Monday, October 25, 2004

நாக்பூர் டெஸ்ட்- திரை ஏற்றம்


கங்குலியின் வயிற்றில் பிட்சில் புல் வைத்து புளியை கரைத்து விட்டார்கள். இந்தியப் புலிகள்தான் பசித்தாலும் புல் தின்னாதே. டாஸ் ஜெயித்தாலும் உணவு இடைவேளைக்குள் நான்கு விக்கெட்டுக்கள் காலியாகி விட்டால் முதல் நாளிலே டெஸ்டை தாரைவார்த்து கொடுத்து விட வேண்டியதுதான்.

சொந்த நாட்டில் ஆடும்போது அந்த அணிக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரிப்பதைப் பற்றிய விவாதங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. இதில் இந்தியாவை மட்டும் அதிக அளவில் குற்றம் சாட்டி இந்திய விமர்சகர்களே எழுதி வருகிறார்கள். முதல் நாளிலேயே முட்டிக்கு மேல் எழும்பாத, புழுதி பறக்கும் களங்களை உருவாக்குவது பாவச்செயல் என பேசி வருகிறார்கள். ஆனால் அனைத்து நாடுகளும் ( ஓரளவில் இங்கிலாந்து தவிர்த்து) இச்செயலைத்தான் செய்கின்றன. யார் இதை ஆரம்பித்தது என்பது தெரியவில்லை.

1997 ம் ஆண்டு நம் அணி தென்னாப்பிரிக்க சென்ற போது கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டிக்கான களத்தில் பந்துகள் எகிறின. இந்தியாவில் முட்டிக்கு மேல் பந்து எழும்பாதது அழுகுணித்தனம் என்றால், முகரையை பேக்கும் அளவு பந்து எழும் களம் அமைப்பதும் அழுகுணித்தனம்தான்.

கங்குலியின் பயத்தில் நியாயம் உண்டு. பந்து ஸ்விங் ஆனால் நம்மை காலி செய்ய ஒரு காஸ்பிரோவிச் போதும். ஏ.எக்ஸ்.என் சானலில் போட்டி நடத்துகிறாரே விட்னி. அவர் செய்தார் பெர்த்தில் 1992ல் நம் அணியை "சட்னி". அதன் பின்பு ஆஸ்திரேலிய அணியில் காணமால் போய் டிவிக்கு போய்விட்டார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற பயத்தால்தான் மொஹாலியில் மேட்ச் நடத்தப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க, களத்தில் பசுமைப்புரட்சி நடத்துவதை எப்படி பொறுப்பார் கங்குலி.

கடைசியாக கிடைத்த தகவலின் படி,களத்தை சிரைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இன்றைய மொட்டை களத்திற்கு என்றாலும், நாளைய மொட்டை கங்குலிக்கு இல்லாதிருக்க இறைவனை பிரார்த்திப்போம்

சச்சினின் வரவு நம்பிக்கையை ஊட்டினாலும், "ரொம்ப நாள் கழிச்சு வராரு, சீக்கிரம் ஆட வைப்போம்" என்ற ரீதியில் முதல் மூன்று இந்திய ஆட்டக்காரர்கள் பெருந்தன்மையுடன் நடந்தால் நம் கதி அதோ கதிதான். டிராவிடும், லக்ச்மனனும் விளையாடுவதைப் பொறுத்தே நம் வெற்றி நிர்ணயிக்கப்படும். முதலாவதாக விளையாடும் பட்சத்தில் 500 ரன்களுக்கும் அதிகமான ரன்களை குவிப்பது அவசியம். அப்போதுதான் கும்ப்ளேயும், ஹர்பஜனும் ஏதாவது செய்ய இயலும்

பதான் இல்லாதது பெரிய பிரச்சனைதான். அதுவும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு உதவும் பட்சத்தில். ஜாகிர் சென்ற மேட்ச் சிறப்பாக பந்து போட்டார். இவர் நன்றாக ஆடினாலே எப்போது காலை பிடிக்கப் போகிறாரோ? என்று பயம் வருகிறது. பிரிஸ்பேனில் ஐந்து விக்கெட் எடுத்தார். அதன் பின்பு ஆடியது "உள்ளே வெளியே "ஆட்டம்தான். இதைக் காட்டிலும் மோசம் நெஹ்ரா. இவரது உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் எப்போதும் குறைந்த பட்சம் ஒரு சின்ன பேண்ட் எய்ட் ஆவது இருக்கும் என நினைக்கிறேன்

ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. என்னை பொறுத்தவரை இந்தியக் களங்களில் காஸ்பிரோவிச் தனது ரிவர்ஸ்ஸிவிங் திறமையால் லீயைக் காட்டிலும் ஆபத்தானவராய் இருப்பார் என்றே நினைக்கிறேன்

நாக்பூரில் கண்டிப்பாக மழை வராது. அடிக்கடி டெஸ்ட் போட்டிகள் நடக்காத பிரதேசம்

உதைக்கிறோமா? உதை வாங்குறோமா?

பொறுத்திருந்து பார்ப்போம்

No comments: