Saturday, September 04, 2004

சாதீய ஆதிக்கங்கள்- தற்போதைய பிரச்சனைகள்

வரலாறுகளைப் பற்றி மட்டும் அலசி விட்டு, சம கால நிகழ்வுகளைக் குறித்து கவனமற்றிருப்பது பல துறைகளிலும் இருக்கும் குறைபாடுதான்.ஆனாலும் இன்னும் பிராமணத் துவேசம், தந்தை பெரியாரின் சமூக நிலைப்பாடு என்று
வரலாற்றினை மேற்கோள் காட்டி வாதாடும் மனிதர்களிடம் மாறி வரும் உலகையும் கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிக்கொள்கிறேன்.சாதீய ஆதிக்கங்களை குறித்த சமூகக் கவலை மற்றும் அக்கறை தேவையான ஒன்று என்றாலும், வராலாற்றை விடுத்து சமகால நிகழ்வுகளையும் நிறைய அலசுங்கள்.

இப் பதிவு வேறெந்த பதிவுக்குமான சார்வினையோ அல்லது எதிர்வினையோ அல்ல.பிராமணர்கள் ஆதிக்கமே, சாதீய ஆதிக்கம் என அடையாளம் காணப்பட்ட காலக்கட்டங்களிலிருந்து, நாம் பலமைல் தூரம் கடந்து வந்து விட்டோம். சமூகப்பாகுபாடுகளை களைந்து, அனைத்து துறைகளிலும் அனைவரும் பங்கு பெறுவதற்கான சூழலை இந்திய மாநில, மத்திய அரசாங்கள் ஏற்படுத்தி கொடுத்து விட்டன என நான் நம்புகிறேன். தனி மனித வளர்ச்சிக்கு காரணமாக அமையும் கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீடுகள் பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் பயனுறும்
வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பெரியாரின் காலத்திய பிராமண சாதிய ஆதிக்கம் இன்று இருக்கிறதா? என்ற சிறிய, எளிய கேள்வியுடன் என் அலசலை ஆரம்பிக்கிறேன். இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும். இன உணர்வுகளும், அதன் அடிப்படையில் வழங்கிக் கொள்ளும் சலுகைகளும் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட இன உணர்வுகள் அனைவருக்கும் இருக்கிறது. சதவீதங்கள்
வேறுபடலாம்.

சாதிய அடையாளங்களைப் பிரதானப்படுத்தாமல் கல்வித்துறையிலோ, அரசியல் துறையிலோ அல்லது இலக்கியத்துறையிலோ பங்கு கொள்ள முடியாத சூழலைத்தான் நம் சமூகத்தின் குறைபாடாக நான் கருதுகிறேன். முற்காலத்திய சாதிய ஆதிக்கங்களுக்கு எதிரான போராட்டங்களும், சமூக நீதி நிலை நாட்ட வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் நம்முடைய தனிப்பட்ட சாதி அடையாளங்களை சாதிச் சான்றிதழ்கள் மூலமாக நிரந்தரப் படுத்திவிட்டது. இதை விலக்கிய அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்ள யாராலும் இயலவில்லை. என் நிறம் கருப்பு என்பதுடன்
என் சாதியைப் பற்றிய அடையாளத்தையும் சேர்த்தே வைத்திருக்கிறார்கள் அனைவரும்.

ஆதிக்க சாதியென்று பிராமணர்களை எதிர்த்து நடத்தப் பட்ட மாபெரும் சமூக இயக்கத்தின் வெற்றி, மற்ற இனத்திற்கான சமூக பங்கேற்பை/மதிப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இந்த இனங்களுக்குள்ளே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது முதல் சாபக்கேடு. பிராமணர்களின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்த இவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான
தங்களது ஆதிக்க மனப்பான்மையை கைவிட முழுமையாக முன்வராதது இரண்டாவது சாபக்கேடு . பிராமணர்களுக்கும் பிற சாதியினருக்கும் இடயேயான சாதிக்கலவரங்கள் நிகழ்ந்து உயிர் பலியாகி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பிற சாதியினருக்கிடையே சாதிக்கலவரங்கள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயிருக்கிறது தமிழகத்தில்.பெரியார் புகழ் துதிக்கும் பல்வேறு சமூக அமைப்புகளும் ,அரசியல் கட்சிகளும் இவ்வகையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்துள்ளன/இருக்கின்றன. பிராமணர்கள் சம்பந்தப்படாத சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு இக் கட்சிகள் அடிகோலிவிட்டன.

இன்றைய சமூகத்துறையில் இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளால் விளைந்துவிட்ட தீமைகள் ஏராளம். அரசியல் கட்சிகளின் சாதிய அடிப்படையிலான வேட்பாளர் தேர்வுகள். அரசு இயந்திரங்களில் ஊடுருவியிருக்கும் சாதிய உணர்வுகள், பெருகிவரும் சாதிய சங்கங்கள் இவையெல்லாம் சாதி என்ற அடையாளத்தை ஒருவனுக்கு தொடர்ந்து நினைவூட்டும் வண்ணம் இயங்கி வருகின்றன."சாதி அடிப்படையில் புறக்கணிப்பு" என்ற சமூக அநீதியை எதிர்த்து போராடிய பெரியாருக்கு நன்றிக்கடனாக சாதிய அடையாளங்களை மறந்து விடாத சமூக அமைப்பை உருவாக்கி நன்றிக்கடன் செய்திருக்கிறோம் நாம்.சலுகைக்களுக்காக பிற்படுத்தப் பட்டவனாக அடையாளம் காணப்படுவதில் நமக்கு எவ்வித கௌரவக் குறைச்சலும் இல்லை.

அடையாளம் அடையாளம் என்று திரும்ப திரும்ப புலம்புகிறான் என்று சொல்கிறீர்களா? இதனால் ஏற்படும் சிக்கல்தான் இப்பிரச்சனையை நிரந்தரப்படுத்தி விடுகிறது. சாதிய அடிப்டையில் ஒன்றிணைவது என்பது மாணவ சமூகத்திலுருந்தேதொடங்கி விடுகிறது. இதன் வீச்சை நான் முழுமையாக உணர்ந்தது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மேலாண்மை பயின்ற போதுதான். இரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கிடையேயான போட்டி, மெஸ் செகரட்டரி, சேர்மன் என்ற பல்வேறு தேர்வுகளில் வெளிப்பட்டது. இந்த போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வாங்கிய ஆசிரியர்களும் செயல்பட்டது மிகவும் அதிர்ச்சிக்குரிய உண்மை.கல்வியறிவு நாகரீகத்தை மேம்படுத்தவில்லை.சாதிய உணர்வுகளைவலுப்படுத்துகிறது.அரசியல் உணர்வுகள் மாணவர்களிடையே குறைந்து வருகிறது என்று மாலன் சொன்னார். ஆனால் சாதிய உணர்வுகள் வலுப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று உரக்கச் சொன்ன சமூக ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கு சாதி வேண்டாம் எனச் சொல்ல தைரியமில்லை.

பொது நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் சாதி அடிப்படையிலான சங்கங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்காக தனி சங்கங்கள் வைத்துக் கொள்கிறார்கள். வேலையென்று உள்ளே நுழைந்த பின்பும், இணைந்திருப்பதில் என்ன பிரச்சனை? பிரிந்திருப்பது புறக்கணிப்பாலா? அல்லது சவுகர்யத்திற்காகவா?.

ஆனால் இத்தகைய பிற இனத்தவர்களையெல்லாம் ஒன்றுசேர்க்கும் விசயம் "பிராமணீய எதிர்ப்பு". அவ்வப்போது அது வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி நிகழும். தனக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குழிபறிப்பது மறந்து போகும்.

பார்ப்பார் பட்டி, கீரிப்பட்டி என்ற இரு ஊர்களில் பஞ்சாயத்து தேர்தல் நிகழ்வது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. இதுரிசர்வ்ட் தொகுதி. தலித் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஏனென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை. இந்திய சனநாயகத்திற்கு இடப்பட்ட மிகப்பெரிய சவால் இது. தாழ்த்தப்பட்டவர்களிம் ஆளுமையை
ஏற்றுக்கொள்ளாத பிற இன மக்கள். பெரியார் புகழ் போற்றும் அனத்துக் கட்சிகளும் தீர்க்க இயலாத விசயம். மீண்டும் இங்கே தேர்தல் விரைவில் நடக்கப் போகிறது.இவ் விசயத்தில் எங்கே போனது சமூக நீதி?

இதற்கான விடைகளை காணும் தைரியம் இருக்கிறதா நம்மிடம்.இதை விடுத்து வரலாற்றினை அலசவும் படிக்கவும் எனக்கு விருப்பமில்லை.

No comments: