Thursday, May 26, 2005

பொறியியல் கல்வி- நுழைவுத் தேர்வு தேவையா?

நுழைவுத் தேர்வு என்பது சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாகிவிட்டது. இன்று நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று மருத்துவர் ராம்தாஸ் மற்றும் ஜி. கே வாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளும், நேற்று முனைவர் ஆனந்தக் கிருஷ்ணன் " பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகிறார்கள்" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். இவற்றை அரசியல்வாதிகளின் மற்றுமொரு அறிக்கை என ஒதுக்கித் தள்ள முடியாது. ( முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன் அரசியல்வாதியல்ல)

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்ப்பிற்கு முன்பிருந்த நேர்முகத் தேர்வு முறையை மாற்றி, நுழைவுத்தேர்வு முறையை எம்.ஜி,ஆர் காலத்தில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு கிடைத்த வரவேற்பும், அதனால் விளைந்த பலன்களும் அதிகம். நேர்முகத் தேர்வில் சாத்தியப்பட்ட தில்லுமுல்லுகளை அது களைந்ததோடு, கிராமப்புற மற்றும் கீழ்தட்டு மாணவர்களுக்கும் இடம் கிடைக்க வகை செய்தது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் செய்த மற்றோரு சீர்திருத்தம்-தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தது. ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பிருந்தாலும், இன்று பொறியல் திறன் கொண்ட மனிதவளத்தில் தமிழகம் முண்ணனியில் இருப்பதற்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம்.

ஆனால் பிற்காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகியதும், பல கல்லூரிகள் தரமற்று இயங்குவதும், பொறியியல் கல்வியின் தரம் குலைந்து போனதும் வேறு வகையான பின்விளைவுகள். அவை எல்லா நானயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளது என்ற தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்து விட்டன. இதே தத்துவத்தை உணர்த்தும் வகையில்தான் நுழைவுத்தேர்வுகளும் மாறிவிட்டன.

நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் இடமளிக்கும் முறையின் தற்கால அவசியத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். கல்லூரியில் இட அனுமதி பெறுவதை எளிதாக்கும் நோக்குடன் துவக்கப்பட்ட இத்திட்டம், பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக தற்போது மாறிவிட்டது. இத்திட்டல் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் இத் தேர்வு எழுதுவதற்காக விசேடமான ஆயத்தங்கள் செய்வது அவசியமில்லாமல் இருந்தது. பெரும்பாலும் 12ம் வகுப்புக்குரிய பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இதைத் தவிர பொது அறிவுக் கேள்விகள் சில கேட்கப்படும். நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள்,அவர்கள் நகர்புறத்தில் படிப்பவர்களானாலும் சரி, கிராமப்புரத்தில் படிப்பவர்களானாலும் சரி, நல்ல மதிபெண்கள் எடுக்கும் வகையில் நுழைவுத் தேர்வு அமைந்திருந்தது.தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு,100 மதிப்பெண்களாக மாற்றப்பட்டது.கேட்கப்பட்ட கடினக் கேள்விகளின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.

இவ்வகையான மாற்றம் மாணவர்களின் சுமையை அதிகப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. 12ம் வகுப்புத் தேர்விற்கு ஆயத்தம் செய்வதோடு, நுழைவுத்தேர்விற்கும் தனியாக விசேடமாக ஆயத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள். நுழைவுத்தேர்வெழுத மாணவர்களுக்கு பயிற்சி தருவதற்காக தனியார் பயிற்சி நிறுவனங்கள் உருவாகின. இவர்களது கட்டணமும் பல ஆயிரங்களாக உயர்ந்து நிற்கிறது. நுழைவுத்தேர்வில் கடினக் கேள்விகளின் சதவிகிதம் அதிகரித்த நிலையில் பயிற்சி பெறாத மாணவர்கள் தேர்வில் பரிமளிக்க இயலாத நிலை ஏற்பட்டு போனது.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளானவர்கள் அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஏழை மாணவர்களுமேயாகும .இப்பள்ளிகளில் ஒழுங்காக பாடம் சொல்லித்தரவே ஆசியர்கள் இல்லை. இச்சூழ்நிலையில் நுழைவுத்தேர்விற்கான பயிற்சியை யார் அளிப்பார்கள்?

தனியார் பயிற்சிநிலையங்களில் சேர்ந்து பயில தேவையான வசதி இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், மற்ற ஏழை மாணவர்களுக்கும் இருக்கிறதா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் இறுதித் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தால் கூட, நுழைவுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த காரணத்தால் ஏழை மாணவர்கள் வாய்ப்பிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறதே? இதன் மூலம் நகர்புற மாணவர்களும், வசதி படைத்தோரும் மட்டும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு நடைமுறை இருக்கலாமா?

இக்கேள்விகளை தேவையற்றது என ஒதுக்கித் தள்ள முடியாது. கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைவாக மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். எனவே மதிப்பெண் தரப்பட்டியலை வெளியிடக் கூடாது என கூறியிருக்கிறார் மருத்துவர் ராம்தாஸ். இதற்கான புள்ளிவிவரம் அவரிடம் உள்ளதா? என்பது தெரியவில்லை. அதற்கான சரியான புள்ளி விவரம் உள்ள பட்சத்தில், இந்த சமனற்ற தன்மை நிவர்த்தி செய்ய வேண்டியதுதான்.

மாணவனின் சுமையை அதிகரிக்கும் மற்றுமொரு அம்சம்- பல்வேறு நுழைவுத் தேர்வுகள். இவை தேவையில்லாத ஒன்று. நுழைவுத் தேர்வின் அவசியமே புதிராகிப் போன காலக்கட்டத்தில் , பிராந்திய அளவில் நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் தேவையில்லாதுதான். மாநில அளவில் CAT போன்ற ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி அதனடிப்படையில் மாணவர்சேர்ப்பு நடத்துவதே உசிதமான செயல்.

நுழைவுத் தேர்வினால் உள்ள் சிறப்புப் பயன் என்ன? நுழைவு தேர்வு தவிர்த்த, பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டும் ஏன் இட அனுமதி தரக்கூடாது? புரபசனல் கோர்ஸ் என்பதால் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு வைத்துத்தான் சேர்க்க வேண்டுமா? நுழைவுத் தேர்வில் 5 மார்க் வாங்கியவன் கூட ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் பெற்று எஞ்சினியராகும் கூத்தெல்லாம் நடக்கிறதே-இவ்வாறிருக்க நுழைவுத்தேர்வால் என்ன பயன்?

நுழைவுத்தேர்வுக்கான அவசியத்தை மறுபரீசலனை செய்து, அதனை சீரமைப்பதற்கான தருணம் இது என்றே நான் கருதுகிறேன்.

1 comment:

Boston Bala said...

தேவையான பதிவு. பத்ரியும் இது குறித்து சில மாதம் முன்பு எழுதியிருந்தார். என்னுடைய முந்தைய பதிவு: நுழைவுத் தேர்வுகளைத் தவிர்ப்போம்