Wednesday, January 12, 2005

புத்தகக் கண்காட்சி 2005- என் பார்வை



கடந்த மூன்றாண்டுகளாக புத்தகக் கண்காட்சியின் பிரபல்யம் அதிகரித்து விட்டது. சென்ற ஆண்டைக் காட்டிலும் நடக்கும் பாதையை விசாலப்படுத்தி விட்டார்கள். ஆனால் கடைகளின் சதுர அடிகளில் வழக்கம் போல கஞ்சத்தனம். புத்தகக் குவியலை பார்க்க முடிகிறதே தவிர , புத்தகத்தை நிதானமாக புரட்டிப் பார்ப்பதெல்லாம் செய்ய இயலவில்லை.

10 சதவீத தள்ளுபடி நிரம்பவே தொல்லை கொடுத்தது. 75 ரூபாய் புத்தகத்திற்கு 7.50 தள்ளுபடி கொடுத்து சில்லறை வேண்டும் என ஆங்காங்கே படுத்தி விட்டார்கள். ஒரு கடையில் 2.50 சில்லறைக்காக கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு சட்டைப் பாக்கெட்டை எல்லாம் துழாவிக் கொண்டிருக்க, கல்லாவில் இருந்த தாத்தா " சில்லறை பற்றி கவலைப்படாதீர்கள்" என்று மீதி கொடுத்தார். அவர் கல்லாவில் சில்லறை மலையே இருந்தது.

அசத்த வேண்டும் என்ற் நோக்கத்தில் களமிறங்கியிருந்தனர் கிழக்கு பதிப்பகத்தார். டிக்கெட் வாங்குமிடத்தின் முகப்பு அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. சீருடை டீசர்டும் அழகாக இருந்தது. சொற்ப சதுர அடிகளிலும் புரட்டிப்பார்க்க வசதியாக புத்தகங்களை அடுக்கியிருந்தார்கள். புத்தகப்பட்டியலும் தரமாக அச்சடிக்கப்பட்ட்டிருந்தது. வாழ்த்துக்கள்.

நடைபாதையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புக்கள் யாரையாவது வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தன.புத்தகக் கண்காட்சி வந்த பாவத்திற்கு காலை ஒடிக்க வேண்டுமா? யாராவது கவனித்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.

புத்தகக் கண்காட்சியில் எல் ஐ சியும், இன்னுமொரு வாகன பைனாஸ் கம்பெனியும் கடை விரித்திருந்தன.நான் பார்க்கும் போது ஈ ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஏதாவது வியாபாரம் நடந்ததா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சம்பந்தமில்லாத இடத்தில் கடை விரிக்கும் போது நன்மைகளும் இருக்கிறது, சிக்கல்களும் இருக்கிறது.பூம்புகார் பதிப்பகத்தில் பழைய புஷ்பா தங்கத்துரையின் நாவல்கள் சொற்ப விலைக்கு கிடைக்கின்றன. இது பழைய பதிப்புகள். சென்ற ஆண்டு ரூ 3.90க்கு ராஜேந்திரக்குமாரின் நாவல் ஒன்றை வாங்கினேன். இதே போன்று சுஜாதாவின் சில நாவல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கிடைக்கக் கூடும் ( கண்டிப்பாக ரூ3.90க்கு அல்ல)

ஆன்மீகம், யோகா, மருத்துவம் போன்ற துறைகளில் பல நூல்கள், பல்வேறு பதிப்பகத்தார்களால் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.வாங்குவதற்கு ஆளிருக்கிறார்களா? அல்லது அரசின் நூலக ஆர்டர்களை நம்பி இவை பிரசுரிக்கப் படுகிறதா என்பது தெரியவில்லை.

குழந்தைகளை கூட்டிக் கொண்டு கண்காட்சி போவது சிரமமான காரியம்தான். கூட்டம், நடக்க வேண்டிய தூரம் ஆகியவை இரண்டு முக்கியமான காரணங்கள். ஆனாலும் புத்தகக் குவியலைப் பார்க்கையில் "என்னதான் இருக்கு இதுல?" என்ற ரீதியில் குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வம் வளரலாம். Noddy காமிக்ஸ் 20ரூபாய்க்கு கிடைத்தது. லேண்ட்மார்க்கில் இது குறைந்த பட்சம் 60 ரூபாய்.

தமிழின் சிறந்த குழந்தை நூல்கள் எதுவும் விற்பனையில் இல்லை. காமிக்ஸ் வடிவத்தில் தமிழில் கதைகள் இல்லாதது குறையே. முன்பு "ரத்னபாலா" என்ற பாலர் மாத இதழில் துப்பறியும் சாம்பு படக்கதையாக வந்தது. துப்பறியும் சாம்பு போன்ற கதைகள் படக்கதையாக வந்தால் இன்றைய குழந்தைகளும் படிக்க இயலும்.

புத்தக கண்காட்சி நன்றாக இருக்கிறது என்று சக அலுவலர்களிடம் சொன்னேன். அவர்கள் என்னை கேட்கும் முதல்கேள்வி ஆங்கிலப் புத்தகங்கள் இருக்கிறதா? என்பதுதான்.தமிழே படிக்கத் தெரியாத , படிக்கும் அவசியம் உணராத மக்கள் பெருகிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களுடைய குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கித்தந்தாலும் கூட ஆங்கிலப் புத்தகமே வாங்குவார்கள்.இந்த மனப்பான்மை கவலை தருவதாக உள்ளது.இந்த சூழலில் தொலை தேசத்தில் இருந்தாலும் புத்தகக் கண்காட்சியை பற்றி நினைக்கும் சில இணைய நண்பர்களை நினைத்தால்
மகிழ்ச்சியாக இருக்கிறது.

சபரி கேட்டரிங் நுழைந்தவுடன் இருந்தது. வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு விட்டுத்தன் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தேன். நடந்த தூரத்தையும்,தேவைப்பட்ட நேரத்தையும் பார்க்கும் போது பஜ்ஜி சாப்பிட்டு தெம்பேற்றிக் கொண்டது நல்லதாகவே பட்டது.

நான் வாங்கிய நூல்கள்

சினிமாவும் நானும்- இயக்குநர் மகேந்திரன்

அகி- முகுந்த் நாகராஜன் ( நன்றி இகாரஸ் பிரகாச்)

பறவை யுத்தம்- பா. ராகவன்

என் பெயர் ராமசேக்ஷன்- ஆதவன்

டாலர் தேசம்- பா. ராகவன்

நிர்வாண நகரம்- சுஜாதா

எங்கெங்கு காணினும்- ஜெயகாந்தன்

சித்தர் வரலாறு

Noddy comics- 3

தினம் ஒரு உயிர்

ஊழலே உன் வேர் எங்கே- ஞாநி

அபூர்வ மனிதர்கள்- தி.ஜா

தகர்ந்து போன தன்னாட்சி கனவுகளும், தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும்- முனைவர் செயராமன்.

"சினிமாவும் நானும்" அதே இரவில் படித்து விட்டேன்.

மீண்டும் ஒரு ரவுண்ட் போக வேண்டும் என்பது விருப்பம்.நிறைவேறுகிறதா என்பது தெரியவில்லை.

கண்காட்சி சென்றதன் கூடுதல் மகிழ்ச்சி-பத்ரி மற்றும் ரஜினி ராம்கி யை சந்தித்தது.

No comments: