Thursday, December 09, 2004

ஓடாத கடிகாரங்கள்

நின்றுபோன
சுவர் கடிகாரங்களின்
தெளிவிக்கப்படாத மூர்ச்சை
தெரிவிக்கிறது பல விடயங்களை

சாவி முடுக்கி
பராமரித்த தாத்தா
பரமனடி சேர்ந்ததை

ஒரே பையன்
அமெரிக்கா போன்பின்
உயர ஏறி சாவி கொடுக்க
ஆற்றலற்றுப் போன
பெற்றோரின் தனிமையை.

கல்யாணப் பரிசாக வந்த
கடிகாரத்தின்
பேட்ரி மாற்ற
பணம் பற்றாத
மாத இறுதி எதார்த்தங்களை.

மணிக்கொரு முறை அலறி
குழந்தையின் தூக்கம் கெடுப்பதை தவிர்க்க
வலுக்கட்டாயமாகவும் நிறுத்தப்பட்டிருக்கக்கூடும்
சிலவீடுகளில்.

ஓடும் கடிகாரங்கள்
நேரத்தை உணர்த்த..
ஒடாத கடிகாரங்கள்
மெளனமாய் உணர்த்துவதோ
குடும்பத்தின்
நிகழ்வுகளை.

1 comment:

Ramya Nageswaran said...

நல்ல கற்பனை..