Monday, January 03, 2005

சுனாமியும் மனிதமும்

நேசமுடன் வெங்கடேசை தொடர்ந்து அவரது ஆஸ்தான நடிகரான டாக்டர் கமல்ஹாசனும் மனித நேயத்தை வளர்த்ததற்காக கடலுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்( காண்க : சன் டிவி- சுனாமி நிதி அப்பீல்). இருவருடைய அலைநீளங்களும் ஒன்றாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அழிவுகளில் மக்கள் உதவிக்கரம் நீட்டுவதை மனித நேய வளர்ச்சி என்பதும், அதற்காக அழிவுக்கு நன்றி தெரிவிப்பதும் நியாயமாகப் படவில்லை.இவ்வழிவுகளுக்கு நாம் நன்றி தெரிவிப்பதை விட, இவை உணர்த்தும பாடங்கள் எவை? அதுக் குறித்த நம்முடைய எதிர்வினையும் செயல்திட்டமும் என்ன?என்பதை ஆராய்வதே உசிதமான செயலாகும். இதைக் குறித்த விவாதத்தை தொடர்ந்து நடத்துவதும், அரசாங்கத்தை இப்பிரச்சனையை மறக்கவிடாமல் செய்து திட்டங்களை நிறைவேற்ற வைப்பதும் படித்த இந்தியர்களின் கடமையாக இருக்கிறது.இன்று நிவாரணப் பணிகளுக்கு காட்டும் அக்கறை நாம் வாழும் தேசம் பாதுகாப்பானதா? என்பது குறித்த விழிப்புணர்விலும் இருக்க வேண்டியது அவசியம்.

நிலைப்படக் கூடிய வளர்ச்சி ( Sustainable Development) என்பது வளர்ச்சியின் முக்கியமான அம்சம். இந்தியா போன்ற வளரும் நாடுகளிம் மிகப் பெரிய பிரச்சனை நிலைப்படக் கூடிய வளர்ச்சியை பெறுவது.இங்கே பெரும்பான்மையான வளர்ச்சித்திட்டங்கள் தொலைநோக்குப் பார்வை இல்லாமல், நீண்டகால பயன்களையும், எதிர்விளைவுகளையும் கணக்கில் கொள்ளாமல் , குறுகிய கால பயன்களை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யப்படுவதாக உள்ளது.வானளாவி எழுந்திருக்கும் கட்டிடங்களிலிருந்து, வீராணம் திட்டம் , கூடங்குளம் அணுமின் நிலையம் வரை அனைத்து திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எதிர்வினைகள் உண்டு. இவற்றைப் பற்றி விவாதிக்காமல்,எதிர்விளைவுகளை மறைத்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இன்று கார்பரேக்ஷன் குழாயில் தண்ணீர் வரும் வரை நாமும் வீராணம் திட்டத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இந்த அக்கறையின்மைதான் இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாய் அமைந்து விடுகிறது. காடுகளை அழித்து நகரங்களை பெருக்கினோம். கடலருகே நிலம் என ரியல் எஸ்டேட் ரேட்டை கூட்டினோம். இயற்கை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ந்மக்கே ஒரு கர்வம் வந்துவிட்டது. விளைவு -மிகப் பெரிய உயிர் சேதம்.சதுப்பு நிலக் காடுகளும் , பவளப் பாறைகளும் மிகுந்திருக்கும் பட்சத்தில் சுனாமியின் தாக்கம் மட்டுப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். யாருக்கு இருக்கிறது இந்த புவியியல் அறிவு. பிறக்கும் குழந்தைக்கும், எது படிக்கிறதோ இல்லையோ, இதைப்படி என ஜாவா கற்றுக் கொடுக்கிறோம். அடிப்படை புவியியல் அறிவு கூட அற்றுப் போய் உருவாகிறது எதிர்கால சமுதாயம்.மக்களுக்கு சுற்றுப்புற சூழலைப் பற்றிய விழிப்புணர்வே இல்லை. இதைப்பற்றிய பொது விவாதங்களும் குறைவு. அவற்றைப் பற்றிய விவாதங்கள் நடக்கும் போதும் என்னைப் போன்றோர் டிவியில் ரஜினிகாந்த் படம் பார்க்கத்தான் பிரியப்படுகிறார்கள்? எங்கு உருப்பட?

சென்னையில் சுனாமி தாக்குவதற்கு ஓராண்டு முன்பாக கட்டுமானர்களுக்கு, பூகம்ப ஆபத்துக் குறித்து ஆய்வு செய்யும் ஒரு குழு/இயக்கம், சென்னையின் அதிகரித்த பூகம்ப சாத்தியங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய கட்டுமான வடிவமைப்புக்கள் குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்தியிருக்கிறது. இதில சொற்பமான கட்டுமான நிறுவனங்களே பங்கு கொண்டுள்ளன என்பது வேதனையான விசயம். பிசினஸ் லைன் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்விதமான அக்கறையின்மை நம் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் ஊறிப்போயிருக்கிறது.

இந்த அக்கறையின்மையை எப்படி மாற்றப்போகிறோம்? புகை உமிழ்ந்து போகும் வாகனம் உடனடியாக மனிதனை கொள்வதில்லை.ஆனால் நாம் நேசிக்கும் மனிதருக்கு வந்திருக்கும் புற்று நோய்க்கு அது காரணமாயிருக்கிறது என்பதை ஏன் உணர மறுக்கிறோம்? சுற்றுப் புற் சூழல் கேடுகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் எல்லாம தனக்கு நிகழாது என்பதில் ஏதோ அனைவருக்கும் அ (வி) பரீத நம்பிக்கை இருக்கிறது. ராமேஸ்வரமும், தூத்துக்குடியும் தப்பியதற்கு இலங்கையை காரணமாய் சொல்கிறார்கள்.இவ்வாறு காப்பாற்றிய பூகோள அமைப்பிற்கு சேது சமுத்திரம் திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமா? உடனடியாக " பாதிப்பு இருக்காது" என அறிக்கை விட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.இது ஆராய்ந்து சொல்ல வேண்டிய அம்சம்.சேது சமுத்ரம் நிலைப்படக் கூடிய பயன்களை தருமா என்பதை விரிவாக அலச வேண்டும். இது குறித்து ஏற்கனவே வெளிவந்த செய்திகள் கவலை தருவதாக இருந்தன. மீன்வளம் அழிக்கப்படுவதற்கான அபாயங்களை அவுட்லுக் பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இதெல்லாம் சுனாமி வரும் முன்பு.

தற்போது சுனாமிக்குப் பின், நமக்கு தெரியாத பல விளைவுகளை கடல் நிகழ்த்தக் கூடும் என்ற உணமையை உணர்ந்து, சேது சமுத்ரம் நன்மை தரும் திட்டமா? என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது குறித்த மூன்றாவது நாட்டின் ஆய்வறிக்கையை நாம் கோர வேண்டும். இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களை கடுமையாக influence செய்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

கூட்டமாக மாளும் போது ஏற்படும் நிலையாமை உணர்வு மனிதனை உதவி செய்யத்தூண்டுகிறது. இதுவும் ஒரு வகையான மயான வைராக்கியம்தான். கொஞ்ச நாள் கண்ணீர். கதை. பின்பு மீண்டும் சகஜ வாழ்க்கை. கடல் உருவாக்கிய மனிதம் மரித்துப் போகும். குஜராத் பூகம்பம் என்று நடந்தது என்பது எத்தனைப் பேருக்கு நினைவிலிருக்கப் போகிறது. அங்குள்ளவர்களின் மறுவாழ்வைப் பற்றி அறிந்து கொள்ளும் அக்கறையோ, அக்கறை இருந்தாலும் வாய்ப்போ எங்கே இருக்கிறது?

தனிமனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி. அதுதான் உண்மையான மனிதம். ஆபத்து வந்த பின் செய்யும் உதவிகள் அவசியம். ஆனால் ஆபத்தை தவிர்க்கும் விழிப்புணர்வை வளர்க்கும் முயற்சிகள் தேவை.
இவ்வாறான ஒரு விழிப்புணர்ச்சியை மக்களிடம்ஏற்படுத்தி, இயற்கை சீற்றத்திலிருந்தும்,அதை குறித்த மனித அலட்சியம் ஏற்படுத்தும் பாதிப்புக்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைத்தால் நானும் சுனாமிக்கும் , கடலுக்கும் நன்றி சொல்கிறேன்

No comments: