Sunday, November 22, 2009

சந்திப்பு

இரைச்சல் நிரம்பிய
சிற்றுண்டிச் சாலையில்
நீண்ட நாட்கள் கழித்து
சந்தித்துக் கொண்டோம்.

நமக்குப் பிடித்த
இளையராஜா பாடலை
ஒலித்து அழைத்தது
உன் அலைபேசி.

என்னுடன் உணவருந்தி கொண்டிருப்பதாக
பதிலளிக்கிறாய் .
நீண்ட நாட்கள் கழித்து
உன் உச்சரிப்பில்
அழகாக இருக்கிறது
என் பெயர்.

பரஸ்பர நண்பர்களையும்
பரஸ்பர விரோதிகளையும்
பற்றி சிறு குறிப்பு வரைந்து கொண்டோம்
மசால் தோசையை
உண்டு கொண்டே.

எனக்கே மறந்து போன
என் பழைய கவிதை வரிகளை சொல்லி
என்னை அதிர வைத்தாய் நீ.

உனக்கு மறந்து போன
உன் கல்லூரி கால
வீட்டின் முகவரியை
சொல்லி
கணக்கை சரி செய்து கொண்டேன் நான்

இறுதியாக
அருந்திய சக்கரை இல்லாத காபியில்
சுவைத்தது
வாழ்க்கையின் சில நிமிடங்கள்

Saturday, November 21, 2009

யதார்த்தம்

எழுதுபவர்களைக் காட்டிலும்
எழுத விரும்புவர்களால்
நிறைந்திருக்கிறது
உலகம்

காதலிப்பவர்களைக் காட்டிலும்
காதலிக்க துடிப்பவர்களால்
உயிர்த்திருக்கிறது
காதல்

நேசிக்கப்படுவதைக் காட்டிலும்
நேசிக்கப்படுவோம்
என்ற நம்பிக்கையில்தான்
சுழல்கிறது வாழ்க்கை.

Sunday, November 15, 2009

நிகழ்வுகள்

இந்த வாரம் திருச்சி மற்றும் மதுரைக்கு தொழில்முறை சுற்றுப் பயணம். திருச்சி விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு மதுரையிலிருந்து சென்னை பஸ்ஸில் செல்லும்போது கேபிஎன் பஸ் நள்ளிரவு பணிரெண்டு மணிக்கு நிற்கும் சங்கீதாவில் சாப்பிட்டேன். இங்கு சிற்றுண்டி ந்ன்றாக இருக்கும். சாப்பாடு படு சுமார்.திருச்சியில் அஜந்தா என்ற பழைய ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு சாப்பாடு நன்றாக இருக்கும். இம்முறை ஹோட்டல் பெயரை மறந்து போனேன். கூட வந்த உள்ளூர்காரரோ சங்க்கிதாவில் சாப்பிடவே விருப்பப்பட்டார்.

சமயபுரம் கூட்டமில்லாமல் இருந்தது. நெடுஞ்சாலை பைபாஸ் போட்டபின்னால் பேருந்துகளும், லாரிகளும் சமயபுரம் உள்ளே வர வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.பல புரோட்டா கடைகள் கணிசமான வியாபாரம் இழந்துள்ளன.புதிய நெடுஞ்சாலைகள் கிராமங்களை கணிசமாக கண்ணிலிருந்து மறைத்து அடுத்த ஊருக்கு அழைத்து சென்று விடுகின்றன. அவ்வப்போது சைக்கிள்களை கையில் தூக்கி கொண்டு சாலைகளை கிராஸ் செய்யும் சாகச மனிதர்கள் கிராமங்களின் இருப்பை உணர்த்துகிறார்கள்.திண்டுக்கல்லிருந்து மதுரை வரும்போது இதை உணரமுடிந்தது.

மதுரை சுவரோட்டி கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்க முடியாத நகரம். இருப்பவனுக்கும், இறந்தவனுக்கும், மகிழ்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஏன் இறந்து போன ஜல்லிக்கட்டு மாட்டிற்கும் சுவரொட்டி ஒட்டும் நகரம்.மனித நேயத்தையும் தாண்டிய மாட்டு நேயம், இறந்து போன ஜல்லிக்கட்டு மாட்டிற்கு ஒட்டிய போஸ்டரில் தெரிகிறது. மற்றபடி பெரும்பாலான சுவரொட்டிகளிலும் அழகிரி மற்றும் அவருடைய குடும்பத்தார்.

கோவிலை சுற்றிய சாலைகள் அழகாக இருக்கின்றன. ஒருவழிப்பாதைகள் நெரிசலை குறைத்திருக்கறதா என்பது தெரியவில்லை. மதுரை விமான நிலையமும் விரிவாக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அழகிரி நேரடியாக வீட்டிற்கு போக தனிச்சாலை போடுவதாக சொல்கிறார்கள்.விமான நிலையத்தின் வெளியே உள்ள கடை ஒன்றில் அனைத்துக்கட்சி கொடிகளையும் விற்கிறார்கள். விமான நிலையத்தில் கட்சிக் கொடி விற்கும் ஒரே ஊர் மதுரையாகத்தான் இருக்க முடியும். வாழ்க மதுரை மக்களின் அரசியல் விழிப்புணர்வு.

டீலா நோ டீலா சன் குழுமத்தின் பல மொழி சானல்களில் பலரால் நடத்தப்படுகிறது. மூளைக்கு அதிக வேலை தேவைப்படாத நிகழ்ச்சி. நேற்று விளையாட வந்த பெண்மணி நன்றாக பாடினார். ஆனால் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆப்சன் தேவைப்பட்டது. படித்த முட்டாள்.

இப்போதெல்லாம மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொன்னால் சொன்னபடியே நடக்கிறது. சென்னயில் நேற்று முதல் சரியான மழை. நேற்று பிர்லா கோளரங்கம் சென்றிருந்தேன். முப்பரிமாண திரைக்காட்சி அருமை. அறிவியல் அரங்கத்தில் பல அமைப்பு மாதிரிகள் பணி செய்யவில்லை. அதை பராமரிக்க முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. பெரியார் அரங்கம் மட்டும் சுத்தமாக இருந்தது. மாண்வர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க பெரியார்
அரங்கம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா?



Tuesday, November 10, 2009

முக்கியமான, சுவாரஸ்யமற்ற அறிவிப்பு

இந்தியாவில் பெயரை மாற்றுவதைப் போல சுலபமாக சாத்தியப்படாத சங்கதி-செல்போன் சேவையாளரை மாற்றுவது. பலமுறை யோசித்து ஒத்தி வைத்த செயல்- நேற்று நிறைவேற்றி விட்டேன்.

நீண்டநாட்களாக வைத்திருந்த பிஎச் என் எல் கனெக்சனை நாய் குட்டி போல் தொடர்ந்து வரக்கூடிய வோடாபோன் கனக்சனுக்கு மாற்றி விட்டேன்.எப்படியோ செல்போன் வைத்தாலே நாய் பிழைப்புதான்.

முகம் தெரிந்த ,தெரியாத பல பேரிடம் சேமிக்கப் பட்டு இருக்கிறது பழைய எண். அனைவரிடமும் தெரிவிப்பது இயலாத காரியம். என்றாவது என்னை நினத்து பார்த்து, அன்பின் மிகுதியால் என்னுடன் அளவளாவ விரும்பும் நண்பர்களை ஏமாற்றக் கூடாது என்பதுதான் என் கவலை.( அப்படி யாராவது இருக்கிறார்களா என்பதை அறுதியிட்டு கூறமுடியவில்லை).

எனவே புதிய எண்ணை இங்கே தருகிறேன்.

91766 54897.


Thursday, December 27, 2007

மெல்போர்னில் திண்டாட்டம்

முதல்நாள் முடிவில் இருந்த மகிழ்ச்சியை காணாமல் போகச் செய்து விட்டார்கள் இந்திய ஆட்டக்காரர்கள். இத்தனைக்கும் ஆடுகளம் இந்திய ஆடுகளத்தைப் போலத்தான் இருந்தது. முகததை உடைக்கும் அளவு பந்து எகிறவில்லை. ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் துல்லியமாக பந்து வீசினார்கள்.ஆடுகளத்தின் உதவியின்றி, துல்லிய பந்து வீச்சின் மூலமே வீழ்த்தி விடக்கூடிய பரிதாம நிலையில்தான் இந்தியா தற்போது இருக்கிறது.

இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு அடிகோலியவர் திராவிட்தான்.அவர் ஆடிய அதீத தற்காப்பு ஆட்டம் இந்தியாவிற்கு எந்த பலனையும் தரவில்லை. முதல் நாற்பது பந்துகள் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. திராவிடின் இந்த ஆட்டத்திற்கு பின்னால் ஒரு திட்டமோ, உத்தியோ இல்லை. சரியான பயந்தாங்கொள்ளி ஆட்டம். ஒரு கட்டத்திற்கு மேல் ஒற்றை ரன்கள் குவிப்பதற்காவது முயற்சித்திருக்க வேண்டும். எதுவும் செய்யாது ஐந்து ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது திராவிட் இவ்வாறு அதீத தற்காப்புடன் ஆடி,சோபிக்காமல் போனார். 2004 ல் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இம்முறை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

அதன் பின்பு டெண்டுல்கர் சிறப்பாக ஆடினாலும், ஆஸி பவுலர்களின் தன்னம்பிக்கை மலைபோல் பெருகிவிட்டது. அவர்களின் வலைபின்னலுக்கு சுலபமாக பலியாகிவிட்டார்கள்.திராவிடைக் காட்டிலும் அதிகம் சொதப்பியது யுவராஜ். இவரை அணியில் சேர்க்க திராவிடை ஓப்பன் செய்ய வைத்தார்கள். திராவிடின் சொதப்பலை, இவர் அடித்து ஈடு செய்வார் என்றால் இவர் அடித்ததோ முட்டை.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கான ஆஸி பவுலர்களின் திட்டங்கள், துல்லிய்மாக பணி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவிற்கு மிகவும் கலக்கம் தரும் செய்தி.இதனை முறியடிக்க, அதிரடியாக ஆடும் சேவாக் போன்ற ஆட்டக்காரர் தேவை. சென்ற முறை ஆஸி பவுலர்களை அவரது அதிரடி ஆட்டம் கலங்கவைத்தது. இம்முறை "குழி தோண்டி வை. நானே வந்து குதிக்கிறேன்" என்னும் வகையில் இருக்கிறது நம்மவர்களின் ஆட்டம்.

இரண்டாவது நாள் இறுதியிலே 171 ரன்கள் முண்ணனி. என்னுடைய கணிப்பு ஆஸி அணி 500 க்கும் மேலான முண்ணனியை பெறும். பாண்டிங் சதம் அடிப்பார்.

Monday, August 14, 2006

உறவுகள் (அல்லது) பூச்சி

மழைக்கால பின்னிரவில்
சரியாக மூட இயலா
சன்னல் கதவின் வழியேவந்தது
பெயர் தெரியா பூச்சி ஒன்று.

டிவியின் ஒளிர் திரையின்
மூலையில் அமர்ந்து கொண்டது
மெளனமாக.

நடுவில் அமர்ந்து
நான் பார்ப்பதை கெடுக்காமல்.

அருகில் சென்று அடித்திருக்கலாம்.
மூலையில்தானே இருக்கிறது என விட்டு விட்டேன்.

தினமும் இரவுகளில்
வரத்துவங்கியது அது.

அதன் பின்பு அதனுடன்
விளையாடத் தோன்றிற்று.
டிவியின் சத்தத்தை
அதிகரித்துப் பார்த்தேன்
அது பயப்பட்டு பறக்கிறதா என்று

அதிர்ச்சி அடைந்து
எழுந்து வந்த
குடும்ப நபர்களிடம்
அதற்கு காது கேட்காது
என்றேன்.
அவர்கள் மெளனமாக போய்விட்டார்கள்.

பின்பு ஒளிர்திரையின் வெளிச்சத்தை
மாற்றிப் பார்த்தேன்.
அது நகரவேயில்லை.

எப்போது டிவியைஅணைக்கிறேனோ
உடனே அது இடத்தை காலி செய்து விடும்.
நான் தூங்கப் போகிறேன் என்று தெரியுமோ என்னவோ?

தூக்கம் வராமல் டிவி பார்த்த நான்
பெயர் தெரியா பூச்சிக்காக தூங்காமல் டிவி பார்த்தேன்.

ஊர் செல்ல நேரிட்ட
இரு தினங்களுக்கு பின்பு
அதனைக் காணவில்லை.

சுவற்று பல்லி பிடித்து தின்றதா?
மிட்நைட் மசாலா பார்க்கும் போது யாரும் அடித்தார்களா?
இல்லை மழைக்காலம் முடிந்தது என்று பறந்து போய்விட்டதா?

மழைக்காலம் முடிந்ததால்தான் போயிருக்க வேண்டும்.
காத்திருந்தேன் அடுத்த மழைக்காலம் வரை.

மீண்டும் மழை.
சரியாக மூடாத சன்னல்.
உள்ளே வந்த பூச்சி
இம்முறை பலமாக கடித்தது.

Wednesday, May 10, 2006

தேர்தல் முடிவு- சில மிகை வினைகள்

இன்னும் முடிவுகள் வரவில்லை. அதற்குள் வலைப்பதிவு உலகத்திலும் , பத்திரிக்கை உலகத்திலும் முடிவு வந்துவிட்டது போல நடந்து கொள்கிறார்கள். நான் பார்த்த சில மிகைவினைகள் சில.

  1. பதவி ஏற்பு விழாவிற்கு அம்மா சென்னன பல்கலைக்கழக அரங்கை ரிசர்வ் செய்திருப்பதாக கூறப்படுவது.
  2. குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் 'கலைஞர் அமைச்சரவை லிஸ்ட் ரெடி" நியூஸ்
  3. ஜோசப்சார் வலைப்பதிவில் எழுதியிருக்கும் கலைஞருக்கு ஓர் கடிதம்.(ந்ன்றாக எழுதியிருக்கிறீர்கள் சார்)
  4. தமிழக அரசின் இணையதளத்தில் (tn.gov.in) அம்மாவின் படத்தை நீக்கியதோடு அல்லாமல், இணையதள நிறத்தையும் மாற்றி விட்டார்கள் ( பச்சையிலிருந்து வெளிர்நீலம்)

இணையதள நிறமாற்றம் ஆட்சிமாற்றம் ஏற்படுவதை சொல்லாமல் சொல்கிறதோ?

நாளை நடப்பதை யாரோ அறிந்திருக்கிறார்களோ?