Tuesday, January 04, 2005

ஆட்டோ டோ டோ...

சென்னை நகரவாசிகள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது அதிசயமாகப் படும் செயல் ஆட்டோ க்காரர்கள் மீட்டருக்கு மேலாக காசு கேட்காதது. மற்ற ஊர்வாசிகள் சென்னை வந்தால் ???????? தோன்றும் செயல், ஆட்டோ க்காரர்கள் மீட்டரே போடாதது. போட்டாலும் 'மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுப்பா என்று கேட்பது. முன்பெல்லாம் ஆபிஸ் டூர் போய்விட்டு சென்னை திரும்பும்போது, சென்ட்ரலிலிருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ பிடிப்பது பிரம்மப்பிரயத்தனமாய் இருக்கும். கூசாமல் அருகில் இருக்கும் திருவல்லிக்கேணிக்கு 80 ரூபாய் கேட்டார் ஒரு ஆட்டோ க்காரர்.

இந்தச் சிக்கல்களையெல்லாம் மீறி போக்குவரத்திற்கு ஆட்டோ வையே நம்பி வாழும் (???) சென்னைவாசி நான். சமீபத்தில் என் நண்பன் நான் ஆட்டோ வில் பயணிப்பவன் என்பதை அறிந்ததும் ." உலகத்திலேயே சிறந்த பேரம் பேசுபவனாய் நீ மாறியிருப்பாய் " என கமெண்ட் அடித்தான். நான் அப்படி மாறவில்லை. என்னைப் பொறுத்தவரை, மீட்டர் போட ஒப்புக் கொண்டு, மீட்டர் கில்க்ரிஸ்டின் கிரிக்கெட் ஸ்கோராக உயர்வதைப் பார்த்து, பல்ஸை அதிகரித்துக் கொள்வதில் அர்த்தமில்லை. ஏறும் முன்னே வாடகையை பேசிக் கொள்வது நல்லது.

எங்கே போகிறோம் என்ற வழியை யாரிடமாவது விசாரித்து வைத்துக் கொள்வதும் உசிதம். இல்லாவிடில் தெரிந்த மாதிரி நடிக்கவாவது தெரிய வேண்டும். தனது ஆட்டாவில் ஏறியவர் விவரம் தெரிந்தவரா? என்பதற்கு ஆட்டோ க்காரர் ஒரு கேள்வி கேட்பார். உதாரணத்திற்கு நுங்கம்பாக்கத்திலிருந்து நந்தனம் செல்ல, மவுண்ட் ரோட் வழியா போகலாமா சார்? என்பார். வள்ளுவர் கோட்டம் வழியே போனால் தூரம் கம்மி. நீங்கள் சொல்லும் பதிலை வைத்து உங்களது ஜாதகத்தை கணித்து விடுவார்கள். மீட்டருக்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் செல்ல வேண்டிய இடத்திற்க்கு எவ்வளவு அதிக தூரம் பயணம் செய்யமுடியுமோ அவ்வளவு பயணம் செய்யலாம்.ஏறும் முன்னே பேரம் பேசிவிட்டால், குறுக்கு வழியில் எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் " குருக்கு வலி" யுடன் போய்விடலாம். இதில் ஒரே அசெளகரியம்,அண்ணாநகர் மூன்றாவது தெரு என்றால் தெருவில் நுழைந்தவுடன் நாம் இறங்குமிடம் வந்துவிட வேண்டுமென ஆட்டோ க்காரர் எதிர்பார்ப்பார் . எங்க சார்? எங்க சார்? என்று கேட்டுக் கொண்டே, பள்ளிக்கு கிளம்பும் எல். கே.ஜி குழந்தையாய் மெதுவாக ஆட்டோ ஊரும். "வாங்கின காசுக்கு சீக்கிரம் போய்யா" என எரிச்சல் வரும்.

சென்னையில் மட்டும் ஏனிந்த நிலைமை? மும்பை, பெங்களூரில் இந்நிலைமை இல்லை. இத்தனைக்கும் சென்னையில் தேவைக்கதிகமான ஆட்டோ க்கள் ஓடுகின்றன. பொருளாதாரத் தத்துவத்தின் படி அதிகமான சப்ளை இருந்தால் விலை குறையும். ஆனால் இங்கே இத்தத்துவம் செல்லுபடியாகவில்லை.

சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக வேண்டுமென்றால் "பெர்மிட்" வாங்க வேண்டும். சென்னையில் அதிகாரப் பூர்வமாக 40000 பெர்மிட்டுக்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேலாக ஆட்டோ க்கள் ஓடுகிறது. இதற்கு காரணம் பெர்மிட்டுக்கள் கறுப்பு சந்தையில் விற்கப்படுவதுதான். சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கப்படும் பெர்மிட் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இந்தப் போலி பெர்மிட்டுக்களை வைத்து பலர் ஆட்டோ க்களை வாங்கி ஓட்டுகிறார்கள்.ஒரு பெர்மிட்டை வைத்தே பல ஆட்டோ க்கள் ஓடுகின்றன.

சென்னை ஆட்டோ க்களில் பெரும்பாலானவை வாடகை வண்டிகள். பல ஆட்டோ க்கள் வக்கீல்களுக்கும், போலிஸ்காரர்களுக்கும் சொந்தமானவை.இவர்களது வண்டிகளை வா?கைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர்கள் சட்ட திட்டங்களை மதிப்பதில்லை. வாடகை- வண்டியைப் பொறுத்து ஒரு நாளைக்கு 100 முதல் 120 ரூபாய் வரை.பெட்ரோல் செலவு எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்க குறைந்தது 400 ரூபாயாவது போணியாக வேண்டும். போதாக்குறைக்கு போலீஸ்காரர்கள் தரும் இன்னல்கள் வேறு. அனைத்து டாக்குமெண்டுக்கள் இருந்தாலும் தன்னுடைய "கலெக்க்ஷன்" டார்கெட்டை மீட் செய்ய கேஸ் புக் செய்வார்கள் போலீஸ்காரர்கள். இவ்வாறான பல தொழில் முறை சிக்கல்களும் இருக்கிறது ஆட்டோ க்காரர்களுக்கு.

இவற்றையெல்லாம் மீறி தேவையான அளவு வருமானத்தை நேர்மையாகவே சம்பாதிக்க முடியும் என்பதை எனக்குத் தெரிந்த சில ஆட்டோ க்காரர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதற்கு ஆட்டோ சொந்த ஆட்டோ வாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு நிதி வசதி செய்ய வங்கிகள் முன் வருவதில்லை. மார்வாடிகள் தரும் அதிக வட்டி கடன்கள் மூலமாகத்தான் ஆட்டோ வாங்குகிறார்கள். வட்டி கட்டாவிட்டால் ஆட்டோ பிடுங்கப்படும்.இதைத் தவிர பிட்னெஸ் சர்டிபிக்கேட் வாங்க வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாயாவது செலவழிக்க வேண்டியிருக்கும்.

என்னைப் பொறுத்த வரை பூனைக்கு யார் மணி கட்டுவது ? என்ற ரீதியில் ஆட்டோ ப் பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. கால் டாக்சிகள் வந்த பின் ஆட்டோ க்காரர்களின் அராஜகம் சிறிதளவு குறைந்திருக்கிறது. இருந்? போதிலும் ஆட்டோ க்காரர்கள் என்றாலே ரவுடிகள் என்ற பிம்பத்தை முழுவதுமாக கலைக்க முடியவில்லை. கசப்பான நிஜம் என்னவென்றால் 20 சதவீத ஆட்டோ க்காரர்களே இவ்வாறான ரவுடிகளாக இருக்கிறார்கள். மற்றவர்கள் சம்பாத்தியத்திற்கு சிரமப்படும் சாமான்யர்களே.

அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் சட்ட திட்டங்களை முறையாக அமுல் படுத்தினாலே போதும் ஆட்டோ வாடகை பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட முடியும். ஆனால் அரசாங்கம் முன் வராது. அது வரை " இரக்கமுள்ள் மனசுக்காரன்டா" என்று ரஜினி பாடிவிட்டதால் மட்டும் ஆட்டோ க்காரர்களைப் பற்றிய எண்ணம் மாறப் போவதில்லை.
(Thatstamil.com தளத்தில் வெளிவந்த என் கட்டுரை)

No comments: