Wednesday, June 15, 2005

நூலகப் பஞ்சம்

நல்ல படைப்பாளனாக மாறுவதற்கு சுஜாதா முதல், சமீபத்தில் மரத்தடியில் ” ராமகிருஷ்ணன்” வரை அனைவரும் கூறும் அறிவுரை நிறைய படியுங்கள், நல்ல புத்தகங்களைப் படியுங்கள்’ என்பது. படிப்பது முக்கியம், அதுவும் வேறு கவலைகள் இல்லாத இளமையிலே படிப்பது மிகவும் முக்கியம்.நல்ல புத்தகங்களை படிக்கச் சொல்லும் அதே சமயத்தில், இவ்வாறான புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளாதா? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். இளம் வயதில் வீட்டில் “ஸ்போர்ட் ஸ்டார்” தொடர்ச்சியாக வாங்கிக் கொடுக்க இயலாத சூழ்நிலையில் அரசாங்க நூலகத்தில் ஸ்போர்ட் ஸ்டார் இருக்கும் என்ற நம்பிக்கையில் மதுரை ஞான ஒளிவுபுரத்தில் உள்ள நூலகத்திற்கு என் அண்ணனுடன் போனேன்.

இரண்டாவது முறையாக நான் தனியாக சென்றபோது, சிறுவன் என அலட்சியப்படுத்தி விரட்டி விட்டார் நூலகர். சிறுவயதில் ஏற்ப்பட்ட தாங்க முடியாத அவமானம் இது. இதன் பின்பு சிறிது காலம் நூலகம் செல்ல முயற்சிக்கவில்லை. மதுரையில் என் அண்ணன்கள் படித்த தூய பிரித்தோ பள்ளியில் நல்ல நூலகமும், நூலகம் செல்வதற்காக தனியாக பாட வகுப்பும் வைத்திருந்தார்கள். வீட்டிற்கு புத்தகங்கள் எடுத்து செல்ல அனுமதிப்பார்கள்.

அவ்வாறாக என் அண்ணன்கள் எடுத்து வரும் புத்தகங்கள்தான், வாரப் பத்திரிக்கைகளுக்கு அப்பாற்பட்டு படித்த புத்தகங்கள். அப்போதுதான் வாண்டு மாமாவின் “மூன்று வீரர்கள்’ கதையை முதல்முறை படித்தேன். பிற்காலத்தில் பேச்சுப்போட்டிக்கு பரிசாக இப்புத்தகம் எனக்கு கிடைத்தது.காரைக்குடி அழகப்பா பள்ளியிலும் நூலகம் உண்டு. ஆனால் அது திறக்காமல் மூடியே இருக்கும்.வருடத்திற்கு ஒரு முறை வருடாந்திர தணிக்கைக்கு முன்பு, நூலகத்தை சுத்தம் செய்வார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இம் மகத்தான பணி செய்ய தகுதி பெறுவார்கள். பணியின் இறுதியில் சில பழைய புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். மகாத்மாவின் “சத்திய சோதனை” சுருக்கப் படாத பதிப்பு ஒன்று நூலகத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.

நூலகங்களை மூடிவைத்ததற்கான காரணம் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய அநீதி.பின்பு அரசாங்க நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆனால் இங்கே நல்ல புத்தகங்கள் கிடைப்பது சென்னையில் தண்ணீர் தேடுவது போல் இருந்தது. உறுப்பினரானவுடன் நேராக பொன்னியின் செல்வன் எடுத்து படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போய் அவர்களது வீட்டில் உரிமையுடன் வைத்துக் கொண்டார்கள். நான் நூலகம் போகும் நாளை நிறுத்தும் வரை திருப்பித் தரவில்லை.

இந்நூலகத்திலும் பாலகுமாரனின் சில கதைகள், ந,பா வின் நீலவல்லி, தமிழ்வாணனின் சில கதைகள், கிரிக்கெட் விளையாடுவது எப்படி? போன்ற புத்தகங்களைப் படித்தேன்.இருந்தாலும் படிக்க விரும்பிய அனைத்துப் புத்தகங்களையும் படிக்க இயலவில்லை. நிறைய நல்ல புத்தகங்கள் அந்நூலகத்தில் இருந்ததும், யாரோ எடுத்துப் போய்விட்டிருக்க, புத்தகங்களை மீட்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படாததும் சோகமான விசயம்.

என்னுடைய படிப்பார்வத்திற்கு தீனிபோடுவதாய் அமைந்தது காரைக்குடியில் 92ல் தொடங்கிய கலைமகள் தனியார் நூலகம். ஜெயகாந்தன், தி. ஜா, கிருஸ்ணமனி,சுஜாதா என பல்வேறு எழுத்தாளர்களையும் படித்து மகிழ்ந்தேன், வேலை கிடைக்காத காலக்கட்டம் வேறு. இந் நூலகத்தில் படித்ததுதான் மாலனின் ‘மாறுதல் வரும்”, கல்லிற்கும் கீழே பூக்கள்’ ஆகிய நாவல்கள்.

பின்பு திருவல்லிக்கேணியில் “மேன்சன்” வாசத்தின் போது “பிக் ஸ்டீர்ட்” ல் ஒரு நூலகத்தில் உறுப்பினரானேன். இங்கே இந்திரஜால் காமிக்ஸ் முதல் மவுனி வரை அனைவரது புத்தகங்களும் கிடைத்தன. 150 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் நிறைய புத்தகங்களை கொடுத்து, இழந்து, மீட்டு உருப்படியாக நூலகம் நடத்தும் இக்கடை நிர்வாகிகளிடம் அரசாங்க நூலகங்கள் பாடம் கற்க வேண்டும்.

சென்னையின் சிறந்த ஆங்கில நூலகம் ‘ எல்லூர்”. அனைத்து ஆங்கிலப் புத்தகங்களும் துறைவாரியாக அடுக்கப்பட்டு, மிகவும் அழகாக இருக்கும். இதைப் போன்ற நூலகம் தமிழ் புத்தகங்களுக்கு யாராவது ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆவல்.

தமிழ் நூல்களின் விலையைப் பார்க்கும் போது அனைத்துப் புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்குவது இயலாத காரியம். நல்ல நூலகம் அமைத்தால் காசு கொடுத்து படிக்க மக்கள் கண்டிப்பாக வருவார்கள் என்பது எனது நம்பிக்கை.இலங்கைப் பிரச்சனையில் யாழ் நூலகம் எரிந்ததை வலைப் பூவில் படித்தேன். மிகவும் வேதனை தந்த நிகழ்வு.

நூலகங்களை பள்ளிகளில் வலுப்படுத்த , அரசாங்கத்தை வலியுறுத்தி இயக்கம் நடத்த வேண்டியது மிகவும் அவசியம். நூலகம் செல்வதற்காக ஒரு பாடப்பிரிவை பள்ளிகளில் கண்டிப்பாக ஒதுக்குவதும் அவசியம்.தமிழ் எனும் செம்மொழி சிறக்க நூலகங்கள் கண்டிப்பாக உதவும்.
பின் குறிப்பு:இப்பதிவு வலைப்பூவில் ஆசிரியராக பணியாற்றிய போது எழுதியதின் மறு பிரசுரம்

1 comment:

Mey said...

நல்ல பதிவு ராஜ்!
அனைத்து அரசாங்க பள்ளிகளிலும் , நூலகங்களிலும் இதே நிலை தான் என்று எண்ணுகிறேன்.