Monday, January 09, 2006

கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்


இந்தியா-பாகிஸ்தான் தொடரைப் போல கிரிக்கெட் ரசிகர்களையும், பொது மக்களையும் பாதிக்கும் சங்கதிகள் மிகவும் குறைவே. மீடியாவில் இதற்கான முன்னோட்டம் , களத்தில் ஆட்டம் துவங்குவதற்கு பலநாட்கள் முன்பாகவே துவங்கி விடுகிறது.இந்த மீடியா ஆட்டத்தில் பங்கு பெற இரு நாட்டிலும் பல ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் சாதனைகள் செய்தவர்கள். சிலர் வாய்சொல் வீரர்கள்.

இந்தியாவில் வெங்சர்கார், சித்து போன்றோர்கள் இந்திய அணியின் பலத்தை வலியுறுத்தியும், பாகிஸ்தானில் இம்ரான், சப்ராஸ், அக்ரம் போன்றோர்கள் பாகிஸ்தான் பலத்தை அடிக்கோடிட்டும் பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆடப்போகும் இரு தரப்பு அணிகளின் பயிற்சியாளர்களும் சரி, கேப்டன்களும் சரி.. வெகுவாக அடக்கி வாசிக்கிறார்கள் இந்தியாவை புகழ்கிறார் இன்சமாம். வுல்மரை புகழ்கிறார் சாப்பல்.

இதிலிருந்து கண்கூடாகத் தெரிவது.. இரு நாடுகளுமே "பேவரைட்ஸ்" என்று முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை. "அண்டர் டாக்" ஆக கணிக்கப்படுவது அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுவதாக கருதுகிறார்கள். இரு நாடுகளுக்குமான சாதக அம்சங்கள் என கூறப்படுபவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன்.முதலில் பாகிஸ்தான்
  • போட்டி நிகழும் காலம்-குளிர்காலம் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், அதனால் குறிப்பாக பாக். வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும்.
  • பாக். பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இந்திய பந்து வீச்சாளர்களை காட்டிலும் வல்லவர்கள்.
  • சாகிப் அக்தர் மிகவும் ஒழுக்கத்துடனும், நேர்த்தியாகவும் பந்து வீசுவதால் அதிக விக்கெட்டுக்களை இம்முறை வீழ்த்தக் கூடும். அக்தரின் மெதுபந்துகள் (slow ball), அவரது அதீத வேகக்குறைப்பால் ( 145 கி.மீ லிருந்து 110 கி.மீ) இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும்.
  • இன்சமாம் உல்ஹக் பிரமாதமான பார்மில் இருக்கிறார்.
  • பாக் பந்து எழும்பும் மைதானங்களை தயாரிக்கும்.எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்.

இந்திய அணியின் சாதகமான அம்சங்களாக முன்வைக்கப் படுவது.

  • சிறந்த மித வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிற்கு உதவும்படி களம் தயாரித்தால் அதை சாதகமாக்கிக் கொள்ள இந்திய பந்து வீச்சாளர்களாலும் இயலும்.
  • இந்திய மட்டையாளர்களின் திறன். குறிப்பாக சேவாக்,திராவிட் மற்றும் சச்சின்.
  • இப்ரான் பதான்.


இரு அணிகளுமே மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் காட்டிலும் மேலும் பல பலம் மற்றும் பலவீனங்களை உள்ளடக்கியுள்ளன.என்னுடைய பார்வையில் எந்த அணி மனோ உறுதியுடனும், அதற்கும் மேலாக ஒழுக்கத்துடனும் விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். ஒழுக்கம் என்பது நேர்த்தியுடன் பந்து வீசுவது, சூழ்நிலைக்கேற்ப பேட் செய்வது, ஒழுங்காக கேட்சுக்களை பிடிப்பது, ரன்களை தடுப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.


மற்ற அணிகளுக்கும்,இந்திய துணைக்கண்ட அணிகளுக்குமான வித்தியாசமே கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறையில்தான் இருக்கிறது. நோ- பால்களை வீசும் அக்தர், கால்களை சரியாக நகர்த்தாமல் கவர் டிரைவ் செய்யும் லஷ்மண் -ஆகியோர் திறமையிருந்தும் ஒழுக்கமற்றவர்களாகவே கருதப்படுவர். ஆனால் வெளிநாட்டு கோச்சுக்களின் உதவியால் இரு அணிகளும் தங்கள் அணுகுமுறையை வெகுவாக சீர்திருத்தியிருக்கின்றன.


என் பார்வையில் சோபிக்க் கூடிய ஆட்டக்காரர்கள்

பாகிஸ்தான்

நவீத் அல் ஹூசைன்
கம்ரான் அக்மல்
முகம்மது யூசுப்
அப்ரிதீ ( பிப்டி, பிப்டி)


இந்தியா

லஷ்மண் ( சோபிக்கா விட்டால் இந்திய அணியிலிருந்து கல்தா)
அனில் கும்ப்ளே
சேவாக்

திராவிட், சச்சின், இன்சமாம் போன்ற வல்லவர்களை பற்றி தனிப்பட்ட யூகம் செய்ய விரும்பவில்லை.


சர்ப்ராஜ் நவாஜ் கூறிய ஒரு கருத்து அனைவராலும் கவனித்தில் கொள்ள வெண்டியது. இந்திய பாக் தொடரில் , குறிப்பாக பாகிஸ்தானில் இரு அனிகளுமே நன்றாக இன்னிங்ஸை துவக்கும். ஆனால் திடீரென ஒரு வீழ்ச்சி நிகழ்ந்து விக்கெட்டுக்கள் மடமடவென சரியும். பெரும்பாலும் பாகிஸ்தான் இந்தியாவை அவ்வாறு சுருட்டியிருக்கிறது. எந்த அணி அத்தகைய வீழ்ச்சிக்கு இடம் கொடுக்காதோ அந்த அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.

கலக்குவோமா? கலங்குவோமா?- பொறுத்திருந்து பார்ப்போம்.

2 comments:

Mey said...

கலக்கலோ , கலக்கமோ , கட்டுரை கலக்கலாக இருக்கிறது.

Unknown said...

ராஜ்குமார்,
உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்..இருந்தாலும் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.