Friday, July 16, 2004

தீ....
தமிழ் நாட்டிற்கும் அக்கினி பகவானுக்கும் உறவு முறை சரியில்லை. ஸ்ரீரங்கத்தில் மணவீட்டினை பிண வீடாக மாற்றிய பின், மகாமகப் புகழ் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் 100 மாணவிகளின் உயிரை அழித்திருக்கிறது தீ..

ஆபத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு , கவலைப் படாமல் வாழ்கை நடத்துவதே இயல்பு  என்று இந்தியர்களுக்கு பழகி விட்டது. கடந்த வாரத்திலேயே அப்போலோ ஆஸ்பத்திரி, ஸ்பென்சர் பிளாசா ஆகிய இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு, பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.மகாமகம் பிரச்சனை இல்லாமல் முடிந்தது என்று நினைத்திருந்த போது நடந்திருக்கிறது இந்த அசம்பாவிதம்.

இணையத்தில் இந்த செய்தி கிடைத்தவுடம் இந்த பதிவை எழுதுகிறேன். வீட்டில் போய் டிவி பார்ப்பதற்கோ, இன்னும் சில வாரங்கள் பத்திரிக்கைகள் படிப்பதற்கோ பயமாக இருக்கிறது. கோரமான படங்கள், கண்ணீர் கதைகள். இவ்வாறான அச்ம்பாவிதங்கள் நடக்காதிருக்கலாம். ரிப்போட்டரும், ஜுனியர் விகடனும் விஜயகாந்தை பற்றியே அலுக்கும் வரை எழுதிக் கொண்டிருந்திருக்கலாம். சோதனை..சோதனை.

இந்தியாவில் தீ விபத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்பது பயர் எக்ஸ்டிங்கியூசரை சுவற்றில் தொங்க விடும் அளவில்தான் இருக்கிறது. இது பற்றாது. தனி மனிதனுக்கு crisis management பயிற்சி மிகவும் அவசியம். என் ஆபிஸில் ஒரு டியூப் லைட் பற்றிக் கொண்டது. fire extinguisherஐ உபயோகப் படுத்த, முதலில் சுவற்றில் இருந்து கழற்ற யாராலும் இயலவில்லை. யாருக்கும் உபயோகிப்பதில் முன் அனுபவம் இல்லை. கழற்றி manual பார்த்து உபயோகிப்பதற்குள், தீக்கு போரடித்து அணைந்து விட்டது.இதே போல் இரக்க மனப்பான்மையுடன் தீ எப்போது இருக்காது.குழந்தைகள் பலியானது தாங்க முடியாத வேதனையை தருகிறது. தனியார் பள்ளியில் நடந்திருப்பது கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம். அதிக கல்விக் கட்டணத்தை செலுத்தி விட்டு பாதுகாப்பற்ற சூழலில்தான் பெரும்பான்மையான குழ்ந்தைகள் படிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான அசம்பாவிதங்களிலிருந்து இந்தியாவிற்கு விடுதலையை யார் பெற்றுத் தருவது?

No comments: