Monday, September 27, 2004

பாடல் காட்சிகள் தேவையா?

விநாயகர் சதுர்த்தியின் போது சன் டீவியில் டாக்டர் கமல்ஹாசனின் பேட்டி மிகவும் அர்த்தம் செறிந்ததாக இருந்தது. அப்பொழுது அவர் பாடல்கள் திரைக்கதை அமைக்கும் போது தரும் இடைஞ்சல்களை குறித்து நொந்து கொண்டார். பாடல்கள் வேகமாக செல்லும் வாகனத்தின் தடைகளாக அமைவது பெரும்பாலும் உண்மையே. எண்பதுகளில் சில படங்கள் பாடல் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டன. அவற்றுள் "வண்ணக்கனவுகள்" மற்றும் கமலஹாசன் தயாரித்த "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றன. "வீடு" படத்திலும் பாடல்கள் இல்லை. ஆனால் இத்தகைய முயற்சிகள் தொடரவில்லை.

பாடல்கள் இல்லாத படங்களை தருவதற்கு வலுவான கதைகளும் , திரைக்கதைகளும் அவசியம். வண்ணக்கனவுகளும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடும் இவ்வகையை சார்ந்தவையே. ஆனால் எல்லாப்படங்களும் பாடல் இல்லாமல்தான் வர வேண்டும் என்பதில் என்னுள் இருக்கும் சினிமா ரசிகனுக்கு ஒப்புதல் கிடையாது. மரங்களை சுற்றியோ அல்லது தொப்புளில் ஆம்லெட் போடும் டூயட் பாடல்களை வேண்டுமானால் தவிர்க்கப்படலாம். பாடல்களைப் பற்றிய கமலின் கருத்தும் டூயட் பாடல்களை குறித்த கருத்தே என்பது என்னுடைய அனுமானம். ஏனென்றால் திறமையான இயக்குநர்களின்
கையில் பாடல்கள் சக்தி வாய்ந்த சாதனமாகத்தான் பயன்பட்டு வருகிறது.

பாலு மகேந்திரா, மகேந்திரன் முதலிய இயக்குநர்கள் காதல் பாடல்களையும் வித்தியாசமாக படமாக்கி ரசிகர்களை கவர்ந்தார்கள்.பாடல்களை பிண்ணனியில் ஒலிக்கவிட்டு, இயல்பு வாழ்க்கையில் நாயகனும் நாயகியும் எவ்வாறு இயங்கிறார்கள் என்பதை காண்பிக்கும் உத்திகளை இந்த இரண்டு மகேந்திரர்களும் வெகுவாக கையாண்டுள்ளார்கள். "நெஞ்சத்தைக் கிள்ளாதே" யிலிருந்து "பருவமே", ஜானியிலிருந்து " சினோ ரீட்டா", சதிலீலாவதி"யிலிருந்து " ராஜனோடு ராணி வந்து" என பல பாடல்களில் இவ்வுத்திகள் கையாளப்பட்டுள்ளது.

என்னைக் கவர்ந்த சில பாடல் காட்சிகளை இங்கே வழங்குகிறேன்

1. பருவமே புதிய பாடல் பாடு... : நீருக்குள் ஒருவர் பாடல் சாதகம் செய்வதிலிருந்து தொடங்கும் இந்தப் பாடலில், மோஹனும், சுஹாசினியும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஒரு பாடல் காட்சியில் பதினைந்து காஸ்டியூம் மாற்றி, டிரை ஐஸ் மூலம் புகை போட்டு கனவுக் காட்சிகளாக பாடல்கள் எடுக்கப் பட்ட காலக் கட்டத்தில் ( இப்ப மட்டும் என்ன வாழுதாம்?), இது புதுமையான , முழுமையான முயற்சி.இசைஞானியின் அற்புதமான பாடல்.

2.அழகிய கண்ணே : உதிரிப் பூக்களிலிருந்து இந்த பாடலைக் கேட்டால் மனம் மிகவும் கனத்துப் போகும். இன்றும் இப்படத்தின் தாக்கம் நெஞ்சில் நிலைத்திருக்க இப்பாடலும் ஒரு காரணம் என்று நான் கூறுவேன். பேபி அஞ்சுவின் சேட்டைகளும், அஸ்வினியின் பரிதாப முகமும் இப்பாடலைக் கேட்கும் போது பிம்பங்களாய் மனதில் விரியும். இளையராஜாவில் வயலின் துள்ளலுக்கு ஆட்டுக்குட்டியின் துள்ளல் ஒருங்கிணைத்து எடிட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த முறை பார்க்கும் போது கவனித்துப் பாருங்கள்.

3.நீ ஒரு காதல் சங்கீதம்: இப்பாடலும் மகேந்திராக்களின் பாணியில் மணிரத்னத்தால் எடுக்கப்பட்ட பாடல். கமல், சரண்யாவை கல்யாணம் செய்தவுடன் வரும் இந்தப் பாடல், அவர்களது காதல் வானத்தில் நம்மையும் பறவையாக பறக்கச் செய்து விடும்.பாடல் இல்லாமல் கல்யாணம் முடிந்தவுடன் கமலும், சரண்யாவும் வீட்டுக்குப் போக டாக்ஸி பிடிப்பதைப் போல காட்டியிருந்தால் யதார்த்தம் இருந்திருக்கலாம். ஆனால் கதையின் தாக்கம் குறைந்திருக்குமே. மும்பை பிண்ணனியில் எடுக்கப்பட்ட , சிறப்பான காதல் பாடல்.

4.நினைத்தாலே இனிக்கும்: "இது ஒரு இன்னிசை/தேனிசை மழை" என்று டைட்டில் கார்டிலேயே போடுவார்கள் இப்படத்தில். பல பாடல்கள் இப்படத்தில் இருந்தாலும் "நினைத்தாலே இருக்கும்" என்ற ஒரு வரியுடனும், முழுக்க முழுக்க "லாலா" என ஹம்மிங்குடன் அமைந்த இந்தப் பாடல் மனதை கனக்கச் செய்து விடும். சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் இப்பாடல் எடுக்கப் பட்டாலும் நம் மனம், கமலையும் ஜெயப்பிரதாவையும் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும். அதுதான் பாலச்சந்தரின் வெற்றி.

5.சொல்லத்தான் நினைக்கிறேன்: விஸ்வநாதனின் குரலில் படத்தின் முக்கிய பாத்திரங்களான சிவக்குமார் மற்றும் மூன்று பெண்களின் மன ஓட்டத்தை சித்தரிக்கும் பாடல். மிகவும் எளிமையான, ஆழமான வரிகள். இப்பாடலை திரைக்கதைக்கு இடைஞ்சல் என்று எப்படி கூற முடியும்? சொல்லப் போனால் பத்து சம்பவங்களால் விளக்கக் கூடிய மன உணர்வுகளை ஒரு பாடல் மூலம் சொல்லி திரைக்கதையை வலுப்படுத்தியிருக்கிறார் பாலச்சந்தர் என்றுதான் நான் சொல்வேன்.

பாடலற்ற படங்களை எடுப்பதை விட,பாடல்களை தேவையான அளவு பயன்படுத்துவதே சிறந்தது. "அலைபாயுதே" படத்தை பாடல்கள் இல்லாமல் எடுக்க வேண்டும் என்று மணிரத்னம் நினைத்தாரம். நல்ல வேளை. பாடல் இல்லாமல் கண்டிப்பாக அப்படம் வெற்றி பெற்றிருக்காது. அதே வேளையில் ஆயுத எழுத்து பாடல் இல்லாமல் இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம் என்பது என் கருத்து.

இன்னும் நிறைய பாடல்கள் பற்றி எழுதலாம். பின்பு எழுதுகிறேன்.

No comments: