Wednesday, January 25, 2006
பைசலாபாத்- டிரா ?
லாகூரைப் போல் இல்லாமல், பைசலாபாத்தில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவியது. கிட்டத்தட்ட 90 ஓவர்கள் தினமும் வீச முடிந்தது. ஆனாலும் முடிவு கிடைக்காதது வருத்தத்திற்குரிய விசயம். போட்டியின் ஒரே ஆறுதலான அம்சம், இரு நாட்டின் மட்டையாளர்களும் ஆடிய அதிரடி ஆட்டம். அது ஒன்றுதான் முந்தைய இந்திய பாகிஸ்தான் அறுவை டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும் போது மாறுபட்ட சுவையான அம்சம். முன்பு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டெஸ்டில் கெய்க்வாட் ஆமை வேகத்தில் ஆடி 201 ரன்கள் குவித்தார். ஆனால் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.
இந்திய அணியின் தற்போதைய சிறப்பம்சம்- நெஞ்சில் மாஞ்சா கூடியிருப்பது. லாகூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற இரு அணிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.ஆனால் இங்கே இந்திய அணிக்கு முதல் நாள் முகம்மது யூசுப் ஆட்டமிழந்த போதும் (216-4), பாகிஸ்தான் அணிக்கு சச்சின் ஆட்டமிழந்த போதும் ( 281-5) வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் இன்சமாம், அப்ரிதி ஆகியோர் பாகிஸ்தானையும், தோனி, பதான் ஆகியோர் இந்தியாவையும் காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு ஜோடிகளிடையே, மிகவும் முக்கியத்துவம் பெறும் ஆட்டம் தோனி-பதான் ஜோடி ஆடிய ஆட்டம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகளை அலசிப் பார்த்தால் எதிரணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை டாமினேட் செய்ய விட்டிருப்பது தெரியும். 83ம் வருட பாகிஸ்தான் தொடரில் இம்ரான் 40 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் தற்போதைய பாக். அணியில் அக்தர் அத்தகைய ஆக்கிரமிப்பை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தோனியின் அதிரடி ஆட்டம் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது.
தோனியின் சதம் சரியான ச்ந்தர்பத்தில் சரியான முறையில் எடுக்கப்பட்ட சதம். வேகமாக ரன்கள் குவித்தாலும், பொறுப்புணர்ந்து ஆடப்பட்ட ஆட்டம். முன்பு கபில்தேவ் அதிரடியாக ரன்கள் குவித்திருந்தாலும் அவருடைய ஆடும் முறையில் ஒரு "ரிஸ்க்" எப்போதும் இருக்கும். நிலைமை உணர்ந்து நிதானமாக ஆடுவது கபிலால் இயலாது. ஆனால் தோனி நிதானமாக ஆடினார். இத்தகைய அணுகு முறையை அவர் தொடர்ந்து கையாண்டால் பல சாதனைகளை புரியலாம்.
இந்தியா 5 பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் வரவேற்கத் தக்க அம்சம். 5 பந்து வீச்சாளர்கள் இல்லாத பட்சத்தில் 700 ரன்களை பாக் குவித்திருக்கும். ஜாகிர்கானின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர அவர் வீசும் பந்துகளும், உருவாக்கும் கோணங்களும் இந்த சொத்தை பிட்சிலும் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இன்சமாமை அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமை.அதே போல் யூனுஸ்கானிற்கு யுவராஜ் பிடித்த கேட்ச், முன்பெல்லாம் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே பிடிப்பார்.
அடுத்த டெஸ்டில் இன்சமாம் ஆடாவிட்டால் பாகிஸ்தானிற்கு பிரச்சனைதான். பந்து வீச்சாளர்களில் நவீத் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் ( காயம் குணமாகும் பட்சத்தில்).
கராச்சி கரைச்சலான ஊர். அங்கே இந்திய எதிர்ப்புணர்வு அதிகம். ஒருமுறை மியாண்டாட்டை மனோஜ் பிரபாகர் அவுட்டாக்கியவுடன் கத்தி கலாட்டா செய்து போட்டியையே நிறுத்தி விட்டார்கள். சென்ற தொடரை போல் இம்முறை பாக். வீரர்கள் அமைதியாக நடந்து கொள்ளவில்லை. அக்தரும், அப்ரிதியும் நிறைய வம்பிழுக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டையால் பதிலளிக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் மகான் திராவிட் அடித்த சதங்களைப் பற்றி இன்னொருமுறை தனியாக எழுத வேண்டும்.
Monday, January 09, 2006
கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்
இந்தியா-பாகிஸ்தான் தொடரைப் போல கிரிக்கெட் ரசிகர்களையும், பொது மக்களையும் பாதிக்கும் சங்கதிகள் மிகவும் குறைவே. மீடியாவில் இதற்கான முன்னோட்டம் , களத்தில் ஆட்டம் துவங்குவதற்கு பலநாட்கள் முன்பாகவே துவங்கி விடுகிறது.இந்த மீடியா ஆட்டத்தில் பங்கு பெற இரு நாட்டிலும் பல ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் சாதனைகள் செய்தவர்கள். சிலர் வாய்சொல் வீரர்கள்.
இந்தியாவில் வெங்சர்கார், சித்து போன்றோர்கள் இந்திய அணியின் பலத்தை வலியுறுத்தியும், பாகிஸ்தானில் இம்ரான், சப்ராஸ், அக்ரம் போன்றோர்கள் பாகிஸ்தான் பலத்தை அடிக்கோடிட்டும் பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆடப்போகும் இரு தரப்பு அணிகளின் பயிற்சியாளர்களும் சரி, கேப்டன்களும் சரி.. வெகுவாக அடக்கி வாசிக்கிறார்கள் இந்தியாவை புகழ்கிறார் இன்சமாம். வுல்மரை புகழ்கிறார் சாப்பல்.
இதிலிருந்து கண்கூடாகத் தெரிவது.. இரு நாடுகளுமே "பேவரைட்ஸ்" என்று முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை. "அண்டர் டாக்" ஆக கணிக்கப்படுவது அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுவதாக கருதுகிறார்கள். இரு நாடுகளுக்குமான சாதக அம்சங்கள் என கூறப்படுபவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன்.முதலில் பாகிஸ்தான்
- போட்டி நிகழும் காலம்-குளிர்காலம் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், அதனால் குறிப்பாக பாக். வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும்.
- பாக். பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இந்திய பந்து வீச்சாளர்களை காட்டிலும் வல்லவர்கள்.
- சாகிப் அக்தர் மிகவும் ஒழுக்கத்துடனும், நேர்த்தியாகவும் பந்து வீசுவதால் அதிக விக்கெட்டுக்களை இம்முறை வீழ்த்தக் கூடும். அக்தரின் மெதுபந்துகள் (slow ball), அவரது அதீத வேகக்குறைப்பால் ( 145 கி.மீ லிருந்து 110 கி.மீ) இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும்.
- இன்சமாம் உல்ஹக் பிரமாதமான பார்மில் இருக்கிறார்.
- பாக் பந்து எழும்பும் மைதானங்களை தயாரிக்கும்.எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்.
இந்திய அணியின் சாதகமான அம்சங்களாக முன்வைக்கப் படுவது.
- சிறந்த மித வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிற்கு உதவும்படி களம் தயாரித்தால் அதை சாதகமாக்கிக் கொள்ள இந்திய பந்து வீச்சாளர்களாலும் இயலும்.
- இந்திய மட்டையாளர்களின் திறன். குறிப்பாக சேவாக்,திராவிட் மற்றும் சச்சின்.
- இப்ரான் பதான்.
இரு அணிகளுமே மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் காட்டிலும் மேலும் பல பலம் மற்றும் பலவீனங்களை உள்ளடக்கியுள்ளன.என்னுடைய பார்வையில் எந்த அணி மனோ உறுதியுடனும், அதற்கும் மேலாக ஒழுக்கத்துடனும் விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். ஒழுக்கம் என்பது நேர்த்தியுடன் பந்து வீசுவது, சூழ்நிலைக்கேற்ப பேட் செய்வது, ஒழுங்காக கேட்சுக்களை பிடிப்பது, ரன்களை தடுப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
மற்ற அணிகளுக்கும்,இந்திய துணைக்கண்ட அணிகளுக்குமான வித்தியாசமே கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறையில்தான் இருக்கிறது. நோ- பால்களை வீசும் அக்தர், கால்களை சரியாக நகர்த்தாமல் கவர் டிரைவ் செய்யும் லஷ்மண் -ஆகியோர் திறமையிருந்தும் ஒழுக்கமற்றவர்களாகவே கருதப்படுவர். ஆனால் வெளிநாட்டு கோச்சுக்களின் உதவியால் இரு அணிகளும் தங்கள் அணுகுமுறையை வெகுவாக சீர்திருத்தியிருக்கின்றன.
என் பார்வையில் சோபிக்க் கூடிய ஆட்டக்காரர்கள்
பாகிஸ்தான்
நவீத் அல் ஹூசைன்
கம்ரான் அக்மல்
முகம்மது யூசுப்
அப்ரிதீ ( பிப்டி, பிப்டி)
இந்தியா
லஷ்மண் ( சோபிக்கா விட்டால் இந்திய அணியிலிருந்து கல்தா)
அனில் கும்ப்ளே
சேவாக்
திராவிட், சச்சின், இன்சமாம் போன்ற வல்லவர்களை பற்றி தனிப்பட்ட யூகம் செய்ய விரும்பவில்லை.
சர்ப்ராஜ் நவாஜ் கூறிய ஒரு கருத்து அனைவராலும் கவனித்தில் கொள்ள வெண்டியது. இந்திய பாக் தொடரில் , குறிப்பாக பாகிஸ்தானில் இரு அனிகளுமே நன்றாக இன்னிங்ஸை துவக்கும். ஆனால் திடீரென ஒரு வீழ்ச்சி நிகழ்ந்து விக்கெட்டுக்கள் மடமடவென சரியும். பெரும்பாலும் பாகிஸ்தான் இந்தியாவை அவ்வாறு சுருட்டியிருக்கிறது. எந்த அணி அத்தகைய வீழ்ச்சிக்கு இடம் கொடுக்காதோ அந்த அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.
கலக்குவோமா? கலங்குவோமா?- பொறுத்திருந்து பார்ப்போம்.