Tuesday, November 16, 2004

..திருக்கலாம்

கவனித்திருக்கலாம்
எல்லோருக்கும் புது ஆடைகள்
வாங்கித் தந்த அப்பா
தனக்கு மட்டும் நாலுமுழ வேட்டியுடன்
நிறுத்திக் கொண்டதை.

தந்திருக்கலாம்
பக்கத்து வீட்டு
கிறிஸ்தவ சிறுவனின்
பட்டாசு ஆர்வத்தை உணர்ந்து
வெடிப்பதற்கு
ஒரு வெடியை.

கேட்டிருக்கலாம்
பள்ளியில்
தீபாவளி அடுத்த தினம்
அனைவரும் வண்ண உடை அணிந்திருக்க
சிலர் மட்டும் அணியாமல் வந்த காரணத்தை.

அறிந்திருக்கலாம்
பக்கத்து வீட்டு
சுப்பு
கையில் வைத்து வெடித்த
சீனிசரம் எல்லாம் என் அக்காவை
கவரத்தான் என்பதை.

உணர்ந்திருக்கலாம் கடவுளை
என்னிடம் வெடிக்காத வெடி
குப்பை பொறுக்கிப் போன
குப்பத்து சிறுவனுக்கு
வெடித்துத் தந்த
மகிழ்ச்சியில்..

(தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த என் கவிதை)

No comments: