Monday, November 22, 2004

சங்கர சதுரங்கம்

ஊரே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என நினைத்தேன். கிட்டத்தட்ட ஒருவாரம் கழிந்து விட்ட நிலையில், ஆடு புலி ஆட்டமாக துவங்கிய நிகழ்வு, சதுரங்கமாய் மாறிவிட்ட தருணத்தில் மெளனத்தை தொடர முடியவில்லை. ஜெயேந்திரரின் எதிர்ப்பாளர்கள் கை முற்றிலும் ஓங்கியிருந்த நிலை மாறி தற்பொழுது ஆதரவு வாதங்களை சிலர் முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.

'இது மடத்தின் பதவியிலிருந்தவர் செய்த தவறு. இதற்கு மடத்தை குறை கூற முடியாது''என விளித்து ஒரு சாரார் மடத்தின் பெருமை காக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். கல்கியும் இதே ரீதியில் தலையங்கம் எழுதியிருக்கிறது. ஆனால் ஊடகத்தில் கசிந்திருக்கும் பல்வேறு செய்திகளில் ஓரளவே உண்மை என எடுத்துக் கொண்டாலும் மடத்தின் நிர்வாகம் புரையோடிப்போயிருப்பதையும், அதிகாரப் போட்டிகள் நிலவி வந்திருப்பதையும் உணர முடிகிறது. அனைத்து நிர்வாக அமைப்புக்களிலும் அரசியல் என்பது தவிர்க்க முடியாத அம்சம் என்பதை கருத்தில் கொண்டாலும், அது நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கோ, நிர்வாகத்தின் குறிக்கோளை சிதைப்பதற்கோ காரணமாக அமையும் போது ஆபத்தான அம்சமாக மாறிவிடுகிறது. இந்து மதத்தின் பெருமையின் அடையாளமாக சங்கரமடத்தை குறிப்பிடுவோர்கள், இந்து மதத்தின் மேல் உண்மையாக மதிப்பிருக்கும் பட்சத்தில் மட அரசியல் நிர்வாகத்தை சிதைப்பதை ஆட்சேபணை இன்றி அனுமதித்தது ஏன் என்று தெரியவில்லை. மதத்தைக் காட்டிலும் மடங்கள் பிரதானப்படுத்தப்பட்டதன் விளைவு இது. இன்று பிரச்சனைகள் சிக்கலான பின் குறைகள் கூறிப் பயனில்லை

ஜெயேந்திரருக்கான ஆதரவு வாதங்களை மூன்றுவகையாகப் பிரிக்கலாம்

முதல் வகை-கைது செய்த விதம், சிறையிலடைக்கப் பட்ட விதம் முதலிய நடவடிக்கைகளை குறை கூறி, சாமான்ய மனிதனைப் போல சங்கரரையும் நடத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில் உதிர்க்கப்பட்ட வாதங்கள். குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிற பெரிய மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையே என்ற வேதனை ( கல்கியின் தலையங்கமும் இதே தொனியில் எழுதப்பட்டது

இரண்டாவது வகை- பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து சார்பு அமைப்புக்களின் நிலைப்பாடு. இது தர்க்கவியலைப் புறக்கணித்த உணர்வுரீதியான வாதங்கள் - காங்கிரஸின் சதி, ராஜசேகர் ரெட்டியின் சதி, வெளிநாட்டு சதி என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கைதுக்கு காரணகர்த்தாவான ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்து ஒரு குரல் கூட எழுப்பவில்லை

மூன்றாவது வகை- மற்ற மதத்தலைவர்களை நடத்தும் முறையுடன் ஒப்பிட்டு , ஒரு இந்துமதத் தலைவரை இவ்வாறு நடத்துகிறார்களே என வெளியிடப்பட்ட ஆதங்கம்.

ஆனாலும் அனைத்துத்தரப்பினராலும், சங்கராச்சாரியார் இதைச்செய்திருக்கமாட்டார் என தைரியமாக வாதாட இயலவில்லை. இது நெருப்பில்லாமல் புகையாது என்ற சந்தேகத்தை சாதாரண மக்களிடம் வலுப்படுத்திவிட்டது.

என்னுடைய பார்வையில் கைது செய்த அரசாங்க நிர்வாகத்தை எடுத்து போரிடுவதைக் காட்டிலும், இவ்வாறான சம்பங்களுக்கு காரணமான மட நிர்வாகப் பிரச்சனைகளுக்கு எதிராக போரிடுவதே இந்து மதப் பெருமையைக் காப்பாற்ற விரும்புவர்கள் உண்மையாக செய்ய வேண்டிய செயல். ஜயேந்திரர் கொலைக்குற்றவாளியா ? இல்லையா? என்பது தற்பொழுது முன்னிலைப்படுத்தப் பட்டுள்ள பிரச்சனை என்றாலும், இவ்வகையான சிக்கலுக்கு ஆதாரமாக அமைந்த காரணம் என்ற கேள்வியும், மட நிர்வாகம் புரையோடியிருப்பதும், அதிகாரப் போட்டி நிலவுவது உண்மையா என்ற கேள்விக்கும் விடை காணப்பட வேண்டிய அவசியம் மடத்தின் பக்தர்களுக்கு இருக்கிறது.

பிள்ளைப்பேறு வேண்டிக்கொண்டும், செய்வினையும் நீக்கிக் கொள்வதற்கும் சாமன்யர்கள் அணுகுகின்ற சாமியார்களின் மடங்களில் அதிகாரப் போட்டிகள் என்றால் மன்னித்து விடலாம். அங்கே செல்பவர்களும் ஏமாந்த சோணகிரி மக்களே. ஆனால் சங்கர மட பக்தர்கள் பட்டியலில் அறிவு ஜீவிகள் பலர் இடம் பெறுகிறார்கள். இத்தகைய அறிவி ஜீவிக் கும்பலில் மடத்தின் நிர்வாகத்தை சிதையாமல் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை கொண்டவர் யாருமே இல்லையா?

இன்று மீடியாவில் உலவி வரும் யூகங்கள் நேற்று புதிதாக உதித்தவை அல்ல. இவற்றை முன்பு மீடியாக்கள் சட்டை செய்யவில்லை. கைதுக்கு பின் அதை பெரிதாக ஊதிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி மடப்பூசலைப் பற்றி சங்கரமடத்தின் சாமான்ய பக்தனும் அறிந்திருப்பதாகத்தான் படுகிறது. அவ்வாறிருக்கும் பட்சத்தில் மடத்தை இந்துமத பெருமையின் அடையாளமாக கொண்டாடுவோர் மவுனம் சாதித்தது ஏன்?

அரசியல்வாதி சிக்கலில் மாட்டுவதற்கும், மடாதிபதி சிக்கலில் மாட்டுவதற்கும் இடையேயான நடைமுறை வித்தியாசங்களை இந்த வழக்கின் மூலம் உணர முடிகிறது.அரசியல் தலைவர் சிக்கலில் மாட்டும் போது அதை எதிர்கொள்ள கட்சி நிர்வாகம் சட்ட ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் தயார் நிலையில் எப்பொழுதும் உள்ளது. அழகிரியின் கைதின் போது திமுக கையாண்ட அரசியல் உத்திகளும், சட்ட உத்திகளும் இதை உலகிற்கு எடுத்துக்காட்டின.சங்கராச்சாரியாருக்கு சிக்கல் வந்தபோது அதை எதிர்கொள்ள மட நிர்வாகம் தயார் நிலையில் இல்லை.

மக்களும் அரசியல் தலைவர் மீதான குற்றத்தையும், மதத்தலைவர் மீதான குற்றத்தையும் இருவேறு விதமாக பார்க்கிறார்கள். அரசியல் தலைவர்கள் குற்றத்தை ஒரு தேர்தலில் எதிர்த்து ஓட்டுப்போடுவதுடன் மறந்து போகும் மக்கள், மதத் தலைவருக்கு அதே விதமான மன்னிப்பை வழங்க தயாராக இல்லை. இதனால்தான் அரசியல்வாதிக்கு ஒரு நியாயம், மதத்தலைவருக்கு ஒரு நியாயமா? என்ற வாதம் செல்லுபடியாகாமல் போனது.

சங்கராச்சாரியாரை சிக்கலில் மாட்டியதற்கு இரண்டு முக்கிய பிரச்சனைகளை தவிர வேறு காரணம் இருக்கப் போவதில்லை என்பது என் கருத்து.

முதலாவது காரணம்,மடத்தின் உள்விவகார நிர்வாகப் பிரச்சனைகள். இதன் மூலமாக பின்னப்பட்ட வலையில் ஜெயேந்திரர் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜெயேந்திரரைத் தவிர குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கும் சிலர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டியவுள்ளது. அவர்களை விடுத்து ஜெயேந்திரரை மட்டும் கைது செய்தது ஏன்? இப்பிரச்சனையை ஏன் யாரும் எழுப்ப மறுக்கிறார்கள்? ஜெயேந்திரரை பற்றி தலையங்கம் எழுதும் இந்து ராம், விஜயேந்திரரை வரவேற்க ஆந்திரா செல்வது ஏன்? கொலைவழக்கைப் பற்றி விரிவாக எழுதும் ஹிந்து மட அரசியலைப் பற்றி எழுத மறுப்பதேன்?இக்கேள்விகளுக்கு விடையில்லாததால் இச்சிக்கலின் ஆதாரப் பிரச்சனைகளை அலச அறிவு ஜீவி பக்தர்கள் யாரும் தயாராயில்லை என்ற முடிவுக்குத்தான் நம்மால் வர முடிகிறது. மேற்கொண்டு "மடத்தின் தலைமை என்பது வேறு, மடம் என்பது வேறு" என தத்துவம் பேசுகிறார்கள். நிர்வாக குழப்படியில் ஒருவொருக்கொருவர் குழி பறித்து, திராவிடக் கட்சிகள் கிண்டலடிக்கும் நிலையில் மடத்தைக் கொண்டுவந்து விட்டு விட்டார்கள்.இந்த நிலைமைக்கு காரணமானவர்களை பொறுத்துப் போவது எவ்விதமான இந்து அபிமானம்? இதைப் பற்றி ஏன் பாரதீய ஜனதாவும், மற்ற இந்து அமைப்புக்களும் கேள்வி எழுப்பவில்லை?

இரண்டாவது காரணம், முதல்வருக்கும், ஜெயேந்திரருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள். இதுவும் உண்மையாயிருக்கும் பட்சத்தில் இதை எதிர்கொள்வதற்கு வலிமை மிகவும் அவசியம். அது இந்து மதத்தின் காவலராக முதல்வரை சிலகாலம் முன்பு வரை போற்றி வந்த இந்துசார்பு அமைப்புகளுக்கு கிடையாது. இவர்கள் இன்னமும் கலைஞரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாயையே மெல்லும் அவருக்கு அவல் போட்டால் சும்மா விடுவாரா? அதைத்தான் கலைஞர் செய்கிறார்.
இப்பிரச்சனையில் அனைத்து வழிகளிலும் பயன்பெறுபவராக இருப்பவர் முதல்வர் மட்டுமே. இவரை எதிர்கொள்ள வேண்டுமானால் பல உண்மைகளை பேசுவதற்கு இந்து மதக் காவலர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது இயலாத நிலை.2002 ல் நடந்த ராதகிருஷ்ணன் மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டாண்டு காலம் கண்டுபிடிக்காதது ஏன்? காவல் துறையின் திறமையின்மைதான் காரணமா? இல்லையென்றால் இப்போது ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபின், அந்த வழக்கு தூசி தட்டப்படுவதற்கு, ஜாமீன் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணமா? இரண்டாண்டுகளாக குற்றவாளி கண்டுபிடிக்கப்படாததற்கு, முதல்வர் தார்மீக பொறுப்பேற்பாரா? நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, இவ்வழக்கைப் பற்றி விலாவாரியாக விளக்கி சட்டமன்றத்தில் பேசுவது உரிமை மீறல் இல்லையா? இதே மாதிரி அழகிரியின் வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் பேசியிருந்தால் திமுக சும்மாயிருக்குமா? இப்போது மட்டும் அவர்களும் சேர்ந்து மண்டையாட்டுவது ஏன்?

ஒரு ஸ்தாபனம் சோதனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நியாய பலம், தொண்டர் பலம், அரசியல் பலம் என மூன்று பலம் வேண்டும்.

தொண்டர் பலம் சிறிய மனித சங்கலி அமைக்கும் அளவிலும், ஈ- மெயில் அனுப்புமள்விலும்,லெட்டர்ஸ் டு எடிட்டர் எழுதும் அளவில்தான் இருக்கிறது. சென்னையில் நடக்கும் பிரச்சனைக்கு டெல்லியில் வெற்றிகரமாக (??) உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அரசியல் பலம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. எதிரணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை இரண்டும் இல்லாவிட்டாலும் கூட நியாயபலம் இருந்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இவ்வழக்கில் ஜெயேந்திரருக்கும், கொலைக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முடிந்தாலும் கூட, மடத்திற்கும், இக்கொலைக்கும் சம்பந்தமில்லை என நீருபிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு நியாய பலம் அவசியமில்லை. ஒரு மதஸ்தாபனத்திற்கு இது மிகவும் அவசியமாகிறது.

நியாயத்தின் பலம்தான் சங்கரமடத்திற்கு வந்திருக்கும் சோதனை.

எப்படி நீக்கமுடியும் இந்த களங்கத்தை?

No comments: