை.இதற்கான காரணங்கள் குறித்து இதழியல்ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டனவா? அல்லது எழுத்தாளர்கள் தாமாகவே இவ்வகையான முயற்சிகளை குறைத்து கொண்டுவிட்டார்களா? இதைப் போன்ற பல கேள்விகள்மனதில் எழுகின்றன. பத்திரிக்கை உலக அனுபவம் மிக்க நண்பர்கள் இதைப்பற்றிய கருத்துக்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

கதை வடிவிலே சிறுகதை,தொடர்கதை -இவற்றுள் எது கடினம்? என்றகேள்வியை முன்பு யாரோ சுஜாதாவிடம் கேட்ட போது அவர் சிறுகதை என்று பதில் சொன்னதாக நினைவு.இதை மறுக்க முடியாது என்றாலும் நல்ல தொடர்கதைகள் அளித்த வாசிப்பனுபவமும் அலாதியானதுதான்.முப்பது வாரம் ஒரு தொடர்கதை வரும் பொழுது அந்த கதாபாத்திரங்களும் நம் வாழ்க்கையின் ஒரு பங்குதாரர்களாக மாறிப்போனதை நான் அனுபவித்திருக்கிறேன்.இவ்வாரம்என்ன நிகழும் என்ற ஆர்வத்தில் அதிகாலை எழுந்து பேப்பர்காரர் ஆனந்தவிகடன் தருவிப்பதற்காக காத்திருந்த அனுபவங்கள் எனக்கு உண்டு. இதைத் தவிர யார் புத்தகத்தை முதலில் படிப்பது என்று சகோதரர்களுடம் சண்டைபோட்டதும் உண்டு.( அனுபவங்களை எழுதுறாங்கப்பா- பிரசன்னா பல்லை கடிக்கிறார். எஸ்கேப்)

தொடர்கதை எழுதுவதற்கு ஒரு தனியான திட்டமிடல் வேண்டும். ஒருதொடர்கதையின் வெற்றியே இரு அத்தியாயங்களுக்கு இடையே இருக்கும் வார இடைவெளியில் வாசகனின் ஆர்வத்தை எவ்வளவு உயிரோட்டமாக வைத்திருக்கிறாம் என்பதில்தான் உள்ளது.சமீபத்தில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "சில நேரங்களில் சில மனிதர்கள்" மற்றும் சுஜாதாவின் " கனவுத்தொழிற்சாலை" ஆகிய இரு நாவல்களை படிக்க நேரிட்டது. சிலநேரங்களில்.. தொடர்கதையாக வந்த போது எந்த அளவு வாசகர் மத்தியில் ஒவ்வொரு வாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இவ்வாறான ஒரு கதையை தொடர்கதையாக படிக்கும் வாசிப்பனுபவத்தின் இழப்பை உணரமுடிகிறது. இவ்வாறாகத்தான் போகும் என யூகிக்க முடியாத கதை. மேலும் அத்தியாயங்களுக்கு இடையான வார இடைவெளி கதையின் கணபரிமாணங்களை கிரகித்து, பலமுறை ரசித்து படிக்கும் வாய்ப்பையும் தரும். இதே போல்தான் கனவுத் தொழிற்சாலை கதையும்,தொடர்கதையாக வரும்பொழுது படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது ( ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆனந்தவிகடனில் படம் பார்த்து , எழுத்துக் கூட்டி ஜோக் படிப்பதுடன் சரி).

தொடர்கதையாக எழுதும் போது வாசகர்களின் வரவேற்பும்,கருத்துக்களும் எழுத்தாளரின் கதைக்கலன்அமைப்பதற்கும்,சில கதாப்பாத்திரஙகளின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கோ/குறைப்பதற்கோ உதவி செய்யும் என நினைக்கிறேன்.இது எந்த அளவு உண்மை என்பதை எழுத்தாளர்களிடம்தான் கேட்கவேண்டும்.சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் -இரண்டாம் பாகம் தொடர்கதையாக வந்த போது மதுமிதாவை சாகடிக்காதீர்கள் என பல கடிதங்கள் வந்ததாக சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.சில நேரங்களில் சில மனிதர்களுக்கும் நிரம்ப வாசகர் கடிதங்கள் வந்ததாக ஜெயகாந்தன் முன்னுரையில்குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது மெகாசீரியலில் பின்பற்றப்படும் இழுவை உத்திகளை பயன்படுத்தி முன்பும் பல தொடர்கதைகள் எழுதப்பட்டன.சாண்டில்யனின் சரித்திரக் கதைகள் அனைத்திலும் சில அத்தியாயங்கள் கண்டிப்பாக குறைக்கப்பட்டிருக்கலாம். நண்பர் சுரேஸ் கண்ணன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களே ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் செயற்கையாக ஒரு சஸ்பென்ஸை உருவாக்கினார்கள் ( உதாரணம் --ஆ) என்ற குற்றச்சாட்டை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது ஓரளவு உண்மைதான்.

இவை அனைத்தையும் மீறி தொடர்கதைக்கான திட்டமிடலும், அதை நிறைவேற்றலும் தனிக்கலை என நினைக்கிறேன்.அதற்கான சிரமங்களை மேற்கொள்வதில் பயன்கள் பெரிதாக இல்லை என தற்போதைய எழுத்தாளர்கள் நினைத்திருக்கலாம். அல்லது எழுதப்படும் கதைகள் டீவி சீரியலாக மாற்றப்படும் சாத்தியங்களை மனதில் கொண்டு செயற்கையான திருப்பங்களை நிறைய வைத்து கதை எழுதிய தேவிபாலா போன்றவர்கள் வாசகர்களின் தொடர்கதை ஆர்வத்தை குறைத்துவிட்டார்கள் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

மணியன் அக்காலத்திலேயே தன்னுடைய தொடர்கதைகளுக்கு வித்தியாசமான "பில்டப்" கொடுத்தவர். "இதயம் பேசுகிறது" பத்திரிக்கையில் ஒரு தொடர்கதைக்கு கமல்-ஸ்ரீப்பிரியாவை மாடலாக வைத்து புகைப்படங்கள்வாரவாரம் வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து அடுத்த தொடர்கதைக்கு ரஜினி-ஸ்ரீதேவி. ரஜினி மாடலாக இருந்த கதை தலைப்பு நினைவில் இருக்கிறது -"என்றும் உன்னுடைய."

எனக்கு பிடித்த சில தொடர்கதைகளை இங்கே தருகிறேன்.

அது ஒரு நிலாக்காலம்- ஸ்டெல்லா புரூஸ் ( ஆ.வி)
என் இனிய இயந்திரா- சுஜாதா ( ஆ.வி)
வாய்மையே சில சமயம் வெல்லும்-சுஜாதா(ஆ.வி)
நிழல் யுத்தம்- பாலகுமாரன் ( கல்கி)
கருணைக் கொலை- சிவசங்கரி ( ஆ.வி)
ஒரு மனிதனின் கதை ( ஆ.வி)
துளசிதளம்-எண்டமூரி வீரேந்திரநாத் ( சாவி)
தொட்டால் தொடரும்- பட்டுக்கோட்டை பிராபகர்( ஆ.வி)
பிரியங்களுடன் நானே-பட்டுக்கோட்டை பிராபகர்(சாவி)
வேர்கள்- கிருஸ்ணமணி ( ஆ.வி)
காதலெனும் ஏணியிலே-பிரபஞ்சன்( ஆ.வி)
இன்னொரு பட்டாம்பூச்சி- மொழிபெயர்ப்பு நாவல்- ரா.கி ரங்கராஜன் (குமுதம்)
பம்பாய்க்கு பத்தாவது மைலில்- ராஜேஸ்குமார்( கல்கண்டு)
47 நாட்கள் -சிவசங்கரி ( இதயம் பேசுகிறது)
நிலா நிழல்- சுஜாதா- திணமணிக்கதிர்

இதைத் தவிர பல தொடர்கதைகளை பிற்காலத்தில் முழுநாவல் வடிவத்தில்படித்தேன்.

குறிப்பிடத்தக்கவை

உடல் பொருள் ஆனந்தி- ஜாவெர் சீதாராமன் - குமுதம்
கொலையுதிர்காலம்- சுஜாதா- குமுதம்.

நல்ல தொடர்கதைகளை படிப்பதற்கு இன்னும் ஆசை இருக்கிறது. யாராவதுஎழுதுங்கள் ப்ளீஸ்.


பின் குறிப்பு:கல்கியின் நாவல்களை பற்றி சொல்லவில்லை.ஏனெனில் அவைவிவாதத்திற்கப்பாற்பட்ட சாகாவரம் பெற்றவை.கல்கி பத்திரிக்கை ஒவ்வொருமுறை சர்குலேசன் ஏற்றவும் பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் மீண்டும் தொடர்கதையாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே

1 comment:

Sivaraj said...

நானும் இந்த கதைகள் பலவற்றையும் வாசித்துள்ளேன். நல்ல ஒரு பாகத்தை படித்துவிட்டு மேலும் கதையில் என்ன நடக்கும் என்று speculate செய்வதன் சுகமே அலாதி. இன்று தொல்லைக் காட்சியில் மெகா தொடர்கள் நல்ல தொடர்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டன. இணைய எழுத்தாளர்கள் யாரேனும் தொடர்கதை முயற்சியை தொடங்கலாமே?