Tuesday, December 28, 2004

கண்ணீர் தேசமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும்


கடல் கொந்தளிப்பைப் பற்றி எழுதுவதற்கே எனக்கு குற்ற உணர்ச்சி வருகிறது. இதைக் குறித்து எதுவும் செய்ய இயலாத கையாலகாத்தனம்தான் நிதர்சனம்.கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது கடலளவு என்பதை கடலே உணர்த்திய குரூர, துயரச் செயல் யாரும் எதிர்பாராத அளவு நடந்தேறியிருக்கிறது.


காலை விழித்ததே கட்டில் ஆடும் உணர்வில்தான். என்னைத் தவிர வீட்டில் யாருக்கும் அதைப் போன்ற உணர்வு ஏற்படவில்லை. ஏதோ உடல்நலக் கோளாறோ?என சிந்தித்த வேளையில் சன் டிவி செய்தி பூகம்ப நிகழ்வை உறுதிப் படுத்தியது.கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது பூகம்பம்.கடந்த முறையைப் போலவே சேதங்கள் ஒன்றும்
இருக்காது என்ற அதீத நம்பிக்கை அனைவருக்கும். எனவே கவலையின்றி இலக்கில்லா ஞாயிற்றுக் கிழமையை அனுபவிக்கத் தொடங்கியிருந்தேன். 10 மணி அளவில் காரைக்குடியிலிருந்து கவலையுடன் என் அண்ணன் போன் செய்தார். அவருக்கு கிடைத்த தகவல் "சென்னை கடலில் மூழ்குகிறது" என்பது. நான் அவரிடல் சிரித்துக் கொண்டே வதந்திகளை நம்பாதீர்கள் என கூறிவிட்டேன். சன் டிவியில் சிறப்புச் செய்திகள் 10.30க்கு என அறிிவித்திருந்தார்கள்.அதில்தான் கடல் கொந்தளிப்பு, மக்கள் பயப்பட வேண்டாம் என உண்மையாகவே உளறிக் கொட்டினார் ஒரு அறிவிப்பாளர்.


அப்போதுதான் மெதுவாக பயம் ஏற்படத் துவங்கியது. அது கூட கடற்கரை அருகே வசிக்கும் நண்பர்களைப் பற்றித்தான்.மனிதர்கள் பலியாவர்கள் என துளிக் கூட நினைக்கவில்லை. மிஞ்சிப் போனால் வீடு இழப்பார்கள் எனத்தான் நினைத்தேன்.( கடல் அலை மணற்பரப்பைத் தாண்டி சென்னை ஐஜி ஆபிஸ் வரை வரும் என்று யாராவது கற்பனையாவது செய்தது உண்டா?)அதன் பின்பு,எக்மோர் சென்றுவிட்டேன். அங்கங்கே மக்கள் கூடி நின்று கதைகள் பேசினார்கள்.கடல் நீர் மயிலாப்பூருக்குள் வந்து விட்டது என்றார்கள். என்னால் என்ன நடந்திருக்குன் என்பதை கற்பனை செய்யக் கூட இயலாதிருந்தது.மக்கள் கூட்டம் கூட்டமாக கூவத்தை வேடிக்கைப் பார்த்தனை. கூவத்தில் கடல் நீர் உட்புகுந்திருந்தது.என்னால் அதை முழுமையாக உணரமுடியவில்லை.அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு போகும் கூவத்திற்கு திடீர் மவுஸ்.அடுத்த நாள் அதே கூவத்தை பார்த்த போதுதான் தண்ணீர் உட்புகுந்ததை என்னால் உணர முடிந்தது.


சிறப்புப் பதிவாக வந்த மாலைமலரைப் பார்த்த பின்புதான் பாதிப்புக்கள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உணர முடிந்தது. டிவியில் பார்க்க நேரிடும் கோரக் காட்சிகளின் சாத்தியம் பயமுறுத்தியது. பொன்னியின் செல்வனில் படித்த புயற்கால கடல் கொந்தளிப்பைப் போல பலமடங்கு வீர்யத்துடன் இயற்கையின் சீற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது.


உண்மையை சொல்லப்போனால் சுனாமியைப் பற்றிய புவியியல் அறிவு எனக்கு இல்லவே இல்லை.பூகம்பத்தால் உருவாகும் கடலலைகள் என்பதே என் மனைவியிடமிருந்துதான் அறிந்து கொண்டேன்.என்னைப் போன்று சுனாமிஅறியாத அறிவாளிகள்தான தமிழ்நாட்டில் பிரதானம். அதனல்தாம் கடல் பூகம்பம் ஆட்டத்தை ஏற்படுத்தியதோடு சரி. ஆபத்து ஏதுமில்லை என முடிவு செய்து விட்டோம்.டிவியில் மீண்டும் மீண்டும் சிரிப்பு பார்க்கத் தொடங்கி விட்டோம்.


இதைப்பற்றியஅறிவு இந்நாட்டுநிர்வாகத்திற்கிருந்திருந்தால்,அறிஞருக்கிருந்திருந்தால் இழப்பைக் கட்டுப்படித்திருக்கலாம்.வரலாற்று நிகழ்வுகளைப் ஆராய்ந்து அதனடிப்படையில் எதிர்கால பாதுகாப்புத் திட்டங்களை வகுக்கும் நமது மேலாண்மை முறை மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டது.கடலியல், புவியியல், மண்ணியல் பற்றிய ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்தியாவில் இவ்வாறான சேதங்கள் நிகழக்கூடிய சாத்தியங்களை உணர்ந்திருந்ததாக தெரியவில்லை.மேற்சொன்ன துறைகளில் பயில்வதற்கும் இளைஞர்கள் விரும்புவதில்லை. இதனால் இந்தியாவில் இதனைக் குறித்த ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்த அளவு இல்லை என நினைக்கிறேன்.


சில வாரங்கள் முன்பு சென்னை பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் பூகம்பத்தை கணிக்கக்கூடிய மாதிரியை உருவாக்கியதாகவும், அதனடிப்படையில் அஸ்ஸாமில் நிகழக் கூடிய பூகத்தை சரியாக கணித்ததாகவும் செய்தியை படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே மாதிரியால் இப்பூகம்பத்தை கணித்திருக்க முடியாமா என்பது தெரியவில்லை.


எப்படியிருந்தாலும் கடலடி பூகம்பம் சுனாமியை உருவாக்கும் என்ற அடிப்படை அறிவை கற்பிக்காத கல்வியை என்ன என்று சொல்வது? கடலடி பூகம்பம் சென்னைக்கு புதிதல்ல. 2001 செப்டம்பர் 26ம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலடி பூகம்பம ஏற்பட்டது. அப்போது மக்கள் பாதுகாப்பான திறந்த வெளிக்கு செல்ல வேண்டும் என கடற்கரையில் குவிந்தார்கள். அபோது கூட சுனாமியைப் பற்றி யாரும் பேசவில்லை.ஞாயிறன்றும் கூட, மாலையில் பூகம்பம் நிகழ்ந்திருந்தால் அனைவரும் கடற்கரைக்கு போயிருப்போம். சுனாமியாவது, பினாமியாவது. யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.


இத்தகைய அறியாமையை என்னவென்று சொல்வது?பூகம்பம் நடந்த பின் கடற்கரைக்குப் போய் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்த குடும்பத்தை கடல் விழுங்கி விட்டது.இத்தைகைய கொடுமையை என்னவென்று சொல்ல?


கடல்கொந்தளிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்தவுடன் நான் கவலைப்பட்டது கல்பாகக்ம் அணுமின் நிலையத்தைப் பற்றித்தான். இதன் சேதம் குறித்த சிக்கலுயும் பெரும்பாலோனோர் உணரவில்லை. இதுவும் நல்லதிற்குத்தான். இல்லாவிடில் இதைக்குறித்த வதந்திகளை பரப்பி இருப்பார்கள். பிபிசியில் இதைக் குறித்த கவலையை முதலில் வெளிப்படுத்தினார்கள். இதன் பின்பு ஹெட்லைன்ஸ் டுடே யில் இந்திய அணுமின் நிலைய இயக்குநர் தொலைபேசியின் மூலம் பேட்டி அளித்தார்.உலையை சட்டவுன் செய்ததாக குறிப்பிட்டார்.இருந்த போதும் நேற்று பிரதமரும், ஜனாதிபதியும் தமிழகம் வருவதை தள்ளிவைத்ததன் மூலம், அணுமின் நிலையத்தைப் பற்றிய புதிய சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டார்கள். இன்று ஆபத்தில்லை என அரசாங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.


கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இந்நிகழ்விலிருந்து தனிமனிதனுக்கும், அரசாங்கத்திற்கும் நிறையவே இருக்கிறது.


முதலாவதாக இயற்கைச் சீற்றத்தைக் குறித்த பாதுகாப்பு திட்டத்தை வகுக்கும் போது "Worst case scenario" என்று சொல்லப்படும் மோசமான தாக்கத்தை உருவாக்கக்கூடிய சூழல்களை கற்பனை செய்து, அவ்வாறு நிகழும் பட்சத்தில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான திட்டத்தை வரைய வேண்டியது அவசியம். இது இல்லாத பட்சத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதை புரிந்து கொள்ளவே நீண்ட நேரத்தை செலவிடவேண்டியிருந்தது.இது சென்னையில் மட்டுமல்ல.மற்ற கடலோர நகரங்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ள வேண்டிய செயல்.


இரண்டாவதாக,கடலோரங்களில் அமைக்கப்படும் அணுமின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்த நேர்மையான வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையம் வடிவமைக்கப் பட்டபோது சுனாமியின் தாக்கம் குறித்து அலசியிருப்பார்களா என்பது தெரியவில்லை. இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் வலு இவ்வுலைக்கு இருக்கிறதா என்பதை கண்டிப்பாக ஆராயவேண்டும். இல்லாவிடில் இதற்கு ஏற்படும் சேதம் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.மேற்கொண்டு கூடங்குளம் போன்ற இடங்களில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களும் இயற்கையின் சீற்றத்தால் நிகழக் கூடிய ஆபத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


மூன்றாவதாக சென்னையை Seismic zone பிரிவில் இரண்டாவது பிரிவில் இருந்து மூன்றாவது பிரிவிற்கு மாற்றியிருக்கிறார்கள். 2001 ல் நிகழ்ந்த இம்மாற்றம் அனைவருக்கும் தெரியாது.இதன் மூலம் பூகம்பம் நிகழக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.சாத்தியக்கூறுகள் அதகரித்திருக்கும் போது, பூகம்பத்தை தாங்கக் கூடிய குடியிருப்புக்களும், கட்டடங்களும் வடிவமைக்கப் பட வேண்டியது அவசியம். தற்போது கட்டடம் கட்டுபவர்கள், பூகம்பப் பாதுகாப்பை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்களா? பெருகியயுள்ள பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் பூகம்பத்தை தாங்கக் கூடியதா? இப்பொறுப்பை அரசாங்கம் தட்டிக் கழிக்கக் கூடாது.மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருக்கிறது.


இவ்வுலகின் பாதுகாப்பின்மையை உணர்த்தியிருக்கிறது இந்த துயரச் சம்பவம்.சாதி மதங்களால் நம்மைப் பிரித்துக் கொள்ளலாம். அனைவரையிம் மரணத்தின் மும் சமன்படுத்தியுள்ளது இக்கடல். ஆனாலும் ஏழை, பணக்காரன் பிரிவை சமன் செய்ய இயலவில்லை. இறந்தவர்கள் பெரும்பாலும் ஏழைகள். மீனவர்கள். கடலை பிரார்த்தனை செய்யும் மக்கள். சுனாமி அடித்த பின்பும் சில மீனவப் பெண்கள் கடலிடம் பிரார்த்தனை செய்யும் காட்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியிடிருந்தார்கள். மனதை மிகவும் நெகிழச் செய்த காட்சி அது. கடலையே நம்பி வாழ்ந்த அவர்களது வாழ்வில் மிகப்பெரிய நம்பிக்கை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது கடல்.அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது.இவர்களது வாழ்வை புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

மற்றபடி இப்படிப்பட்ட துயர நிகழ்விற்கு அருகாமையிலுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தி விட்டான் இறைவன். பொருளுதவி செய்வதைக் காட்டிலும் வேறு ஒன்றும் செய்ய இயலாத சாமான்ய மனிதானாகத்தான் இருக்கிறேன்.இலங்கையின் சேதங்கள் மிகவும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போய், பிணங்களை எடுத்து, புதைத்து பல்வேறு உதவிகளை செய்யும் மனிதர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் நல்ல ஆயுளையும் செல்வத்தையும் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.


அத்தகைய மனித நேயமும், தைரியமும் இல்லாத சாமான்யன் நான்.

Wednesday, December 22, 2004

மெளனப் போராட்டம்

முகம் தெரியாத
இரவுகளில்
மலைப்பாம்பாய் இறுக்கி
என் ஆடை களைவாய்
என் தளர்வையோ, கிளர்வையோ
பற்றிய கவலையின்றி.

என் நுரையீரல்களை
காயப்படுத்தும்
உன்னிடமிருந்து வரும்
உயர்சாராய வாசனை.

சுருதி மீட்டப்படும்
நம்பிக்கைகளுடன் இருந்த
தந்திகளையெல்லாம்
அறுத்தெறிந்து விட்டு
கட்டையாகிப்போன
வீணையுடன் தொடர்கிறது
உன் கச்சேரி.

மேல் பரந்து
நீ இயங்க
உறுத்துகிறது
முதுகுப் பக்கம்
புரண்டோடி விட்ட தாலியும்
இணக்கமாக சம்போகித்த
அந்த நாள் நினைவுகளும்.

உன் நகங்கள்
ஏற்படுத்திய
மார்புக் காயங்கள்
எரிகின்ற பகல் நேரக் குளியலில்
தேடுகிறேன் உனை புறக்கணிக்கும்
தைரியத்தை.

வீட்டிலிருந்து
தொலை பேசும் என் அம்மா கூட
உன் நலனை முதலில்
விசாரிக்க..

உணர்ந்தேன்
திருமணப் பந்தலுடன் சேர்த்து
கலைந்து போனது
என்னுடைய சுய அடையாளங்களும்தான்
என்பதை

Monday, December 13, 2004

சிகரத்தின் உச்சியில் சச்சின்

1989ம் ஆண்டில், சார்ஜாவில் நடந்த ஒரு கிரிக்கெட் மேட்சில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வழக்கம் போலவே உதை வாங்கிக் கொண்டிருந்தோம். வெங்சர்கார், மொஹிந்தர்போன்ற முதுபெரும் ஆட்டக்காரர்கள் நிறைந்த இந்திய அணி. "இவனுக எல்லாம்வேஸ்டுடா. சச்சின் டெண்டுல்கரை டீம்ல சேர்க்கணும்டா" என்று புலம்பினான் என்நண்பன் அன்பரசன். அப்போதுதான் முதன் முறையாக சச்சின் டெண்டுல்கரை பற்றிக்கேள்விப்பட்டேன்.

1989ம் ஆண்டு பாக்கிஸ்தான் டூருக்கு முந்தைய இரானிக் கோப்பை பந்தயத்தில் டெல்லிஅணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதின.இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ரெஸ்ட்ஆப் இந்தியா அணி வெற்றி பெற 555 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. டெண்டுல்கர்மட்டுமே சிறப்பாக விளையாட மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்து விட்டன. மத்திய வரிசை ஆட்டக்காரரான குர்சரன்சிங்கிற்கு கை ஒடிந்து போனதால் ஆட இயலாத
நிலைமை. டெண்டுல்கர் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற அனைத்து
ஆட்டக்காரர்களும் அவுட்டாகி விட்டனர். இந்நிலையில் ஒடிந்தகையுடனும் ஆட வந்தார் குர்சரன்சிங். அவருடன் இணைந்து விளையாடி சதம் அடித்தார் டெண்டுல்கர்.சச்சின் சதமடித்தவுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டு, டெல்லி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு இளம் ஆட்டக்காரரின் சதத்திற்காக, உடைந்த கையுடன்ஆடிய குர்சரன்சிங்கின் பரந்த மனப்பான்மையும், மன உறுதியும் மெச்சத்தகுந்த செயல்.

துரதிர்க்ஷடவசமாக குர்சரன் சர்வதேச அள்வில் சிறந்த ஆட்டக்காரராக
சோபிக்கவில்லை.சச்சினின் இரானிக்கோப்பை சதம் அவருக்கு பாகிஸ்தான் செல்லும் அணியில் இடம்பெற்றுத் தந்தது. இம்ரான், அக்ரம், ஜாபர், வக்கார். அக்விப் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் நிறைந்த அணியை அவர்கள் மண்ணிலேயே சந்திக்கும் மிகப்பெரிய சவாலை இந்தியா திறம்பட எதிர் கொண்டது. சஞ்சய் மஞ்ரேக்கரும், சித்துவும்சிறப்பாக விளையாடிய தொடரில், சச்சின் பேட் செய்த விதம் அனைவரின்கவனத்தையும் ஈர்த்தது. வக்காரின் பந்து மூக்கை பதம் பார்த்து ரத்தம் வரச்செய்ய, கலங்காமல் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய துணிச்சல் ஒரு புதிய
புயலின் வரவை உலகிற்கு உணர்த்தியது.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் "சச்சின் சிறந்த டெஸ்ட்ஆட்டக்காரர். அவரை ஒருநாள் போட்டியில் விளையாடச் சொல்லி வீண்டிக்கக் கூடாது"என்ற கருத்தே நிலவி வந்தது. ஆர். மோகனும் ஹிந்து பத்திரிக்கையில் இக்கருத்தைவலியுறுத்தியே எழுதியிருந்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற முதலாவது ஒருநாள்போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. அதிர்க்ஷ்டவசமாக மழையினால்முழுமையான ஆட்டம் ஆட இயலவில்லை. சர்வதேச போட்டிகளின் கணக்கில் சேராத 20 ஓவர் மேட்ச் விளையாட முடிவு செய்தார்கள். சச்சின் அணியில் சேர்க்கப்பட்டார்.

பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. பதிலளித்த இந்தியா மிகவும் சிரமப்பட்டு ஆடியது. ஸ்ரீகாந்த் இந்த தொடரில் படுமோசமாக விளையாடினார். இப்போட்டியில் ஓப்பனராக வராமல் இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்தபின் ஆட வந்தார்.பந்தை அடிக்க முடியாமல் தடவிக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் ஆடவந்தார்சச்சின். பந்து வீசியவர் லெக் ஸ்பின் ஜாம்பவான் காதிர். காதிரின் ஒரு ஓவரில் நான்கு
சிக்ஸர்கள் ( 19வது ஓவர்), ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு. இந்த மேட்சை பார்த்த நான்கொடுத்து வைத்தவன் என்பது என் கருத்து. சச்சினின் விளாசும் திறமை தெரிந்தபின்நிறைய விளாசல்களை பார்த்திருக்கிறேன். இந்த மேட்சின் ஆட்டம், எதிர்பாராத ஆச்சர்யம்,சந்தோசம் எல்லாம் கலந்த உணர்வை ஏற்படுத்தியது. 18 பந்துகளில் எடுத்த 53 ரன்கள், சச்சின் ஒருநாள் போட்டியில் ஆடக்கூடாது என்று கூறிய அனைத்து விமர்சகர்களின் பேனாக்களையும் மூடிவிட்டது.இதனை அடுத்து ஆடிய அவரது முதல்சர்வதேச போட்டியில் எடுத்த ரன்கள் எத்தனை தெரியுமா? பூஜ்யம்.

இதன் பின் இந்தப் புயல் வலுப்பெற்று பல கண்டங்களை கடந்தது. எண்ணற்ற
விதங்களில் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. நிறைய வெற்றிக்கு உதவியதாலோ என்னவோ, பல வெற்றிகளை ரசிகர்கள் மறந்து விட்டனர்.டெண்டுல்கரின் மன உறுதியும், முதிர்ச்சியும் இளம் வயதில் பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவின. நியுசிலாந்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் அசாருதின் அவுட்டாக காரணமாக அமைந்து , அசாரிடமிருந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை பெற்றார். முகமெல்லாம்கலங்கிப் போன சச்சினை பூஸ்ட் பார்ட்னர் கபில் சமாதானப்படுத்தினார். அடுத்த ஒவரிலேயே ஹாட்லியை இரண்டு பவுண்டரிகள் விளாசினார். சச்சின் எடுத்தது 39 ரன்கள் என நினைக்கிறேன். ஒரு ரன்னில் வெற்றி பெற்ற இந்த மேட்சிற்கு சச்சின் எடுத்த ரன்கள் உதவின.

வினோத் கம்ப்ளி அணியில் சேர்க்கப்பட்ட பின், கம்ப்ளியின் ஆரம்பகால ரன்குவிப்புக்கள் சச்சினிற்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தின. இத்தருணத்தில்சச்சினின் ரன்குவிப்பு மட்டுப்பட்டிருந்தது. சச்சினிற்கு முன்னதாகவே ஒருநாள்போட்டியில் சதமெடுத்தார் கம்ப்ளி. ஹீரோக் கோப்பையின் போது, சச்சின் முழுமையான பார்மில் இல்லை.அரையிறுதி ஆட்டத்தில் சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான சச்சின்வீசிய கடைசி ஓவரும், பெற்றுத் தந்த வெற்றியும் சச்சினின் தன்னம்பிக்கையை கூட்டியது. ஹீரோக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கபிலுடன் சேர்ந்து மீண்டும்ரன்கள் குவித்தார் சச்சின்.

தொழில்நுட்பத்தின்உதவியுடன்கிரிக்கெட் ஆடப்படும்காலக்கட்டத்தில்
விளையடுபவர்சச்சின். பேட்ஸ்மேன்களின் பலவீனங்கள் பல்வேறு கோணங்களில்அலசப்பட்டு உத்திகள் வகுக்கப்படுகிறது.தனக்கெதிரான உத்திகளை சிறப்பாக கையாண்டு ,தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க அசாத்திய திறமை வேண்டும்,சச்சின்தன்னுடைய ஆட்டத்தில்அதற்கான மாறுதலை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.கடந்த இரண்டு வருடங்களாக கவரில் அடித்து ஆடும் ஆட்டத்தை தவிர்த்து வருகிறார்.இது அவரது ஆட்டத்தின் கவர்ச்சியை சற்று குறைத்து விட்டது. அவ்வப்போது கவரில்விளையாட செய்த சில முயற்சிகள் கூட ஆட்டம் இழக்க காரணமாய் அமைந்து விட்டது.சச்சின் இதனை விரைவில் சரிசெய்து விடுவார் என நம்புகிறேன். 1992ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது லெக்கட்டரில் அவுட்டாகிக் கொண்டிருந்தார். இயான்
போத்தமும், அம்ப்ரோசும் அவரை லெக்கட்டரில் அவுட்டாக்கினார்கள். சிலகாலம் முன்பு சார்ட் பைன்லெக்கில் ஒரு தடுப்பாளரை நிற்கவைத்து கேட்ச் பிடித்தார்கள் ( சென்ற உலகக் கோப்பை- கென்யா மேட்ச்). இச்சிக்கல்களை பின்பு சரி செய்துவிட்டார்சச்சின்.

சச்சின் ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் "வெளியே தெரியாத பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்தும் நான் போராடி வருகிறேன்" என்று கூறியுள்ளார். உண்மைதான். காயங்களிலிருந்து இன்னும் முழுமையாக குணமாகவில்லை சச்சின்.அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து முழுவதும் தொடர்பற்றிருப்பதும் ஆபத்தான விசயம், எனவேதான் "Calculated Risk" எடுத்து ஆடி வருகிறார் சச்சின் என நினைக்கிறேன்.அவர் எடுக்கும் ரன்களின் பின்னால் கைத்தட்டும் நமக்கெல்லாம்தெரியாத வலியிருக்கிறது. இதையேதான் லாரா இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்தியத்தீவில் நடந்த தொடரில் செய்தார் ( ஸ்ரீலங்காவில் அவரது மணிக்கட்டு உடைந்து போனது).

சினிமா எனது சுவாசம் என்றார் கமல்ஹாசன். சச்சினின் சுவாசம் கிரிக்கெட். அவரது மற்றொரு சாதனை மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தாலும் திறமை இருந்தால் உலக அளவில் பிரகாசிக்கலாம் என்பது. சச்சினிற்குப் பின் நிறைய நடுத்தரக் குடும்பத்துகிரிக்கெட் வீரர்கள் கண்டிப்பாக உருவாயிருக்கிறார்கள்.

இனி வரும் தொடர்கள் சச்சினின் எதிர்கால திட்டங்களை முடிவு செய்யும். தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு சச்சின் ஒருநாள் பந்தயங்களை குறைத்துக் கொள்ளலாம்.சச்சின் செய்யமாட்டார். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோள் அவரை செய்யவிடாது.

சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்றெல்லாம் போதிக்கும் எண்ணம் எனக்கில்லை. அவர்பூரண உடல் பலத்துடன் நன்றாக கிரிக்கெட் விளையாடி ,வெற்றிகளை ஈட்டுத்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்



Thursday, December 09, 2004

ஓடாத கடிகாரங்கள்

நின்றுபோன
சுவர் கடிகாரங்களின்
தெளிவிக்கப்படாத மூர்ச்சை
தெரிவிக்கிறது பல விடயங்களை

சாவி முடுக்கி
பராமரித்த தாத்தா
பரமனடி சேர்ந்ததை

ஒரே பையன்
அமெரிக்கா போன்பின்
உயர ஏறி சாவி கொடுக்க
ஆற்றலற்றுப் போன
பெற்றோரின் தனிமையை.

கல்யாணப் பரிசாக வந்த
கடிகாரத்தின்
பேட்ரி மாற்ற
பணம் பற்றாத
மாத இறுதி எதார்த்தங்களை.

மணிக்கொரு முறை அலறி
குழந்தையின் தூக்கம் கெடுப்பதை தவிர்க்க
வலுக்கட்டாயமாகவும் நிறுத்தப்பட்டிருக்கக்கூடும்
சிலவீடுகளில்.

ஓடும் கடிகாரங்கள்
நேரத்தை உணர்த்த..
ஒடாத கடிகாரங்கள்
மெளனமாய் உணர்த்துவதோ
குடும்பத்தின்
நிகழ்வுகளை.

