Monday, October 04, 2004

பரணிலிருந்து...

சருகுகளில் நடக்காதீர்

இந்த சமுத்திரங்களில்
சமாதியான
எரி நட்சத்திரங்களில்..
அது மட்டும்
உறைந்து .
பாறையானது

நான் தொலைத்த
கவிதைகளில்
அது மட்டும்
காற்றுடன் சேர்ந்து
பாடலானது.

சரணாலயத்தை விட்டு
அப்பறவை வெளியேறிய
கணம் முதல்
என் கடிகாரங்கள்
நின்று போயின

எட்டாத மரங்களின்
கனிகளைப் பார்த்து
நரிகள் புளிக்கும் எனலாம்.
கவிதையோ
கண்ணீர் விட்டது.

விலாசங்களை
விசாரித்து வைக்காத
ரயில் ஸ்னேகம் போல்..
ஜனநாயகத்தை கொன்று
கலைக்கப்பட்ட சட்டசபை போல்.
என் காதல்.

காகிதத்தில்
அநதப் பூ
சிதற விட்ட
மகரந்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்.
அதே வேளையில்
மணத்தை சுவாசிக்கக் கூடாது
என்று நாசிகளை
மூடி வைத்திருக்கிறேன்.

அந்தப் பறவை
பறந்து போக
இம்மரம்
இலையுதிர்த்து
வருத்தப்பட..

தயவு செய்து
சருகுகளில் நடக்காதீர்.
அதில்
மறைத்து வைத்த
என் கதை வரும்.
மறக்க நினைக்கும்
அவள் நினைவும் வரும்

எழுதிய ஆண்டு : 1992.

நன்றி : தன் கையெழுத்தில் 1992ம் ஆண்டு நகலெடுத்துக் கொடுத்த நண்பன் மூக்கன் சுந்தர்ராஜனுக்கு. என்னிடம் நகல் பத்திரமாக இருக்கிறது


No comments: