Friday, April 28, 2006

தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி, வீட்டுச் சுவர்களையும், விடிய விடிய அலறும் ஒலி பெருக்கிகளிடம் இருந்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.மாறி வரும் சூழலில் தேர்த்ல் ஆணையம் கீழ்கண்ட சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தம்

தேர்தல் அறிக்கைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவிக்கப்படும் திட்டங்களைப் பார்த்தால் அண்ணாமலை படத்தில் ரஜினி- சரத்பாபு பங்கு பெறும் ஏலம் நினைவுக்கு வருகிறது.தேர்தல் அறிக்கை வந்த பின்னாலும் புதிதாக வாக்குறுதிகளை அரசியல்வாதிகளின் விருப்பப்படி அவிழ்த்து விடுகிறார்கள்.

பொருட்களை விளம்பரப்படுத்தும் போது, அதன் பயன்களாக இல்லாததையும், பொல்லாததையும் விளம்பரப் படுத்தக் கூடாது என்ற வரையரை உண்டு.அதைப் போல ,முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வெற்றி பெற நிறைவேற்ற இயலா வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளித் தருவதை கட்டுப்படுத்த வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

இதன் படி தரப்படும் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.அதன் சாத்தியங்களை கட்சி சார்புள்ள/சார்பற்ற பொருளியல் வல்லுநர் இருவர் உறுதி செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்பந்தப் புள்ளிகலைப் போல ( டெண்டர்) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அறிக்கைகளையும் வெளியிடும். இதன் பின்பு வாக்குறுதிகளை கூட்டுவதோ, குறைப்பதோ கூடாது.

கூட்டணித் தாவல் தடைச் சட்டம்

கர்நாடகாவில் நடந்த அரசியல் கூத்துகளுக்கு பின்னால் இச்சீர்திருத்தம் மிகவும் அவசியமாகிறது. தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து ஓட்டுக் கேட்டவர்கள், தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க இன்னொரு கூட்டணிக்கு தாவக் கூடாது. அவ்வாரு தாவும் பட்சத்தில் அவர்களை தகுதி இழக்கச் செய்ய வேண்டும். ஒரு கூட்டணியிலிருந்து வாக்கு கேட்டு விட்டு, இன்னொரு கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதை கூட அனுமதிக்கக் கூடாது. ஆளும் பிரதானக் கட்சி அநியாயம் செய்தால் , அதை மற்ற கூட்டணி கட்சிகள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள வேண்டாம். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் இன்னொரு தேர்தலை தவிர்க்கிறோம் என்று பொது நலனுக்காக மெனக்கெடுவதைப் போல் காட்டிக் கொண்டு, மாற்று அரசு அமைக்க பேரம் பேசும் அரசியல்வாதிகளின் கொட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இதற்கு பீகாரில் நடந்ததைப் போல மற்றொரு உடனடித் தேர்தல் எவ்வளவோ மேல். தாவி பலன்பெறும் வாய்ப்புக்கள் குறைந்தாலே, சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் நாளடைவில் குறைந்து விடும்.

பட்டாசு வெடிப்புத் தடை

இந்த தேர்தல் பிரச்சாரத்தை பார்த்த பின் தோன்றிய சிந்தனை இது. போஸ்டர்களை ஒட்டக் கட்டுப்படுத்தியதால், ஊரெங்கும் வேட்பாள்ர் வரும் போது வாண வேடிக்கை காட்டி அல்லோகலப் படுத்திகிறார்கள். இதற்கான செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதா? ஏனென்றால் வெடிக்கப்படும் வாணவேடிக்கைகளின் மதிப்பு லட்சங்களை தாண்டும்.சுற்றுப் புறமும் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்திய செலவுக் கட்டுப்பாடு

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் , ஆட்சி அமைத்த பின் ஆடும் ஆட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலின் போது தப்பிய சுவர்கள், தேர்தலுக்கு பின்னால் வெற்றி பெற்ற வேட்பாளரின் முகங்களையும், அரசியல்வாதிகளின் முகங்களையும் சுமந்து கொண்டு பரிதாபமாக நிற்கின்றன. இதைத் தொடர்ந்து நன்றி அறிவிப்புக் கூட்டம் என்ற பெயரில் ஆடம்பரமான பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான செலவுகள் ,கட்சிகாரர்களால் வியாபாரிகளிடமிருந்தும் , பொதுமக்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பின்னாலும் சுவர்களையும், நன்கொடை வசூலிக்கும் தொ (கு) ண்டர்களிடமிருந்து பொதுமக்களையும் காப்பாற்ற மேற்கூறிய சீர்திருத்தம் அவசியமாகிறது.

என்றாவது ஒரு நாள் இவை சாத்தியப்படலாம்.

Wednesday, April 26, 2006

தேர்தல்- படித்தவர்களின் ஆர்வமின்மை

குத்துச் சண்டையை வேடிக்கை பார்ப்பதைப் போல தேர்தலை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு வாக்காளர்களை ஊடகங்கள் தள்ளி விட்டன என குற்றம் சாட்டியிருக்கிறார் ஞாநி. இந்நிலை உண்மையென்றாலும், வாக்காளர்கள் தங்களுக்கான ஜனநாயக் கடமையைப் பற்றிய புரிதலுடன் உள்ளார்களா? என்ற கேள்வியையும் நாம் அலசிப் பார்க்க வேண்டும்

ஜனநாயக வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி அவசியம் என்றே அனைவரும் நம்பிக் கொண்டிருகிறோம். இந்திய சுதந்திரம் பெற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது நம் நாடு கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. ஆனால் இத்தகைய வளர்ச்சி நம் ஜனநாயக நெறிமுறைகளை பலப்படுத்தியிருக்கிறதா? படித்தவன்/ள் ஒரு படிக்காத பாமரனுடன் ஒப்பிடும் போது எந்த அளவு தனது ஜனநாயகக் கடமைகளை உணர்ந்திருக்கிறான்/ள்? ஜனநாயக வளர்ச்சிக்கு படித்தவர்களின் பங்களிப்பு என்ன? என்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இப்பதிவு.

படித்தவர் விகிதம் அதிகரித்து வரும் கடந்த சில பத்தாண்டுகளில்,தேர்தல்களில் வாக்களிப்பவர்களின் சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டுகளில்தான் வாக்காளர்களின் வயது வரம்பு குறைக்கப்பட்டு 18 ஆக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தாலும், அதையும் மீறி வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது.

எதனால் இவ்வாறு நிகழ்கிறது? எனக்கு படும் சில காரணங்களை நான் கீழே விவரித்திருக்கிறேன்.

ஒரு குடிமகன் அரசாங்கத்திடமிருந்து எதை எதிர்பார்ப்பது? தன் மக்களுக்கான அரசாங்கத்தின் கடமையென்ன? ஒரு நல்ல அரசாங்கத்திற்கான வரையரைகள் என்ன? ஒரு மோசமான அரசாங்கம் ஏற்படுத்தும் சமுதாய பாதிப்புகள் என்ன? ஆகிய விசயங்களில் வாக்காளர்களிடையே நிலவும் தெளிவின்மை முதல் காரணம். படிக்காதவர்கள் நிரம்பிய சமுதாயத்தில் இத்தகைய சிக்கல் ஆச்சரியத்தை தராது. ஆனால் படிப்பு விகிதம் அதிகரித்தாலும், மேற்கூறிய விசயங்களில் வாக்காளர்கள் எவ்வித தெளிவையும் பெறாமல் எந்தக் கோழி ஜெயிக்கும் என்ற மனோபாவத்தில் தேர்தலை அணுகுவது ஏமாற்றம் அளிக்கும் அம்சம். இதில் வருந்தக் கூடியதாக நான் கருதுவது யார் ஜெயித்தால் என்ன ? என் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்ற ராமன் ஆண்டால் என்ன? ராவண்ன் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மை. படிக்காதவர்களை காட்டிலும், படித்தவர்களிடம் மிகவும் அதிகமாக இருக்கிறது இந்த மனப்பான்மை.

இந்த மனப்பான்மைக்கான அடிப்படைக் காரணம் என்ன?பற்றாக் குறைகள் மிகுந்த சமுதாயத்தில் அனைவரும் அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்த்து இருக்கிறோம். அப்பொது வழங்கும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் படிப்பறிவு தந்த பொருளாதார வளர்ச்சி தரும் தன்னிறைவு அரசாங்கத்தை எதிர்பார்க்காத நிலைக்கு படித்தவர்களை ஓரளவு உயர்த்தி விடுகிறது. கார்பரேசன் நீர் வரவில்லை என்றால் மினரல் வாட்டர் வாங்க பழகிக் கொள்கிறார்கள். கார்பரேசன் தண்ணீர் வரவில்லையென்றாலும் அது பெரிய குறைபாடாக தோன்றுவதில்லை. என்றாவது ஒரு நாள் பதிவாளர் அலுவலகம் போகும் போதோ, அல்லது மின்சார பில் கட்டும் போது அரசாங்க முகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போதும் மிகுந்த எரிச்சலுடன் எல்லாவற்றையும் தனியார்மயமாக்க வேண்டும் என புலம்பிக் கொள்கிறோம். காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் சென்று பத்திரமாக தினமும் வீடு திரும்பும் அன்றாட நடவடிக்கையின் பிண்ணனியில் அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது என்பதையும் அத்தகைய அரசின் செயல்பாட்டை கவனித்து , அதனை ஆதரிக்கவோ,எதிர்க்கவோ நமது வாக்குரிமையை பயன்படுத்தலாம் என்ற உணர்வையும் படிப்பறிவு அதிகரிக்க வில்லை. மாறாக தன்னுடைய வசதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வாழும் பொருளியல் மனப்பான்மையை அதிகரித்து விட்டது. இவர்களுக்கு அரசாங்கமும் மந்திரி சபையும் தேவையில்லாத ஒன்று. அரசியல் நிலைப்பாடும் அவசியமில்லாத ஒன்று.

படித்தவர்கள் மத்தியில் தோன்றி வலுப்பெற்றுள்ள அரசியல் நிலைப்பாட்டிற்கான அவசியமின்மையின் பின்விளைவுதான் நம்முடைய அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் வலுப்படாமல் பழைய பின் தங்கிய நிலையிலே தொடர்வது. உண்மையை சொல்லப்போனால் படித்தவர்கள் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மேலும் மோசமடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கென வம்பு? என ஒதுங்கிப் போகும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு படித்த வர்க்கம் ஒதுங்கி நிற்க, துணிந்தவர்களின் அராஜம் தொடர்கிறது.

இத்தகைய சூழலில் இன்னும் அரசை நம்பியிருக்கும் பற்றாகுறை மிகுந்த மக்கள் சமுதாயம் அரசியல்வாதிகளின் பின்னால் போகிறது. அவர்களை கவர இலவச அரிசி, டிவி என சலுகைகளை அள்ளி வீசுகின்றன அரசியல் கட்சிகள்.ஒதுங்கி நிற்பவர்கள் உணர்வதில்லை ஒரு நல்ல அரசாங்கத்தின் அவசியத்தை- சுனாமியோ, வெள்ளமோ வரும் வரை, அல்லது ஒரு சோகமான சந்தர்பத்தில் காவல் நிலையத்தையோ, மற்ற அரசு சேவைகளையோ அணுகும் வரை.

படித்தவர்கள் மத்தியல் அரசியல் நிலைப்பாட்டின் அவசியம் இல்லாமல் போனதற்கான காரணங்களாக எனக்கு தோன்றுபவை இரண்டு.

ஒன்று-அரசியல் நிலைப்பாட்டைக் காட்டிலும், சாதி நிலைப்பாடு பெற்ற முக்கியத்துவம்- சாதி ரீதியாக உருவான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியின் சாதி சார்ந்த அணுகுமுறைகள்.

இரண்டு- படித்தவர்களுக்கும், மாணவர்களும் பிரதிநிதித்துவம் தராத அரசியல் கட்சிகள். படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போதே இயங்கி வந்த மாணவர் இயக்கங்கள், கல்லூரிகள் மிகுந்த காலக்கட்டத்தில் வலுவிழந்து போனதும், அதைப் பலப்படுத்த கட்சிகள் முயலாததும்.

இந்த சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. நம்முடைய அரசாங்கங்கள் வெளிப்படையான பிரச்சனைகளை கையாள்வதில் கவனம் செலுத்துகின்றனவே தவிர பிரச்சனைகளாக உருவாகக் கூடியவற்றை கண்டுபிடிப்பதிலோ, தவிர்ப்பதிலோ கவனம் செலுத்துவதில்லை. வேலை இல்லாதவருக்கு மான்யம் அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது, வேலைகளை உருவாக்குவதை விட சுலபமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய நடவடிக்கைள் நீண்ட கால பயன்களை தருமா? யாருடைய வரிப்பணத்தில் இத்தகைய விரயங்களை செய்கிறார்கள். இத்தகைய கேள்விகளை கேட்க துணிவை தரவில்லை படிப்பு.

இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? இதற்கான தீர்வு மாணவர் இயக்கங்களிலிருந்துதான் துவங்க வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வியும், படித்து பல லட்சம் ஈட்டு என்ற பெற்றோர்களின் வழிகாட்டலும், மாணவர்களின் பொருள் மோகமும் தடைக்கற்களாக உள்ளன.
அரசியல் நிலைப்பாடும், அரசியல் கட்சி சார்பும் வேறு வேறு அம்சங்கள் என்பதை எப்போது உணரப்போகிறார்கள். அதுவரை குத்துச் சண்டையைப் போல், கோழிச் சண்டையை போல் தேர்தலை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

Monday, April 10, 2006

சரத் விலகல், ராடன் மற்றும் சன் டிவி

ஊடகங்களால் கிசுகிசுக்கப்பட்டபடி இன்று திமுகவிலிருந்து விலகி விட்டார் சரத்குமார்.நானும் என் மனைவியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என்று காரசாரமான கடிதத்தை கலைஞருக்கு அனுப்பியிருக்கிறார். சரத் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே திமுகவில் இணக்கமாக இல்லை. அவருடைய ரசிகர்களுக்கெனெ ஒரு கொடியை திடீரென அறிமுகம் செய்தார். சங்கராச்சாரியாரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். இத்தகைய செயல்கள் திமுகவில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.

சரத்தின் விலகல் அரசியல் ரீதியாக பெறும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், சரத்தின் மனைவி ராதிகாவும் அவருடைய முடிவுக்கு உடன்படும் பட்சத்தில், சன் டிவிக்கும், ராடான் நிறுவனத்திற்குமான தற்போதைய உறவின் பின் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்ற கேள்வியே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.ராடன் நிறுவனத்திற்கான முக்கியத்துவம் சன் டிவியில் மிக அதிகம்.தகதக தங்கவேட்டை, செல்வி முதல் பல தொடர்களை ராடன் நிறுவனம் தயாரித்து சன் குழும தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பி வருகிறது. இத்தகைய சூழலில் ராதிகாவின் அரசியல் முடிவின் வியாபாரத் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதை ஊடகங்கள் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

வியாபார ஒப்பந்தங்களை பரஸ்பர ஒப்புதல்களுடன் முறித்துக் கொள்வார்களா? அல்லது அரசியல் வேறு, வியாபாரம் வேறு என தொடரப் போகிறார்களா? அல்லது அடித்துக் கொண்டு நீதிமன்றம் ஏறுவார்களா? என பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

சரத் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில், ஜெயா டிவியுடன் புதிய ஒப்பந்தங்களில் ராடன் ஈடுபடலாம். அது நிகழும் பட்சத்தில் ஜெயா டிவியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயரக் கூடும். சன் டிவி சில புதிய தயாரிப்பாளர்களை முன்னிறுத்தக் கூடும். முன்பு சன் டிவியில் பிரபலமாக இருந்த மின் பிம்பங்கள் நிறுவனம் மீண்டும் சன் டிவியுடன் கைகோர்க்கலாம்.

சன் டிவி ராடனை நம்பி இல்லை என்ற வாதமும் உண்டு. முன்பு மின்பிம்பங்கள் நிறுவனம் சன் டிவியை விட்டு விலகியபோது ,அதனால் சன் டிவி பாதிக்கப்படவில்லை.ஆனால் ராடன் நிறுவனம் மின் பிம்பங்களை காட்டிலும் மிக அதிக நிகழ்ச்சிகளை பல மொழிகளில் வெகு காலமாக வழங்கி வருகிறது. அதில் பல ப்ரைம் ஸ்லாட் நிகழ்ச்சிகள். எனவே ராடனின் விலகல் தற்காலிக பாதிப்புக்களையாவது ஏற்படுத்தாமல் இருக்காது.

என்ன நடக்கப் போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.