Thursday, June 23, 2005

நட்சத்திரப் பாடல்கள் #2

கதையோட்டத்திற்கு பாடல்கள் வலுச்சேர்க்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நான் இங்கே குறிப்பிடப் போகும் பாடல்.தேவையான இடங்களில் பாடல்களை வைத்து, சிறப்பாக படமாக்கி கதைக்கு அழுத்தம் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க இயக்குநர் கே. பாலச்சந்தர்.கே.பி.யின் படப் பாடல்களை இசை மற்றும் பாடல் வரிகளையும் தாண்டி,அவர் காட்டியிருக்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் உள்வாங்கி ரசிக்க முடியும்.சில தருணங்களில் அக்கதாபாத்திரங்களாய் நம்மை கற்பனை செய்து கொண்டும் பாடமுடியும். நீர்குமிழியின்"ஆடிஅடங்கும்வாழ்க்கையடா"விலிருந்து,சிந்து பைரவியின்" பூ மாலை வாங்கி வந்தேன்" வரை பல உதாரணங்களை கூற முடியும்.

இங்கே நான் குறிப்பிடும் பாடல்

பாடல்:இப்படி ஓர் தாலாட்டு பாடவா
படம்: அவர்கள்
பாடகர்: எஸ். ஜானகி
இயக்குநர்: கே. பாலச்சந்தர்
இயற்றியவர்: கண்ணதாசன்


புல்லாங்குழல் வாசிக்கும் கதாநாயகன், அவனை காதலித்த அனு, சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட பிரிவு, சதியினால் நிகழாத கல்யாணம்( பரணியுடன்) மற்றும் நிகழ்ந்த கல்யாணம் ( ராமநாதனுடன்). ராமநாதனை பிரிந்து சென்னை வரும் அனு மீண்டும் பரணியை பார்க்க நேரிடுகிறது. இருவரும் பழைய நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம். துயரங்கள் மேலிட்டாலும், அழாமலே இரு கதாபாத்திரங்களும் தன்னுடய இடைக்கால நிகழ்வுகளை உணர்ச்சி வசப்படாமல் பகிர்ந்து கொள்கின்றன. பரணி தன் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு தன் புல்லாங்குழல் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். அனு தன் கதையை குழந்தையின் தாலாட்டாகச் சொல்ல, பரணியின் புல்லாங்குழல் இசை அவளுடன் இணைந்து கொள்கிறது.


இப்பாடலை கேட்கும்போதெல்லாம் மெட்டுக்கு பாட்டெழுதினார்களா அல்லது பாட்டுக்கு மெட்டெழுதினார்களா என கேள்வி எழுவதுண்டு. மெட்டுக்கு பாட்டெழுதிய பட்சத்தில், சூழ்நிலையை உள்வாங்கி, அதனை எளிமையான வார்த்தைகளில் அனலாய் சுடும் விதத்தில் தெறிக்கவிட்டிருக்கும் கண்ணதாசனின் திறமை தெய்வீகமானது.

அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைத்தாள்
ஆனால் அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்.
அதுவரைதான் தன் கதையை என்னிடம் சொன்னாள்
நான் அதிலிருந்த என்கதையை உன்னிடம் சொன்னேன்.


அனு என்ற கதாபாத்திரத்தின் ஆற்றாமையை, அவள் வாழ்வின் நிகழ்வுகளி இவ்வளவு சுருக்கமாக எடுத்துரைக்க கண்ணதாசனால் இயன்றிருக்கிறது. பாடல் வரிகளால் ஒரு பாடலை ரசனைக்குரியதாக்க முடியும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம். இப்பாடலின் இன்னொரு சிறப்பம்சம்- இப்பாடலின் இறுதியில் வரும் புல்லாங்குழல் இசையின் தனிஆவர்த்தனம். விஸ்வநாதன் இப்படத்தில் பாடல்களிலும் சரி, உறுத்தாத பிண்ணனி இசையிலும் சரி- பிரமாதமாக பரிமளித்திருப்பார்.

இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம்- டூயட் பாடல்கள் கிடையாது. ஆண்குரலில் இரு தனிப்பாடல்கள், பெண்குரலில் இரு தனிப்பாடல்கள். இப்படத்திலிருந்து இன்னொரு நட்சத்திரப் பாடல் கண்டிப்பாக உண்டு.

பாடல் வரிகளில் பிழையிருந்தால் பொறுத்தருள்க.

No comments: