Wednesday, May 03, 2006

அரசு ஊழியர்- உடைபட வேண்டிய பிம்பங்கள்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அதிமுக அரசு கையாண்ட விதத்தை குறித்த குழலியின் பதிவு இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்கள் ஒரு காலஞ் சென்ற அரசு ஊழியரின் மகனான என்னை கோபப்பட வைத்தன என்றாலும் , இக்கட்டுரை வெற்று கோபத்தில் விளைந்த பதில் வசவு அல்ல. முடிந்த வரை தெளிவாக அரசு ஊழியர்களை குறித்து நிலவும் போலி பிம்பங்களை உடைத்து, அவர்களின் சிரமங்களை எடுத்துரைக்கும் முயற்சியே. அதையும் மீறி நான் ஒருசார்புநிலையில்தான் எழுதியுள்ளேன் என்று சிலர் குற்றம் சாட்டினாலும் அதற்காக வருந்தப் போவதில்லை.

அரசு ஊழியர்கள் என்ற கூட்டமைப்பில் பலதரபட்ட பணிகள் செய்யும் படித்த மற்றும் படிக்காத மக்கள் அடங்கியுள்ளார்கள். சுதந்திரத்திற்கு பின் கல்வியில் சிறந்த மாணவர் மற்றும் மாணவியரின் கனவாக அரசு ஊழியம் இருந்தது. வேறு எவ்வித துறைகளிலும் வேலை வாய்ப்புக்கள் அதிகமில்லாத பட்சத்தில், அதிக சம்பளத்தை காட்டிலும், பணி நிரந்தரம் முக்கியத்துவம் பெற்றிருந்த காலக் கட்டத்தில் அரசாங்க வேலை அனைவரையும் ஈர்த்தது.இதனால் கல்வியில் சிறந்த பலர் அரசாங்க வேலையில் ஈடுபட்டு, நலத்திட்டங்களை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் ,சுழலும் காலக்கட்டத்தில் தனியார் துறையின் வளர்ச்சியையும், அதன் அதிக வருமானம் ஈட்டும் சாத்தியத்தையும் காண நேர்ந்தது. அவர்களை காட்டிலும் திறமை குறைவானவர்கள் அதிக பொருளீட்டுவதை காண நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் பணிநிரந்தரம், நீண்டகால பாதுகாப்பு ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அரசாங்க வேலைக்கு சமூகம் கொடுத்திருந்த கவுரவத்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அத்தகைய கவுரவம் கூட கால ஓட்டத்தில் சிதைந்து விட்டது.பணி நிரந்தரமும், நீண்டகால ஓய்வூதிய பாதுகாப்பு மட்டுமே அரசாங்க வேலையின் கவர்ச்சி அம்சங்களாக நிலைத்தன.

மேலே குறிப்பிட்ட கவர்ச்சி அம்சங்களுக்கும் குந்தகம் விளைந்த போது, ஏற்பட்ட குமுறல்தான் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்.இந்த அரசு ஊழியர்களின் குமுறலுக்கு மக்களின் வெளிப்படையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத விசயம்தான். அதற்கு காரணம் குடிமகனுக்கான சேவைகளை தரும் அரசு ஊழியர்களிடம் , சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். ஆனால் இத்தகைய கசப்பான அனுபவங்களுக்கு பின்புலமாக இருக்கும் ஒரு அரசியல் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்ந்து, ஊழலை அரசு ஊழியர்களின் தனிப்பட்ட முகமாக முன்னிலைப்படுத்தி, 94% சதவீத வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு செலவு செய்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து,மக்களுக்கு அரசாங்க ஊழியர்களின் மேல் எவ்வித அனுதாபமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.அரசு ஊழியர்கள் என்றாலே சாதி சான்றிதழுக்கு காசு கேட்கும் அதிகாரி அல்லது டிரைவிங் லைசென்ஸிற்கு காசு கேட்கும் அதிகாரி என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்ட பொது மக்களுக்கும், இவ்வாறான வாய்ப்புக்கள் இல்லாமல்/மனப்பான்மை இல்லாமல் பல லட்ச ஊழியர்கள், மிகவும் மோசமான சூழ்நிலையில் அரசு ஊழியம் செய்கிறார்கள் என்ற உண்மை தெரியாமல் போனது.

அரசாங்கத்தில் ஊழல் மிகுந்த துறைகளாக இருப்பது வரி வசூலிக்கும் வருவாய் துறை,பதிவுத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை போன்றவைதான்.மற்ற துறைகளிலும் ஊழல் இருக்கிறதென்றாலும் அதன் சதவிகிதம் குறைவு.இந்த துறைகளிலும் கூட குடிமகனுக்கான சேவை வழங்கக் கூடிய முன்னிலைப் பணியாளர்கள், சேவை வழங்கும் அதிகாரம் படைத்தவர்களின் எண்ணிக்கை இருபதிலிருந்து, முப்பது சதவிகிதம் இருக்கும்.மீதி எழுபது சதவிகித ஊழியர்கள் அரசாங்க சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பிண்ணனியிலும் வித்தியாசமான தேவைகளும் சிக்கல்களும் இருக்கிறது. அரசு இயந்திரத்திற்கும் ,அரசியல்வாதிகளுக்குமான தவிர்க்க இயலாத தொடர்பு ஊழலின் ஆணிவேர்.அரசு இயந்திரமும் அரசியல்வாதியும் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம்தான். ஆனால் அரசு இயந்திரத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அரசியல்வாதிகளால்தான் ஊழல்கள் மலிந்தன.மக்களுக்கு அரசு அதிகாரிகளால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடைத்தரகர்களாய் பெருகினார்கள் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் .இத்தகைய இடைத்தரகர்களை ஒழிக்காமல் வளரவிட்டது அரசியல் கட்சிகள்தான்.தன் கட்சி தொண்டர்களின் விசுவாசத்திற்காக தரப்படும் பரிசே இடைத்தரகம் செய்வதற்கான உரிமை.

இதற்கு மேலாக அரசியல்வாதிகளின் ஆடம்பரத்திற்கான செலவுகளுக்கு படியளப்பதும் ஊழல் பணம்தான். படைபரிவாரங்களுடன் அமைச்சர் வந்து பள்ளிக்கூடம் ஏதாவது ஒன்றை திறந்து வைப்பார். அந்த படைபரிவாரங்களுக்கு பெட்ரோல் முதற்கொண்டு,பிரியாணி வரை போடுவதற்கான செலவினங்கள் ஒரு பி.டி.ஓ தலையில் விழும். வருமானத்திலிருந்தா செலவு செய்வார் பி.டி.ஓ? இதற்காக செலவு செய்ய லோக்கல் தொழிலதிபர்கள் உண்டு. அதற்காக சில சலுகைகள் எதிர்பாப்ர்பது உண்டு.இடைத்தரகர்களும் இத்தகைய செலவுகளுக்கு உதவுவது உண்டு.இவ்வாறான செயல்களை அரசியல்வாதிகளுக்கு செய்ய மறுக்கும் உரிமை அதிகாரிகளுக்கு கிடையாது. அப்படி மறுத்தால் தண்ணி இல்லா காட்டிற்கு மாற்றப்படுவார். இச்சிக்கலே வேண்டாமென்று பதவி உயர்வை மறுத்து, சாதாரண வேலையை பார்க்கும் பல ஊழியர்களை அரசாங்க அலுவலகத்தில் காணலாம்.

சில ஊழியர்கள் அரசியல் சார்பு நிலை எடுத்து பணம் புரளும் பதவிகளை வாங்கிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அரசியல் சார்புக்கான விலையை உணர்ந்தே இருக்கிறார்கள். மாற்று அரசியல் கட்சியின் ஆட்சியின் போது அனுபவிக்கப் போகும் சிரமங்களுக்கும் சேர்த்தே சம்பாதித்து தங்களை பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு அதிகாரம் மேல்தான் ஆசை. நிரந்தரப் பணி, ஓய்வூதிய பயன்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இத்தகைய அதிகாரிகள் வெகு சொற்பமே. இவர்களை வைத்து ஒட்டு மொத்த அரசு ஊழியர் குழுமத்தை எடைபோடும் தவற்றை மக்கள் செய்து வருகிறார்கள். அதை அரசாங்கமும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது பயன்படுத்திக் கொண்டது.

இந்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்கலையும், நிவாரணப்பணிகளையும் செய்ததாக மார்தட்டிக் கொள்கிறது. இது உண்மையாயயிருக்கும் பட்சத்தில் இதை நிறைவேற்றிய களப்பணியாளனாக இருந்த அரசு ஊழியனையும் நாம் பாராட்டத்தானே வேண்டும்.ஆனால் அவர்களுக்கு எவ்வித பாராட்டும் கிடையாது.அரசாணையில் கையெழுத்துப் போட்ட அரசியல்வாதிகளைத்தான் நாம் பாராட்டுவோம். வெள்ளம் வந்ததோ, வரவில்லையோ, 500 ரூபாய் கமிசன் வாங்கி 2000 ரூபாய் வாங்கிக் கொடுத்த இடைத்தரகனின் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம்.மழையிலும், புயலிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர்?அவர்களது முயற்சியால்தானே நிவாரணப் பணிகளை செம்மையாக மேற்கொண்டோம் என்று மார்தட்ட முடிந்தது?ஆனால் இந்த உண்மைகளை மக்கள் உணரமாட்டார்கள். அரசாங்க ஊழியர்கள் அவர்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்பார்கள்.

அரசாங்க ஊழியர்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்பவர்கள் அரசாங்கத்தை கடமையை செய்ய வலியுறுத்தியிருந்தால் நாம் எப்போதோ உருப்பட்டிருப்போம். ஆனால் அதற்கான ஒன்றுபடுதலோ, வலுவோ தனிமனிதனுக்கு இல்லை என்ற பயத்தை அனைத்து மக்களின் மனத்தில் விதைத்திருப்பதுதான் அரசியல் கட்சிகளின் சாதனை.

சரி. ஆரம்பித்த பிரச்சனைக்கு வருகிறேன். அரசு ஊழியர்கள் ஆதாரமாக நினைத்த ஓய்வூதியப் பயன்களின் குறைப்பே அரசு ஊழியர் பிரச்சனையின் அடிப்படைக் காரணம்.இதனால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட வலியை பொதுமக்கள் உணராமல் செய்ததற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் வாங்குபவர்கள் என்ற பிம்பமும், அரசு ஊழியர்களுக்காக அதிகம் செலவழிக்கப்படுகிறது என்ற பிரச்சாரமும் காரணம்.

இதன் பின்னால் இந்த வேலைநிறுத்தத்தை ஒடுக்க அரசாங்கம் கையாண்ட முறைகளும்,அரசு ஊழியர்களுக்கு இழைத்த அவமானமும் மிகவும் கொடுமையானவை.நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய அரசு ஊழியன் என்ன அரசியல்வாதியா? கைதான பின்பு களிப்புடன் இருக்க ,குடும்பத்தார் அரசியல் கட்சி உறுப்பினர்களா?அடிப்படை ஆதாரமான வேலையையும், சம்பளத்தையும் இழந்து, அதை எப்போது பெறுவோம் என்பதற்காக அலைந்த அரசு ஊழியர்களில் பலர் தற்கொலையைப் பற்றி சிந்தித்தார்கள். இவ்வளவு தூரம் ஒடுக்கப்படுவதற்கு அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?

இத்தகைய அடக்குமுறையை வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரித்தார்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தின் மேலிருந்த பயமே அதற்கு காரணமே தவிர, அரசாங்க ஊழியர்களின் மேலிருந்த வெறுப்பல்ல. இதனை பிரச்சாரம் செய்த கும்பல் உணர்ந்ததோ இல்லையோ, அரசாங்கம் உணர்ந்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னால்.

அரசு இயந்திர சீரமைப்பு என்பது சம்பளக் குறைப்பில் துவக்கக் கூடிய நடவடிக்கையல்ல.நன்றாக பணி செய்பவர்கள் முன்னேறக் கூடிய சாத்தியங்களுடனான ஒரு நிர்வாக அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் தன்னுடைய கடமைகளை அரசு ஊழியர்கள் செய்யக் கூடிய சுதந்திர சூழலை உருவாக்க வேண்டும். இதை செய்ய, ஏன் இதற்கான வாக்குறுதிகளை வழங்கக்கூட ஒரு அரசியல் கட்சியும் முன்வராது. சட்டப்படி இயங்கக்கூடிய ஒரு அமைப்பை பொதுமக்கள் கூட விரும்பாத வேதனையான சூழல்தான் இங்கேயுள்ளது.

ஆர்.டி.ஓ ஆபிஸ் போகாமலே டிரைவிங் லைசென்ஸ் நமக்கு வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் போலிஸ் நம்மை பிடித்தால் ஏதாவது வாங்கிக் கொண்டு விட்டுவிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதை மீறி அவர் கேஸ் போட்டால் அவர் நல்ல அரசு அதிகாரி என்று எப்போதாவாது சொல்கிறோமா? சட்டத்தை மீறுவதற்கான கட்டாயங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான ஒரு குறிப்பிட்ட விலையை கொடுக்க அனவரும் சம்மதத்துடன் இருக்கிறோம். அந்த விலை அதிகரிக்கும் போதுதான் ஊழல் சமுதாயத்தை பற்றிய விழிப்புணர்வு வருகிறது.

வரும் காலக்கட்டங்களில் அரசாங்கத்தின் கடமைகளும், அரசாங்கப் பணியின் பரிமாணங்களும், பணியின் சவால்களும் மாறுபடும்.அப்போது அறிவுத்திறன் மிக்க துடிப்பான இளைஞர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுவார்கள். திறன் வாய்ந்த இளைஞர்களை அரசாங்கம் தனியார் துறைக்கு இழந்து கொண்டிருந்தால் மிஞ்சும் தரம்குறைந்த மனிதவளத்தை வைத்து அரசாங்கம் எவ்வாறு தரமான சேவைகளை வழங்க முடியும்? இத்தகைய சூழல் ஏற்கனெவே உருவாகிவிட்டது. இந்திய ஆட்சிப் பணியில் சேர்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் குறைந்து விட்டது. தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட தனியார் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் அரசு இயந்திரத்தை சீரமைப்பது சம்பளத்தை குறைக்கும் செயலாக அல்லாமல், அரசு வேலையை கவுரமான, வளர்ச்சி வாய்ப்புக்களை உள்ளடக்கிய பணியாக மாற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்.அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்.இவற்றுள் கவனம் செலுத்தாமல் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சலுகைகளில் கைவைக்கும் செயலில் ஈடுபட்டால் நிர்வாக சீர்திருத்தங்கள் துவங்காமலே போய்விடும்.

அரசு ஊழியர்கள் மேல் எடுத்த நடவடிக்கைகளால் அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்கள் என பின்னூட்டம் இடுகிறார் ஜெயக்குமார். ஆனால் இதன் பின்னால் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளை பார்க்கும் போது ,நிர்வாக சீர்திருத்தங்களை கூட செய்ய இயலா நிலைக்கு தன்னை தள்ளிக் கொண்டுவிட்டது அரசு என்றே என்னால் சொல்ல இயலும்.

இந்தியா போன்ற வளரும் நாட்டில், ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த நாட்டில், சமுதாய வேறுபாடுகள் பரவலாக உள்ள நாட்டில், அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்த்து பலர் வாழும் நாட்டில் அரசு இயந்திரம் சீராக இருக்க வேண்டும். இதற்கு சிறந்த இணக்கமான அரசு ஊழியர்கள் அவசியம்.குறைபாடுகளிலிருந்தாலும் இது இயங்க வேண்டியது நாட்டின் நன்மைக்கு அவசியம். ஆனால் இதை ஸ்தம்பிக்க வைத்து, இதன் ஆதாரமான ஊழியர்களை அவமானப்படுத்திய அரசின் செயல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே. இதனை உறுதியான முடிவு என பெருமைப்படுபவர்கள், நாளை வேறு ஒரு சூழலில் இரும்புக்கரம் நெரிக்கும்போது திணறும் மூச்சில்தான் தெரிந்து கொள்வார்கள்.

7 comments:

Gurusamy Thangavel said...

நல்ல சிந்திக்கவைக்கும் பதிவு. 'ஜெ' யின் அதிரடி தவறு என்று தெரிந்திருந்தாலும் இவ்வளவு தருக்கபூர்வமாக இப்பிரச்சனையை யாரும் தெளிவுபடுத்தவில்லை. மிக்க நன்றி.

ROSAVASANTH said...

விரிவான அலசலுடன், நிதானம் தவறாமல் எழுதப் பட்ட பதிவு. உண்மையை சொல்ல வேண்டுமெனில், உங்களிடம் நான், இப்படி விரிவாய் அலசி ஆராயும் பதிவை எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அது என் வாசிக்கும் முறையின் பிரச்சனையாகவும் இருக்கலாம். நன்றி!

ஜெ. ராம்கி said...

//இத்தகைய சூழலில் அரசு இயந்திரத்தை சீரமைப்பது சம்பளத்தை குறைக்கும் செயலாக அல்லாமல், அரசு வேலையை கவுரமான, வளர்ச்சி வாய்ப்புக்களை உள்ளடக்கிய பணியாக மாற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்.//

அவ்வண்ணமே கோரும்

முன்னாள் அரசு ஊழியன்.

Muthu said...

//காரணம் குடிமகனுக்கான சேவைகளை தரும் அரசு ஊழியர்களிடம் , சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். ஆனால் இத்தகைய கசப்பான அனுபவங்களுக்கு பின்புலமாக இருக்கும் ஒரு அரசியல் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்ந்து, ஊழலை அரசு ஊழியர்களின் தனிப்பட்ட முகமாக முன்னிலைப்படுத்தி, 94% சதவீத வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு செலவு செய்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து,மக்களுக்கு அரசாங்க ஊழியர்களின் மேல் எவ்வித அனுதாபமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.//


நல்ல பாயிண்ட்..இதுக்கு பதிலே சொல்லமாட்டாங்க புனித பிம்பங்கள்

Mey said...

Very good analysis and well written article. Hope this msg gets print media’s attention and reaches every household in TN and changes the perception of the people on this issue.

கூத்தாடி said...

அழுத்தமானப் பதிவு.எனக்கு அரசு அதிகாரங்களின் மேலும் அவர்களின் அதிகாரத் தோரணை மேலும் கோபம் உண்டு .ஆனால் நீங்கள் சொல்வதைப் போல் பெரும்பான்மை அரசு ஊழியர் லஞ்சம் வாங்கும் இடத்தில் இல்லை ,அவர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் குறைவு தாம் ,அவர்களுக்குதான் ஓய்வு ஊதியத் தொகை பிரச்சினை..

ஆனாலும் அரசு அதிகாரிகள் பொது மக்களுக்கு சேவை புரிகிறோம் என்ற எண்ணத்தில் எப்போதும் பணி புரிந்தது கிடையாது ..அது IAS இலிருந்து peon வரைக்கும் கிடையாது ..இந்தியாவின் சாபமே பியுரோகிரசி தான் ..அதற்கு அரசும் மனம் வைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு ..தேர்தல் முடிந்த பின் ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன்

Radha N said...

தாங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொ ள்ளக்கூடியதல்ல.

தாங்கள் சொல்வது போல் ஊழல் மலிந்து கி டக்கும் துறை ஒருசில மட்டுமல்ல, ஊழல் இல்லாத் துறைகளே, இல்லை. அத்திப்பழத்தினை பி ட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு என்பார்கள், அதனைப்போல்தான். எல்லாத்துறைகளிலும் ஊழல் உண்டு, ஆனால் அதை வாங்கும், பதவியிடங்கள் மட்டும் மாறும். சில நல்ல உள்ளங்கள் உள்ளன, அவற்றைத் தவிர. அவரவர் பதவிகளுக்கு ஏற்றமாதிரி, இலஞ்சம் வாங்குகிறார்கள்.

ஜெ. சொன்னதனால் மக்களுக்கு அரசு அலுவலகர்கள் மீது பரிதாபம் உண்டாகவில்லை என்று சொல்கிறீர்களே. இவ்வாறு பயமுறுத்தியும், இன்னும் திருந்தமாட்டோம் என்று அதே பழைய இலஞ்சப்பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கும் அரசு ஊழி யர்களை என்ன செய்யலாம். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுந்தாலும் பால் மொ த்தமும் விஷம் தானே. அதைப்போல் அரசு ஊ ழியர்கள்.

உங்களிடம் ஒரு சவால் விடுகின்றேன். நீங்கள் புதுவண்டி வாங்குங்கள், அதனை நீங்களே, ஆர்.டி.ஓ. விடம் பதிவு செய்யச் செல்லுங்கள். ந ଡ଼'அ3ங்கள் வெற்றி பெறுவது குதிரைக்கொம்பு போல் தான்.