Saturday, December 04, 2004

விற்பனைக்கு ரெடி

ஹிந்து பத்திரிக்கையிலும் , பிசினஸ் லைன் பத்திரிக்கையிலும் ஐ பி எம் நிறுவனம் தன்னுடைய கணினி தயாரிக்கும் பிரிவை ( சர்வர்கள் தவிர) விற்க முன் வந்திருக்கும் செய்தியை கட்டம்கட்டி வெளியிட்டுள்ளார்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

கணினி தயாரிக்கும் துறையில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் ஐ பி எம். கணினி உற்பத்தியில் பல ஆண்டுகளாக கோலோச்சியவர்கள். இடையில் வியாபார சரிவை சந்திக்க நேரிட்டாலும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்தவர்கள். இதற்கு உதவியாக அமைந்தது கணினி சார்ந்த சேவைகளை வழங்குவதில் அவர்கள் கவனம் செலுத்த தொடங்கியதுதான். ஐ பி எம்மின் சேவைத்துறை பன்மடங்கு வளர்ச்சி பெற்று அதிக லாபமீட்டும் துறையாக உருப்பெற்றது. கணினி விற்பனை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சேவைப்பிரிவு, தனிப் பெரும் லாபகரமான தொழிலாக உருப்பெற்றது. "Identifying and Exploiting opportunities" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதற்கான சிறந்த உதாரணமாக ஐ பி எம்மின் சேவைத் துறை முயற்சியை சொல்லலாம்.

புள்ளியில் ஆரம்பித்து கோலமாய் உயர்ந்த முயற்சிகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் துணி உற்பத்தி துறையில் ஆரம்பித்து( ஒன்லி விமல்- கவுதமியை வைத்து 90 களின் துவக்கத்தில் சிறப்பாக விளம்பரங்கள் வெளியிட்டார்கள்- ஞாபகம் இருக்கா?) , பின்ஒருங்கிணப்பு முறையில் ( தான் விற்கின்ற பொருளின் மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்வது) சிந்தடிக், பெட்ரோலியம் என்றெல்லாம் புதிய தொழில் துவக்கி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக வலுப்பெற்றது. விமல் பிராண்டிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை தற்போது பலர் மறந்திருக்க கூடும்.

இன்றைய நிலையில்கணினி தயாரிப்பது என்பது அறிவுசார்ந்த தொழிலாக இல்லாமல் உற்பத்தி தொழிலாக மாறிவிட்டது. இதில் எவ்வாறு உற்பத்திறன் அதிகரிக்கப்படுகிறது என்ற அடிப்படையிலேயே வெற்றியாளர்கள்நிர்ணயிக்கப் படுகிறார்கள். லாப விகிதங்கள் குறைந்து வரும் இத்துறையில் போட்டிபோடிவதை விட, லாபம் அதிகம் கிடைக்கும் அறிவுசார்ந்த தகவல் தொழில்நுட்பத்துறையில் கவனம் செலுத்த முடிவு செய்து விட்டார்கள். சைனா நிறுவனம் ஒன்று ஐபிஎம்மின் கணினிப் பிரிவை வாங்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவிலும் இதைப்போன்ற வியாபார மாற்றங்கள் நிகழும் என நினைக்கிறேன். விப்ரோவின் கணினி தயாரிக்கும் தொழிலை பிரேம்ஜி விரைவில் விற்கக்கூடும் என நம்புகிறேன். விப்ரோ இன்போசிஸ், டிசி எஸ் போன்ற சேவை நிறுவனங்களுடன் போட்டி போடும் போது, கணினி தயாரிப்புத் தொழில் மட்டும் தனிப்பட்டு நிற்கிறது. மேலும் இத்தொழில் அவர்கள் முண்ணனி நிலையிலும் இல்லை. ஹச் சி எல் நிறுவனம் கணினிகள் விற்பதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இன்னும் சவால் விட்டு வருகிறது.

ஐ பி எம் மிம் இந்த முடிவுக்கு வேறு காரணங்கள் உள்ளதா? சக வலை நண்பர்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்