Monday, August 23, 2004

வலைப் பதிவுகளைப் பற்றிய சுஜாதாவின் கருத்து

இந்த வார ஆனந்த விகடன் "கற்றது பெற்றதும்" பகுதியில் வலைப்பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. இப்பகுதி மீண்டும் துவக்கப் பட்டவுடன் கூடிய விரைவில் வலைப்பதிவுகளைப் பற்றி குறிப்பிடுவார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதைப் பற்றிய அவரது கருத்துதான் என்னை ஆச்சரியப் படுத்தி விட்டது.

முன்பு காலத்தில் வெளியிடப்படும் கையெழுத்துப் பிரதிகளின் நவீன வடிவம்தான் வலைப்பதிவுகள். "கவிதை, கதை என எழுதிவிட்டு பதினைந்து நிமிட பாராட்டுதலுக்கு காத்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. மேலும் இவ்வாறுதான் வேற்று லோகத்தில் உயிரினம் இருக்கிறதா? என்று சிலர் தேடுகிறார்கள் என்றும் முத்தாய்ப்பாக கூறியுள்ளார்.சுஜாதாவிடமிருந்து இத்தகைய மேம்போக்கான கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

ஜர்னலிசத்தின் புதியபரிமாணம் என்று ஹிந்து பத்திரிக்கை வலைப்பதிவுகளைப் பற்றி தலையங்கம் எழுதியிருக்கிறது. சுஜாதா இதன் சாத்தியங்களில் நம்பிக்கையில்லாத வகையில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.பாராட்டுகளுக்காக மட்டும் அனைவரும் Blogging செய்யவில்லை.ஒரு படைப்பை பத்திரிக்கைகளில் வெளியிட, சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களுடன், அது எத்தகைய படிவத்தில் சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் , சுஜாதாவைப் போன்ற வெகுசிலரே அதில் வெற்றி காண முடிந்திருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம் சுஜாதாவைக் காட்டிலும் மேதாவிகள் உலகில்
இல்லை, அவர்களால் எழுத இயலாது என்பதல்ல. இத்தகைய மேதாவிகளின்
கருத்துக்களும் பிறருக்கு கிடைக்க blog உதவி செய்கிறது என்பது என் கருத்து.

வலை உபயோகத்தை அதிகரிப்பது என்பது இந்திய போன்ற பல மொழி பேசும் நாடுகளுக்கு மிகவும் சவலான விசயம். "டிஜிட்டல் பிளவை இணைக்கிறோம்" என வரிந்து கட்டிக் கொண்டு தமிழ்நாடு, ஆந்திரா என பல மாநிலங்கள் கிளம்பிவிட்டன. n-louge, dristhi என பல கிராம தவகல் குறுநிலையங்களை நிறுவும் நிறுவனங்கள் கிராமங்களுக்கு கணனியை அறிமுகப் படுத்தி உள்ளன. சாதாரண மக்களுக்கான கணினி ஆர்வம் , அதன் மூலம் கிடைக்கும் பயன்களைப் பொறுத்தே அதிகரிக்க செய்யும். இதற்கு முக்கியமான தடைக்கல்லாய் இருப்பது பிராந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட 'Content". தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கணிசமான content ஜெனரேட் செய்ய வலைப்பதிவுகள் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன். வலைப்பக்கங்களில் நான் பார்த்த சில விசயங்கள் இந்த நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது.

சுரதா.காம்- ல் நான் பார்த்த யுனிகோட் பற்றிய பாடத்திட்டம், மிக எளிமையான, அருமையான படைப்பு.ஒவ்வாருவரும் தனக்கு தெரிந்த துறையில், தனக்கு தெரிந்த கருத்துக்களை இதைப் போன்ற பாடத்திட்டமாக உருவாக்கினாலே போதும். கணிசமான கணினி சார்ந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுவிடும்.

மேலாண்மைத் துறையில் புதிய சித்தாந்தங்களை தமிழ்படுத்தும் முயற்சிகள் எங்கு மேற்கொள்ளப் படுகிறது, எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பது என்க்கு தெரியாது. ஆனால் தமிழில் மார்க்கெட்டிங் பாராட்ட வேண்டிய முயற்சி.இவ்வகையான முயற்சிகள் வெகுஜனப் பத்திரிக்கைகளில் சாத்தியப்படாது. அவர்களுக்கு யோகாவைப் பற்றி எழுதவும் நடிகை மாடல்கள் தேவைப்படுகிறார்கள் .

வெங்கட்டின் வலைக்குறிப்புக்களில் பல அறிவியல் கட்டுரைகளை பிரிண்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு படிக்க கொடுக்கலாம்.

வந்தியத்தேவனின் போர்க்கப்பல்கள் பற்றிய பதிவுகளும் வெகுஜனப் பத்திரிக்கைகளில் கிடைக்காத விசயங்கள். அரிதாக யாராவது டாலர் தேசம் எழுதினாலும், புத்தகமாக வரும்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இன்னும் பல வலைப்பதிவுகளைப் பற்றி நான் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். கையெழுத்து பிரதிகளைக் காட்டிலும் மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு சனநாயக ஊடகத்தை, சுஜாதா அலட்சியமாக விமர்சித்திருக்கிறாரே என்ற வருத்தைதைப் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.

சுஜாதாவின் இவ்வார "கற்றதும் பெற்றதும்" பகுதியே வலைப்பகுதியின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்து விட்டது. மைக்கேல் மூரின் பாரன்ஹீட் 9/11 படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் சுஜாதா.

வலைப்பதிவுகளில் விஸ்தாரமாக அலசப்பட்ட விசயம். இதனால் சுஜாதா எழுதிய கருத்துக்கள் புதிதாகப் படவில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரியான புதிய விசயங்கள் சுஜாதா சாரால் மட்டுமே அறிமுகப் படுத்தப் படும். இன்று வலைப் பதிவுகளால் சுஜாதா சார் எழுதியது பழைய செய்தியாகிப் போனது.

ஓங்கி வளரட்டும் வலைப்பதிவுகள்.

No comments: