Monday, July 26, 2004

ஆழ்துளை கிணறுகள்

கிணற்றடி கதைகள் பேச 
கிணறுகள் இல்லை இங்கே.
பூமித்தாயின் முலைப்பாலாம்
கிணற்று நீர் வற்ற
ஆழ்துளைகள் மார்பில் தோண்டி
இதயக் குருதி எடுத்து
தாகம் தணிக்கும் மக்கள்.
எத்தனை நாளைக்குத்தான்
துடிக்கப் போகிறது...
அவள் இதயம்.
அனுதினமும்
ஏதாவது ஒரு தெருவில்
ஏதாவது ஒரு வீட்டில்
பூமியின் மார்பை துளைக்கிறது
ஆழ் கிணறு தோண்டும் இயந்திரம்
இன்னும் சில காலத்தில்
இச் சத்தம்
இல்லாவிடில்
தூங்க மறுக்கும் குழந்தைகள்.
ஆயிரங்கள் செலவழித்து
முருகனுக்கு நேர்ந்து கொண்டு
ஆழ்துளை இட்டு
நீருக்கு காத்திருந்தால்
தன் வீட்டு
நீரளவு குறையாதிருக்க
அம்மனை வேண்டும்
பக்கத்து வீட்டுக்காரன்.
ஜெயிப்பது முருகனா? அம்மனா?
எந்த தெய்வம் வேண்டுமானாலும்
ஜெயிக்கலாம்.
தோற்றுக் கொண்டிருக்கிறது
நாளைய சந்ததிக்கு
பாலைவனத்தை
பரிசாகத் தரத் தயாராகும்
மானுடம்.
 

No comments: