Saturday, July 31, 2004

பொறிகலங்கி போன பொறியியல் கல்வி

ஐஐடி யை பற்றிய விரிவான அலசல்களையும், சண்டைகளையும் பற்றி இணையத்தில் படித்தேன். இந்த மேல்தட்டு கல்வி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, மிக அதிக அளவு பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளை குறித்த பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலக அளவில் கோலோச்சி நிற்கும் இந்திய பொறியியல் வல்லுநர்களில் பெரும்பான்மையானவர்கள் இரண்டாம் நிலை பொறியியற் கல்லூரிகளில் படித்திருப்பார்கள் என்பது என் கருத்து. இதற்கான புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லை.தனியார் துறைக்கு அரசாங்கம் அனுமதி அளித்த பின்பு , தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகின. இதனால் நன்மையா? தீமையா ? என்ற விவாதம் தொடர்ந்து நடந்தது. காலப் போக்கில் தனியார் கல்லூரிகளால் பல்வேறு நன்மைகள் நிகழ்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது.மெப்கோ, வேலூர் இஞ்சினியரிங், கிரசென்ட் என்று பல பொறியியற் கல்லூரிகள் தரம்மிக்க வல்லுனர்களை உருவாக்கி உள்ளன. சில தனியார் கல்லூரிகள் இக்கல்வியை வியாபார சந்தையாகவும் மாற்றின. இருந்தாலும் நன்றாக படிக்க கூடிய மாணவனுக்கு தரமான பொறியியற் கல்வி பெறுவது மிகவும் சாத்தியமான விசயமாக இருந்தது.

என் நண்பன் ரவிசங்கரின் தம்பிக்கு 'அருணை இஞ்சினியரிங் கல்லூரியில் 93 ம் வருடம் கல்லூரி ஆரம்பித்த பல நாட்கள் கழித்து இடம் கிடைத்தது. நான் அழகப்பா இஞ்சினியரிங் கல்லூரியில் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த காலம் அது. இக் கல்லூரியை பற்றி நானும் என் நண்பனும் கேள்விப்பட்டதே இல்லை.இன்று இக் கல்லூரி மிகவும் புகழ் வாய்ந்த கல்லூரி. இதில் படித்த என் நண்பனின் தம்பி IT வல்லுனனாய் ஏதோ ஒரு ஐரோப்பிய தேசத்தில் இருக்கிறார்.என் நண்பனின் தம்பியைப் போல, பலர் பல தேசத்தில் பணியாற்ற தனியார் கல்லூரிகள் உதவி இருக்கின்றன.

ஆனால்,இன்று கட்டுப் படுத்த இயலாத வியாபார சந்தையாக மாறியிருக்கிறது பொறியியற் கல்வி. நான் அழகப்பா பொறியற் கல்லூரியில் சேர்ந்த நாள் சூலை 30, 1988. இந்த சூலை 30 ல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கே தொடங்கவில்லை. பல பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.நீதி மன்ற வழக்குகளில் சிக்கி பொறி கலங்கிப் போயிருக்கிறது பொறியியற் கல்வி.

உலக அளவில் இந்திய பொறியியல் வல்லுனர்களுக்கு இருக்கும் மதிப்பை சிதைக்கும் வண்ணம் , கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட சில முடிவுகள் உள்ளன.

ஒன்று: பொறியியற் கல்லூரிகளில் சேர்வதற்கு +2 தேர்ச்சி போதுமானது. 60% சதவீத மதிப்பெண் அவசியமில்லை என்ற முடிவு.

இரண்டு: +2 பரிட்சை முதல் முறையிலே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயத்தை தளர்த்திய முடிவு.

தரமான அறிவியற் கல்லூரியில் இயற்பியல் படிக்கவே குறைந்தது 80% சதவீத மதிப்பெண்கள்தேவைப்படுகிறது.வெறும் 35%மதிப்பெண் பெற்ற மாணவன் ,பொறியியல் படித்து தேறுவான் என்பது எப்படிப்பட்ட நம்பிக்கை?கல்லூரிகள் மந்திரம் செய்து இந்த மாணவர்களை வல்லுனராக மாற்றப் போகிறதா? Integral calculas ப்ளஸ் 2 வில் படிக்க முடியாதவன் எப்படி Fourier
Transform படிப்பான்? அதிகப்படியாக உருவாக்கப் பட்ட இடங்களை நிரப்புவதற்கா இந்த நடவடிக்கை? கேட்டால் உலக அளவில் பொறியியற் வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது என கதை விடுகிறார்கள். 35% மதிப்பெண் பெற்று, Paper chase செய்து தேர்ச்சி பெற்று , என்ன சாதிக்கப் போகிறார்கள் இவர்கள். உலக அளவில் இந்திய பொறியியல் தரத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க விதைகள் விதைக்கப் படுவதாகவே நான் கருதுகிறேன்.

இன்னொரு அபயகராமான விசயம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் என்ற பல துறைகள் இருந்தாலும், படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளை மனதில் இலக்காக வைத்து படிப்பது. தான் படிக்கும் applied Mechanism ம், Circiut Design ம் பாஸ் பண்ணா போதும், Java, dot net படிப்போம் என்ற மாணவர்களின் மனப்போக்கும், அதற்கான சூழலும் ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை.ஒரு சிவில் இஞ்சினியரிங் மாணவனுக்கு கூட, Infosys dream destination னாக இருப்பதும், அதற்காக அவன் முயற்சி செய்வதும் வரவேற்கத் தகுந்ததா? குழப்பம் நீடிக்கிறது."நாலு வருட படிப்புக்கான
அத்தாட்சி மட்டும் தான் பொறியியல் கல்வி, படிக்கும் துறை பற்றி கவலை இல்லை" என்ற நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. மற்ற துறைகளில் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் ஒரு காரணம் என்றாலும் கூட இந் நிலைமை மாற்றப் பட வேண்டும்.

கணினி மற்றும் மிண்ணனுவியலின் ஆதிக்கம்தான் எல்லாத் துறைகளிலும் பரவுகிறது என்றால் இரு துறைகள் இணைக்கப் பட்ட Mechotronics போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப் படுத்த வேண்டும். இன்று கணிணி வல்லமையை பொறியியல் வல்லமையாக பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.பொறியியலில் சாதிக்க நாம் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை நம் அரசாங்கமும், பொறியியல் சார்ந்த கல்வி நிறுவனங்களும்.

இதைப் பற்றி பெரிதாக கவலையும் இல்லை என்னை மாதிரி பொறியியல் படித்த சக தோழர்களுக்கும்.

No comments: