Saturday, July 17, 2004

கருகிய மலர்கள் உருகிய இதயம்
கும்பகோணம் தீ விபத்தை பற்றிய என்னுடைய முந்தைய பதிவு, விபத்து குறித்த செய்தி கிடைத்தவுடன், டிவியை பார்க்காமல் எழுதியது.இத்தனை கோரமான விபத்தின் பிம்பங்களை இது வரை நான் பார்த்ததில்லை.போபால் விக்ஷவாயு விபத்தில் இதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பத்திரிக்கைகளில் பிரசுரத்திருக்கிறார்கள். தொலைக்காட்சியின் தாக்கம் அதிகம் இல்லாத 1984ல் கோரமான படங்களை பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

கோரமான படங்களைக் காட்டிலும் ஆத்திரமூட்டிய விக்ஷயம்-பள்ளி அமைந்த இடம். கடைகளோடு கடையாய், கல்யாண மண்டபத்தின் பக்கத்தில் பல மாடிகளுக்கும் சேர்த்து ஒரே வாசலுடன் ஒரு பள்ளி.  கீழ்பகுதியில் சமையலறை.சமையலறை ஸ்டவ் வாக மாறி குழந்தைகளை எரித்திருக்கிறது. இதைப் போன்ற பாதுகாப்பும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாத பல பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளது.ஆங்கில மீடிய மோகத்தை பயன்படுத்தி கல்வி வியாபாரிகள் பெருகி விட்டார்கள்.கல்யாண மண்டபங்களை பள்ளிகளாக மாற்றுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தகுந்த முடிவு என்றாலும் இது மட்டும் போதாது.தமிழகப் பள்ளிகளின் பாதுகாப்பு வசதிகளைக் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை கல்வித்துறை வெளியிட வேண்டும்.மேலும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

தொழில் ரீதியாக பல்வேறு அரசாங்கப் பள்ளிகளை பார்த்தவன் என்ற முறையில் எழுதுகிறேன்.அரசாங்கப் பள்ளிகள் விசாலமாய் இருக்கின்றன.விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. அரசு உதவிப் பள்ளிகளிலும், சில தனியார் பள்ளிகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவதிலை.மாணவைகளிடம் இருந்து கட்டணம் வசூலித்த பின்பும் செய்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

இந்த கோரத்தை தொலைக்காட்சியில் காட்டியதில் ,குறிப்பாக சன் செய்திகளில் எனக்கு உடன்பாடில்லை. குழந்தைகளும் பார்க்கக் கூடிய தொலை தொடர்பு சாதனத்தில் இந்த கோரக் காட்சிகள் ஏற்படுத்தும் மனோரீதியான பாதிப்பை பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. கிடைத்தது செய்தி என்ற ஆர்வத்தில் மக்களை பயமுறுத்த கிளம்பி விட்டார்கள். சமூகப் பொறுப்புடன் மீடியாக்கள் செயல்படுவதில்லை. அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி இருந்தால், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை, மருத்துவமனைகளை பத்திரிக்கைகளில் அடையாளங் காட்டட்டும்.உங்கள் ஊரில் சிறந்த பள்ளி எது என்று fraud survey நடத்துவதை விட்டு விட்டு, மோசமான பள்ளிகளைப் பற்றி மக்களுக்கு சொல்லட்டும். NDTV யை பார்த்து நிருபருடன் நேரடியாக உரையாடும் முறையை சன் செய்திகளிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். இது சரியான காமெடியாக இருக்கிறது. நேற்று கும்பகோணம் நிருபர் சாவு எண்ணிக்கையை , கிரிக்கெட் ஸ்கோர் போல நாற்பதா ஐம்பதா? என்று விசாரித்தது வேதனையான விசயம்.NDTV யில் பேசிய நிருபர் அழாத குறையாக பேசினார். அவரது தாயுள்ளம் அவரையும் மீறி வெளிப்பட்டு விட்டது.

தீப்பிடித்த பின்பும் சில ஆசிரியர்கள் மாணவர்களை வெளியே போகக்கூடாது என கண்டித்திருக்கிறார்கள்.இத்தகைய மூடத்தனமான கீழ்படிதலை மாணவர்களிடம் எதிர்பார்க்கிறது  ஆசிரியர் குழாம். மனிதர்கள் மாற வேண்டும். முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து குடந்தை போய்விட்டார். டாக்டர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையிலிருந்து காரில் இரவு கிளம்புகிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யக்கூடாதா? தேவாரம் தேனீ அருகே விபத்தில் காயப்பட்டபோது, அந்த நெடுஞ்சாலையில் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டு மதுரைக்கு கொண்டுவரப்பட்டார். சாமான்யர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?

பாதுகாப்பு வசதிகள் பள்ளிகளில் மட்டுமன்றி அனைத்து பொது இடங்களுக்கும் செய்ய வேண்டிய ஒன்று. இதை செய்துதரும் பட்சத்தில், இதற்காக கூடுதல் வரி விதித்தால் கூட அதை செலுத்துவதிற்கு நான் தயாராக இருக்கிறேன்.இருக்கும் மயானங்கள் போதும்.புதிதாக பொது இடங்களில் மயானங்கள் வேண்டாம்.

பெற்ற பிள்ளை மேல் பாசம் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்தாலும் சரி, அரசு பள்ளிகளில் படித்தாலும் சரி. பாதுகாப்பு வசதிகள் எப்படி என்பதை ஒரு முறை நேரடியாக பார்த்து வரலாம். முந்தைய பதிவில் கூறியதைப் போல பாதுகாப்பு என்பது fire extinguisher ஐ சுவற்றில் தொங்க விடுவதில் இல்லை.

No comments: