Thursday, December 27, 2007

மெல்போர்னில் திண்டாட்டம்

முதல்நாள் முடிவில் இருந்த மகிழ்ச்சியை காணாமல் போகச் செய்து விட்டார்கள் இந்திய ஆட்டக்காரர்கள். இத்தனைக்கும் ஆடுகளம் இந்திய ஆடுகளத்தைப் போலத்தான் இருந்தது. முகததை உடைக்கும் அளவு பந்து எகிறவில்லை. ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் துல்லியமாக பந்து வீசினார்கள்.ஆடுகளத்தின் உதவியின்றி, துல்லிய பந்து வீச்சின் மூலமே வீழ்த்தி விடக்கூடிய பரிதாம நிலையில்தான் இந்தியா தற்போது இருக்கிறது.

இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு அடிகோலியவர் திராவிட்தான்.அவர் ஆடிய அதீத தற்காப்பு ஆட்டம் இந்தியாவிற்கு எந்த பலனையும் தரவில்லை. முதல் நாற்பது பந்துகள் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. திராவிடின் இந்த ஆட்டத்திற்கு பின்னால் ஒரு திட்டமோ, உத்தியோ இல்லை. சரியான பயந்தாங்கொள்ளி ஆட்டம். ஒரு கட்டத்திற்கு மேல் ஒற்றை ரன்கள் குவிப்பதற்காவது முயற்சித்திருக்க வேண்டும். எதுவும் செய்யாது ஐந்து ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது திராவிட் இவ்வாறு அதீத தற்காப்புடன் ஆடி,சோபிக்காமல் போனார். 2004 ல் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இம்முறை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

அதன் பின்பு டெண்டுல்கர் சிறப்பாக ஆடினாலும், ஆஸி பவுலர்களின் தன்னம்பிக்கை மலைபோல் பெருகிவிட்டது. அவர்களின் வலைபின்னலுக்கு சுலபமாக பலியாகிவிட்டார்கள்.திராவிடைக் காட்டிலும் அதிகம் சொதப்பியது யுவராஜ். இவரை அணியில் சேர்க்க திராவிடை ஓப்பன் செய்ய வைத்தார்கள். திராவிடின் சொதப்பலை, இவர் அடித்து ஈடு செய்வார் என்றால் இவர் அடித்ததோ முட்டை.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கான ஆஸி பவுலர்களின் திட்டங்கள், துல்லிய்மாக பணி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவிற்கு மிகவும் கலக்கம் தரும் செய்தி.இதனை முறியடிக்க, அதிரடியாக ஆடும் சேவாக் போன்ற ஆட்டக்காரர் தேவை. சென்ற முறை ஆஸி பவுலர்களை அவரது அதிரடி ஆட்டம் கலங்கவைத்தது. இம்முறை "குழி தோண்டி வை. நானே வந்து குதிக்கிறேன்" என்னும் வகையில் இருக்கிறது நம்மவர்களின் ஆட்டம்.

இரண்டாவது நாள் இறுதியிலே 171 ரன்கள் முண்ணனி. என்னுடைய கணிப்பு ஆஸி அணி 500 க்கும் மேலான முண்ணனியை பெறும். பாண்டிங் சதம் அடிப்பார்.

No comments: